Monday, 25 June 2018
உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள்!
நமது உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்களைப் பயன் படுத்த வேண்டும் என்கிற மனிதவள அமைச்சரின் அறிவிப்பு வெவ்வேறான எதிரொலிகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நமது உணவகங்கள் நீண்ட காலமாக அனுபவித்த வந்த சலுகைகள் அனைத்தும் போய்விடுமே என்னும் கோபம் தான் அவர்களில் குரல்களில் தொனிக்கிறதே தவிர மற்றபடி அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது!
காரணம் உணவகங்கள் இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் நல்ல வருமானத்தைப் பெற்றார்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். எப்படி?
இங்கு நான் உணவகங்கள் என்றால் இந்திய உணவகங்களைத் தான் சொல்லுகிறேன். தமிழ் நாட்டுத் தொழிலாளர்களைத் தான் சொல்லுகிறேன். காரணம் உள்ளூர் முதலாளிகளால் அடிபடுபவர்களில் இவர்கள் தான்அதிகம். ஏமாறும் தொழிலாளர்களில் இவர்கள் தான்அதிகம்.
பொதுவாக தமிழகத் தொழிலாளர்கள் என்றாலே உணவக உரிமயாளர்களுக்கு மிக மிக லாபம் சம்பாதித்துக் கொடுப்பவர்கள். பல முதலாளிகள் அவர்களுக்குச் சம்பளமே கொடுப்பதில்லை! கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பில்லை. ரௌடிகளின் துணையோடு தொழில் செய்பவர்கள்! வேலை செய்வதற்கு நேரங்காலம் இல்லை! எல்லா நேரமும் வேலை நேரம் தான்!
இப்படி ஒரு சூழலில் தொழில் செய்யும் உணவக உரிமையாளர்கள் நிச்சயமாக உள்ளூர் தொழிலாளர்களை விரும்ப மாட்டார்கள். எட்டு மணி நேர வேலை என்பதாகத்தான் தொழிலாளர் சட்டம் கூறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு தான் உணவகங்கள் இயங்க வேண்டும். அவர்களுக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க வேண்டும். இ.பி.எஃ, சோக்சோ, வார விடுமுறை, மருத்துவம் - இப்படிப் பல கட்டாயங்கள் முதலாளிகளுக்குண்டு. இவைகள் எல்லாம் இல்லாமல் தான் பல ஆண்டுகளை அவர்கள் அந்நியத் தொழிலாளார்களை வைத்துக் கொண்டு தொழில் செய்து கொள்ளை இலாபம் அடித்திருக்கின்றனர்! இப்போது மாறச் சொன்னால் மாறுவது எப்படி?
உள்ளூர் இளைஞர்கள் உணவகத் தொழிலைக் கேவலமாக நினைக்கிறார்கள் என்பதெல்லாம் இவர்களுடைய கற்பனை. இவர்களே இவர்களுடைய தொழிலுக்கு மரியாதைக் கொடுக்காத போது தொழிலாளர்கள் எப்படி மரியாதைக் கொடுப்பார்கள்? தொழில் மீது மரியாதை இல்லாததினால் தானே சட்டத்திற்கு புறம்பாக வெளியூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்! அது எப்படி முடிகிறது? அதிக வேலை, குறைவான சம்பளம் என்பது தானே அவர்களது குறிக்கோள்?
நமது நாட்டு சட்டங்களை மதித்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி உணவகத் தொழிலைச் செய்தால் எந்த வெளி நாட்டுத் தொழிலாளர்களும் நமது நாட்டிற்குத் தேவை இலலை!
மனிதவள அமைச்சர் சொன்னதைச் செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment