Monday 31 October 2016

கேள்வி - பதில் (33)


கேள்வி

ஜெயலலிதா - கருணாநிதி உடல் சுகவீனத்திற்கு பில்லி சூனியம் தான் காரணம் என்று இப்போது புதிதாக செய்திகள் வெளியாகின்றனவே! இப்படியும் நடக்குமா?

பதில்

அரசியல்வாதிகள் எதனையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியிருப்பவர்  ஒரு ஜோதிடர் என்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஜெயலலிதாவுக்கும் ஜோதிடர்களுக்கும் உள்ள தொடர்பை தமிழகமே அறியும். அதில் ஏதும் ரகசியம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் செய்கின்ற ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஜோதிடர்களின் அறிவுரைப்படி தான் நடக்கின்றன என்பதை ஊரறியும்.

அவரை ஆட்சியில் அமரவைத்த அவருடைய ஜோதிடர்கள் இந்த உடல் சுகவீனத்தைப் பற்றி ஏன் அவரிடம் சொல்லவில்லை? ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? ஏன் அவருக்குத் தெரிவிக்கவில்லை?

ஜெயலலிதா கடவுளை நம்பினாரோ,  நம்பவில்லையோ ஆனால் அவர் ஜோதிடர்களை அளவுக்கு அதிகமாகவே நம்பினார்!  அரசியலை முன் அறிந்த ஜோதிடர்கள் அவருடைய உடல்சுகவீனத்தை ஏன் முன்னறியவில்லை? இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் பதில் தான் இல்லை! நம்மிடம் உள்ள ஒரே பதில்: காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையைத்தான் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

ஜோதிடர்கள் அரசியலைக் கணிக்கலாம் ஆனால் அவர்களால் உடல்நலனைக் கணித்து அறிய முடியாது என்பதைத்  தான் இது காட்டுகிறது! அல்லது போகிற போக்கில் இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம்: ஜோதிடர்கள் தான் அவரிடம் நெருக்கம் உள்ளவர்கள். பலம், பலவீனம் அறிந்தவர்கள். ஏன் அவர்களிலே ஒருவர் இதனைச் செய்திருக்கக் கூடாது?

கருணாநிதிக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்லை. அவர் பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாதவர். ஜோதிடரையோ, ஜோதிடத்தையோ நம்பாதவர்! வயதின் காரணமாக சில உபாதைகள் வரும் என்பதை அவர் உணர்ந்தவர். அதனால் அவர் இதனையும் ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்வார்!

நாம் சொல்ல வருவதெல்லாம் ஒன்று தான். இப்போது ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு வருகிறார்கள். அதுவும் அவர்கள்,  தாங்கள்  சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்களை நம்புங்கள். இதுவே ஒரு சராசரி ஏழைப் பெண்ணாக இருந்தால் ஏதோ ஒரு கோயிலுக்குப் போய், பூசாரி கொடுத்த திருநீற்றை நெற்றியில் பூசிக்கொண்டு வருவார்.  அடுத்த நாளே அவர் குணமாகிவிடுவார்! பணக்காரர்களுக்கு ஏற்படும் நோய் கொஞ்சம் இழுத்துப் பறித்துக்கொண்டு தான் இருக்கும்! அதுவும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நோய் மருத்துவர்களிடமும் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டிருக்கும்!

ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் பெறுவார்.  மீண்டும் தனது பணிகளைத் தொடர நாமும் இறைவனை இறைஞ்சுவோம்!

No comments:

Post a Comment