Tuesday 6 February 2018

குளிர்ந்து போகுதில்ல!


சில சமயங்களில் சில வார்த்தைகள் நம் மனதைக் குளிர வைத்து விடுகின்றன என்பது உண்மையிலும் உண்மை. அது அசட்டுத் தனமாகக் கூட இருக்கலாம்!  ஆனால் என்ன செய்வது? மனம் விரும்புகிறதே!

நேற்று ஒரு மலாய் நண்பர் என்னைப் பார்த்து "நீங்கள் பார்ப்பதற்கு அமிதாப்பச்சன் போல் இருக்கிறீர்கள்!" என்று ஒரு வார்த்தையைச் சொன்னார்! அடாடா! உச்சிக் குளிர்ந்து விட்டது! இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. ஏற்கனவே சில மலாய் இளைஞர்கள் என்னை "அங்கள் பச்சான்"  என்பார்கள்! அவர்கள் இந்திப் படங்களைப் பார்ப்பவர்கள். அதனால் அவர்கள் கண்களுக்கு நான் அப்படித்தான் இருப்பேன் போலிருக்கிறது! நான் அமிதாப்பச்சன் நடித்த படங்களைப் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் ஏதோ அவருடைய ஓரிரு காட்சிகளைப் பார்த்திருப்பேன். அவ்வளவு தான். மற்றபடி அவருடைய உருவத்தை சினிமா செய்திகளில் பார்ப்பதோடு சரி.

இந்த 'உலகில் ஏழு பேரில் ஒருவரில்' வேறு ஒரு விஷேசமும் இருக்கிறது.  முன்பு நான் தோட்டப்புறத்தில் வேலை செய்து வந்த காலம் அது.  ம.இ.கா. வின் டாக்டர் மாரிமுத்து அவர்கள் அப்போது நாடாளுமன்ற  உறுப்பினராக இருந்தார். அப்போதும் என்னைப் பார்த்தவுடன் ஒரு சிலருக்கு "அவரா, இவர்!" என்கின்ற ஒரு பார்வை இருக்கும்! ஒரு முறை அம்னோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தீடீரென ரத்து செய்ய வேண்டிய ஒரு சூழல். டாகடரால் கலந்து கொள்ள முடியவில்லை.  இந்தச் செய்தியைச் சொல்ல அங்குள்ள ம.இ.கா. தலைவர் என்னையும் கூட்டிக் கொண்டு அந்த இடத்துக்குச் சென்றார். அந்தக் கூட்டத்தினர் என்னைப் பார்த்ததும் உடனே 'மேள தாளங்களை' முழங்க தயாராகினர்! உடனே என் நண்பர் ஓடிப் போய் 'இவர் அவரல்ல!'  என்று சொல்லி டாக்டரால் கலந்து கொள்ள இயலவில்லை என்று வருத்தம் தெரிவித்துவிட்டு வந்தார்!

இந்த இருவரில் யாரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டால் இருவரையுமே அல்ல!  தாடி வைத்த தாகூரைத் தான் நான்  விரும்புகிறேன்!

ஆனாலும் சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் நமக்கு முட்டாள் தனமான மகிழ்ச்சியைக் கொடுக்கத்தான் செய்கின்றன!

No comments:

Post a Comment