Thursday, 14 September 2017

கேள்வி - பதில் (61)


கேள்வி

கமல்ஹாசன் தனிகட்சி தொடங்குகிறாராமே? 

பதில்

தொடங்கட்டுமே!  வாழ்த்துக்கள்! வேறு என்ன சொல்ல? தமிழகமே சினிமாவில் தான் தங்களது முதலமைச்சரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அப்படி என்றால் அந்த முதலமைச்சர் கமலாக இருக்கட்டுமே!

கடந்த 50 ஆண்டுகளாக சினிமா சம்பந்தப்பட்டவர்களே தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இதுவரை அது திருடர்கள் ஆட்சியாகத்தான் இருந்து வந்திருக்கிறது.  இனி  தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி வேண்டுமானால் அது இன்னொரு சினிமாக் காரனால் தான் கொண்டுவர முடியும். அது கமல்ஹாசனாக இருக்கலாம் அல்லது ரஜினியாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டுமே! நமக்குத் தேவை எல்லாம் நல்லதொரு ஆட்சி.

ஒரு விஷயம் கமலிடம் எனக்குப் பிடித்திருக்கிறது. அரசியலை விமர்சனம் செய்தார். எதிர்த்தார்கள். அரசியலுக்கு வருவேன் என்றார். சிரித்தார்கள்.  இப்போது கட்சி தொடங்குவேன் என்கிறார்.  முகம் சுளிக்கிறார்கள்!  வழ, வழ, குழ, குழ என்று ஒன்றுமில்லை. முடிவெடுத்து விட்டார்; வருகிறேன் என்கிறார். வரட்டும். வெற்றியா, தோல்வியா என்பது பற்றி அவர் கவலைப்பட வில்லை. அவர் நிறைய தோல்விகளைச்  சந்தித்தவர்.  நல்லதொரு ஆட்சியை தன்னால்  கொடுக்க முடியும் என்கிறார். கொடுக்கட்டுமே! நாம் வரவேற்போம்! அவர் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் அவர் நல்லவர் தான். எப்படி? தனது வருமானவரியை எந்தப் பிரச்சனையுமின்றி வருடா வருடம் ஒழுங்காகக் கட்டி வருகிறார். இது ஒன்றே போதும். அவர் இந்தத் தேசத்தை நேசிக்கிறார்; தமிழ் நாட்டை நேசிக்கிறார் என்பதற்கு அடையாளம்.


ஒரு வார்த்தை கமலுக்குச் சொல்லலாம். அவர் தனது கட்சிக்கு "திராவிடம்" என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டாம். திராவிடன் என்றாலே அது திருடர்களைக் குறிக்கிறது. அவர் ஒரு பேட்டியில் திராவிடன் என்ற சொல் பழைய தமிழ்         இலக்கியங்களில் உள்ள ஒரு சொல் என்கிறார். இருந்துவிட்டுப் போகட்டும். நவீனத் தமிழில் அது திருடர்களைக் குறிக்கிறது.  அதனால் அந்தச் சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்.

புதிய கட்சி என்பது  ஏதோ தீடீரென அவர் எடுத்த முடிவாக நான் நினைக்கவில்லை.  நீண்ட நாள் மனதிலே கனன்று கொண்டிருந்த ஒரு நெருப்பு அது. இப்போது தான் காலம் கனிந்திருக்கிறது. நேரம் காலம் கூடி வந்திருக்கிறது

நல்லதே நடக்கட்டும்! நாடு செழிக்கட்டும்!


No comments:

Post a Comment