Saturday, 25 November 2017

நான் ஒரு முட்டாளுங்க...!


"நான் ஒரு முட்டாளுங்க!" என்னும்  பாடல்  ஒரு காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம். அந்தப் பாடலைப் பாடியவர் பிரபலப் பாடகர், நடிகர் ஜே.பி.சந்திரபாபு. அந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாகவும் சிலக் கருத்துக்களைச் சொல்லும் பாடலாகவும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அந்தக் காலக் கட்டத்தில்  சந்திரபாபு நகைச்சுவை நடிகராகவும் பாடகராகவும்  மிகவும் பிரபலம்.

ஆனால் இந்தப் பாடல் பட்டித்தொட்டிகளிலெல்லாம் ஒலிக்க ஆரம்பித்த போது வேறு ஒரு தாக்கத்தையும் இந்தப்பாடல் ஏற்படுத்தியது. பொதுவாக அவரது ரசிகர்கள்  அவரை ஒரு முட்டாளாகவே நினைத்தனர்! காரணம் சொந்த வாழ்க்கையில், அந்த நேரத்தில் வெற்றிகரமாக நடிகராக இருந்தும் கூட, அவர் பல  தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். முற்றிலுமாகக் குடிபோதையில் தன்னையே அழித்துக் கொண்டார். தான் ஒரு முட்டாள் என்பதாகவே அவரும் நினைக்க ஆரம்பித்து விட்டார். அப்படியே ஒரு முட்டாளாகவே அவரது கடைசி காலம் அமைந்து விட்டது.

அதனால் தான் நாம் எந்தக் காலத்திலும் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். 

நம்மைப் பற்றி நமக்கு உயர்ந்த அபிப்பிராயம் இருக்க வேண்டும். நான் ஒரு முட்டாள், நான் ஒரு மடையன், நான் கையாளாகதவன் என்றெல்லாம் நம் மனதிலே ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும். நாம் அப்படியொரு எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நான் கெட்டிக்காரன், நான் திறமைசாலி என்பதாகத்தான் நமது எண்ணங்கள் இருக்க வேண்டும். மிக முக்கியம். நான் வெற்றியாளன் என்னும் எண்ணம் மிக ஆழமாக மனத்தில் பதிய வைக்க வேண்டும். கையில் பணம் இல்லாவிட்டாலும் 'அது தற்காலிகம்' என்று சொல்லிவிட்டு மீண்டும் நமது எண்ணங்களை வெற்றியை நோக்கிய பயணமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

ஜே.பி. சந்திரபாபு ஒரு முட்டாள் அல்ல.  ஆனால் அப்படி ஒரு  எண்ணத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அவரைச் சுற்றி இருந்தவர்களும் அதனை வளர்த்து விட்டனர்.  நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை முட்டாள் என்று சொன்னாலும், மடையன் என்று சொன்னாலும் எந்த எதிர்மறை வாசகங்களை நம் மீது திணித்தாலும் - நாம் மட்டும் - அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அது தான் - அந்த ஒன்று தான் - வாழ்க்கையில் நம்மை உயர்த்தும். மனத்தைப் பாறையாக்கிக் கொள்ள வேண்டும். நாம்  நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அது தான் நாம்.  மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பவை அது  அவர்களுடைய பார்வை. அதற்கு நாம் பொறுப்பு அல்ல.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும், என்ன எண்ணம் கொண்டிருந்தாலும், நம்மைப் பற்றிய நமது உயர்வான எண்ணத்தை எக்காரணத்தைக் கொண்டும் நாம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது!

நம்மை நாம் உயர்த்துவோம்! மற்றவரையும் நாம் உயர்த்துவோம்!! 

1 comment:

  1. நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள்.ஒவ்வொருவறும் வெற்றியாளர்களே. நன்றி

    ReplyDelete