Wednesday, 20 June 2018
இது சரியில்லையே....!
ஜனநாயக செயல் கட்சியைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் ஒரு செய்தி நிச்சயாமாக வரும். அது சீனர்கள் கட்சி. சீனர்கள் நலனில் அக்கறையுள்ள கட்சி என்கிற பேச்சு வரத்தான் செய்யும். சரியோ, தவறோ அது தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. இனி மேலும் வரத்தான் செய்யும்! அந்த 'சீன' அடையாளத்தை அதன் தலைவர்கள் எந்தக் காலத்திலும் விடப் போவதில்லை!
சமீபத்தில் ஜ.செ.க.அரசியல் வியூகப் பிரிவுத் தலைவர் லியு சின் தொங், பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் பதவியில் நீடிக்க வேண்டுமானால் அடிமட்டத்தில் இருக்கும் மலாய்க்காரர்களின் வாழ்க்கைத் தரம் உயர வழிவகைகளைக் காண வேண்டும் என்று வலியுறுத்திருக்கிறார்.
நமக்கு அதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் மலாய்க்காரர்களை விட இன்னும் அடிமடி மட்டத்தில் இருக்கும் இந்தியர்களைப் பற்றி அவர் எதனையும் குறிப்பிடவில்லை. அதனை அலட்சியம் சென்று சொல்லலாமா? அல்லது 'இந்தியர்கள் தானே' என்கிற இளக்காரம் காரணமா?
பொதுவாக சீனர்களிடம் இன்னும் அந்த அரசியல் முதிர்ச்சி வரவில்லை என்பது இவரைப் போன்ற மெத்த படித்தவர்களே சாட்சி! இந்தியர்களை ஒதுக்குகின்ற மனோபாவம் இன்னும் அவர்களிடையே இருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. சீனர்கள் பதவியில் இருக்க வேண்டும் என்றால் மலாய்க்காரர்களின் நலனில் அக்கறைக் காட்ட வேண்டும். இந்தியர்கள் பிரச்சனை இல்லை. இதோ! அதோ! என்று பாவலா காட்டிக் கொண்டே போகலாம் என்பது தான் சீனர்கள் நினைக்கின்றார்கள்!
ஜ.செ.க. ஒரு தவறான பாதையை வாழ்நாள் முழுவதும் காட்டிக் கொண்டே இருக்க முடியாது. திருந்த வேண்டும். இந்தியர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் என்பது உண்மை தான் என்றாலும் கடந்த தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு பக்காத்தான் பக்கம் பலமாக வீசியது என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் ஜனநாயக செயல் கட்சியும் ஆட்சியில் அமர முடிந்தது. இதனையெல்லாம் ஜ.செ.க. கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியர்களை ஒதுக்குகின்ற வேலையை விட வேண்டும்.
இப்போதைக்கு இது சரியில்லை!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment