Saturday 23 December 2017

கேள்வி - பதில் (70)


கேள்வி

வைகைப்புயல் வடிவேலுவின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டதா?

பதில்

எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும். வைகைப்புயலுக்கும் நேரம் வந்து விட்டது  என்று தான்  சொல்லத் தோன்றுகிறது!

இனி நடித்துத் தான் தனது பிழைப்பை நடத்த வேண்டும் என்னும் நிலையில் அவர் இல்லை. அதனையெல்லாம் தாண்டி அவர் வந்து விட்டார். இப்போது அவர் கடைசியாக நடித்த படம் கூட அவருடைய ஒத்துழைப்பு இல்லாமையால்  கைவிடப்பட்டது! ஆக, இப்போது அவருக்குப் பணம் ஒரு பொருட்டல்ல! கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது:" கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன்!"   இப்போது அவருக்குச் சோறு போட்ட    சினிமா எஜமானன் அல்ல! அவர் தான் சினிமாவுக்கு எஜமானன் என அவர் நினைக்கிறார்! விட்டுத் தள்ளுங்கள்! அவரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வேண்டாம்.

ஆனால் நகைச்சுவையைப் பொறுத்தவரையில் அவருடைய நடிப்புக்கு ஈடு இணை இல்லை! கவுண்டமணி- செந்தில் ஜோடிக்குப் பின்னர் தமிழ்ச் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கியவர் வடிவேலு! அப்போது அவருடைய உடல்வாகும் அவருக்கு ஏற்றதாக இருந்தது. இடையே ஒரு சில ஆண்டுகள் ஜெயலலிதாவால் சினிமாவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டார்! அதன் பின்னர் அவரின் நடிப்பில் அந்த பழைய நகைச்சுவையைக் கொண்டு வர முடியவில்லை! நம்மாலும் அவரை  ரசிக்க முடியவில்லை! அதன் பின்னர்  அவர் நடித்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் பேசப்படவில்லை!

வடிவேலுவின் நடிப்பு என்பது ஒரு தனி பாணி. யாருடனும் ஒப்பிட முடியவில்லை! மதுரைத் தமிழ் அத்தோடு ஒரு கிராமத்துப் பாணி நடிப்பு என்று சொல்லலாம்.  வார்த்தைகளை வைத்தே, ஏற்ற இறக்கங்களை வைத்தே,  நமக்குச் சிரிப்பை வர வழைத்தவர்! நடிகர் நாகேஷ் ஒரு பாணி நடிப்பைக் கொடுத்தார் என்றால் வடிவேலு இன்னொரு பாணியை நடிப்பில் கொண்டு வந்தார்! அவர் பேசுகின்ற பாணி இதுவரையில் நாம் திரையில் கண்டதில்லை!

இனி அவரது நடிப்பைக் காண முடியுமா என்பது தெரியவில்லை. நல்ல நகைச்சுவையைச் சினிமாவில் கொடுத்தவர். கவலையை மறந்து சிரிக்க வைத்தவர். சினிமா இல்லையென்றாலும்               யு-டியூபில் அவருடைய படக்காட்சிகள் சக்கைப் போடு போடுகின்றன! எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இன்றுள்ள தமிழக அரசியல்வாதிகளுக்கு அவருடைய வசனங்கள் பெரிய அளவில் பயன்படுகின்றன!

இந்த நேரத்தில் வைகைப்புயலுக்கு நாம்  சொல்ல வேண்டியது ஒன்று தான். தமிழ்ச் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள் பலர். ஆனால் கடைசிக்காலத்தில் அவர்கள் நிலைமை பரிதாபத்திற்குறியதாக அமைந்து விட்டது. குறிப்பாக தியாகராஜ பாகவதரைப் பற்றி சொல்லலாம். சந்திரபாபுவைப் பற்றி சொல்லலாம்.  இன்னும் பலர்.

தலைக்கனம் வேண்டாம்! அதுவே நாம் சொல்லுவது! அவர் தனது நடிப்பைத் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். 

இப்போதைக்கு அவருடைய சகாப்தம் முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது!







No comments:

Post a Comment