Monday, 27 November 2017

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்!


உலக அளவில் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதில் கருத்து வேறு பாடுகள்  யாருக்கும் இருக்க முடியாது.

கடைசியாக எகிப்து, அல்ரவ்டா  பள்ளிவாசல் மேல் தொடுக்கப்பட்ட கொடூரத் தாக்குதல் மிகவும் மனிதாபிமான மற்ற தாக்குதல் என்று நாம் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அதனைக் கேட்கத்தான் ஆளில்லை.

எல்லா மதங்களிலும் பிரிவினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிரிவினைகளை இந்த அளவுக்கு -  பள்ளிவாசல்களை குண்டு வைத்துத் தகர்க்கும் அளவுக்கு , மக்களைக் கொல்லும் அளவுக்கு  - வெறுப்பது - என்பது மிகவும் கொடூரம். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 305 மேற்பட்ட மக்கள் பள்ளிவாசலின் தொழுகையின் போது கொல்லப்பட்டிருக்கின்றனர். அதில் 27 பேர் சிறுவர்கள். இன்னும் 128 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சம்பந்தப் பட்டிருக்கின்றனர் என்பதாகச்   செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் ஒரு புறம் இருக்க சம்பந்தப்பட்ட குடும்பங்களில் பாதிப்புக்கள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. தந்தைகளை இழந்த குடும்பங்கள், மகன்களை இழந்த பெற்றோர்கள், கணவர்களை இழந்த பெண்கள் -  இந்தக் குடும்பங்கள் எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போகின்றனர்? பிரச்சனைகள் இல்லாதக் குடும்பங்களே இல்லை. அதிலும் குறிப்பாக பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாதக் குடும்பங்களை எங்கே பார்ப்பது? இந்த நிலையில் அந்தக் குடும்பங்களின் நிலை என்ன? யார் அவர்களைக் காப்பாற்றுவார்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பது சிரமம். பயங்கரவாதிகளை யார் யோசிக்க வைப்பது? அவர்களும் ஏழ்மை நிலையில் இருந்து பணத்துக்காக பயங்கரவாதிகளாக மாறியவர்கள். இங்கு ச்மயம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. பணத்துக்காகத் தான் இந்த வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இதனைத் தொடர விடக் கூடாது என்பது தான் அனைவரின் பிரார்த்தனையும். ஒழிக்கப்படும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்!


No comments:

Post a Comment