Wednesday 28 February 2018

ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி!


சமீபத்தில் பண்டார் செண்டாயான் அன்று அழைக்கப்படும் - சிரம்பான் மூன்று என்றும் சொல்லுவார்கள் - சிரம்பான் நகர்  அருகே   ஒரு புதியத் தமிழ்ப்பள்ளியை நமது பிரதமர் திறந்து வைத்திருக்கிறார்.

நல்ல நவீன வசதிகளுடன், உலகத் தரத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி என்று கூறப்படுகிறது. நல்லதொரு  தமிழ்ப்பள்ளியை அமைத்துக் கொடுத்ததற்காக அரசாங்கத்தைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம்.

செண்டயான் என்கின்ற போது இயற்கையாகவே என்னுடைய பழைய ஞாபங்கள் கிளர்ந்து எழுகின்றன. காரணம் எனது தமிழ்க்கல்வி என்பது செண்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பித்தது. நான் படித்து போது அங்கு மூன்று வகுப்புக்களே இருந்தன.  முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு - அதற்கு மேல் படிக்க வேறொரு தோட்டத்திற்குச் செல்ல வேண்டும். அந்த மூன்று வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர்.  அவர் பெயர்  திரு அனுக்கிரகம். அவர் தான் என் முதலாசிரியர், இப்போது அவர் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து வந்தவர், மிகவும் அன்பான மனிதர். அவரிடம் தான் எனது மூன்றாம் வகுப்பு வரை முடித்தேன். இப்போது, நான் படித்த அந்தத் தமிழ்ப்பள்ளி,  தமிழ்ப்பள்ளியாக இல்லை. சீனப்பள்ளியாக மாற்றம் கண்டு விட்டது! ஏதோ புண்ணியவானான ஒரு தலைமையாசிரியர் அதனைச் சீனர்களுக்குத் தானம் செய்துவிட்டார்.

இப்போது அந்த செண்டயானைச் சுற்றி பல செண்டயான்கள்  இருக்கின்றன. இப்போது கடைசியாக பண்டார் செண்டயானும் அதில்  அடங்கும்.

இப்போது பிரதமர் திறந்து வைத்திருக்கும் ஸ்ரீ செண்டயான் தமிழ்ப்பள்ளிக்கும் நான் படித்த செண்டயான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இந்தப் பள்ளி  முன்பு  நெகிரிசெம்பிலான், லிங்கி அருகே அமைந்துள்ள  பெர்த்தாம் தோட்டத்தில்  நீண்ட காலமாக இயங்கி வந்த பெர்த்தாம் தோட்டத்  தமிழ்ப்பள்ளி ஆகும்.  தோட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றத்திற்குப் பின்  மாணவர் பாற்றாக்குறையிலிருந்து இந்தப் பள்ளியும் தப்பவில்லை. அந்தப்  பள்ளியைத்தான் சென்ற ஆண்டு பண்டார்  செண்டயானுக்கு இந்தப்  பள்ளி  மாற்றப்பட்டது. எனது  ஞாபக சக்தி  சரியாக  இருந்தால் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கு.பத்மனாபன் படித்த தமிழ்ப்பள்ளி இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.  என்னால் உறுதிப் படுத்த முடியவில்லை.

எது எப்படி இருப்பினும் நல்லதொரு தமிழ்ப்பள்ளியை அதுவும் உலகத் தரத்திற்கு ஏற்ப அமைந்த ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்டிக்கொடுத்த அரசாங்கத்திற்கும் நமது பிரதமருக்கும், நமது நெகிரி செம்பிலான் மாநில முதல்வருக்கும் நமது வாழ்த்துகள்!

பண்டார் பாரு செண்டயான்  சுற்றுவட்டார இந்தியப் பெருமக்கள் வருங்காலங்களில்   இந்தப் பள்ளிக்கு வற்றாத ஆதரவு தருவர் என எதிர் பார்க்கலாம்.

நன்றி!


No comments:

Post a Comment