Friday 1 December 2017

அணில் ஜோசியம் தெரியுமா..?


பொதுவாக ஜோசியத்தின்  மேல் எனக்கு நம்பிக்கை இல்லை.  இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே  அப்படித்தான்!  ஒரு காலக் கட்டத்தில் இந்த ஜொசியம், கைரேகைக்கலை, எண்கணிதம் - இவைகளிலெல்லாம் பூகுந்து விளையாடியிருக்கிறேன்! ந்ண்பர்களுக்குக் கைரேகைகளைப் பார்த்து பலன் சொல்லியிருக்கிறேன்! எண்கணிதம் பார்த்து பெயரை மாற்றிக் கொடுத்திருக்கிறேன்! சரியாகவே கணித்துக் கொடுத்திருக்கிறேன்!  ஆனால் வந்த வேகத்தில் அதனை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி விட்டேன்! அது எனது பொழுது போக்கும் அல்ல, எதிர்காலமும் அல்ல! அதற்கு நிறைய ஆராய்ச்சிகள் தேவை. நிறைய நேரத்தைச் செலவு பண்ண வேண்டி வரும். என்னிடம் இருந்த அந்தப் புத்தகங்களை அனைத்தும் நண்பர்களுக்குக் கொடுத்து விட்டேன்!

ஆனால் நம்மிடையே நிறைய ஜோசியங்கள் உண்டு. பூனை குறுக்கே போனால்...!  காக்கை கரைந்தால்.....! பல்லி கத்தினால், பல்லி தலையில் விழுந்தால்....இப்படி இன்னும் இருக்கலாம்! யார் கண்டார்! எனக்குத் தெரிந்தது அவ்வளவு தான். இப்போது எனக்குத் திடீரென ஒரு சந்தேகம்! அணில் குறுக்கே போனால்...? அல்லது வீட்டினுள் புகுந்தால்...? காரணம் காலையில் நான் காரை எடுத்துக் கொண்டு போகும் போதெல்லாம் இந்த அணில்கள் குறுக்கே நெடுக்கே இப்படியும் அப்படியும் ஓடுவதைப் பார்க்கின்றேன்.  அட! எதற்கு எதற்கோ குறி சொல்லும் தமிழனுக்கு இதற்கு மட்டும் கண்டு பிடிக்காமலா போயிருப்பான்!  ஏனோ அந்த எண்ணம் இன்று காலை தான் எனக்குத் தோன்றியது!

தமிழ் விக்கிபெடியாவைக் கொஞ்சம் அலசினேன்! ஏமாற்றம் தான்! எதுவும் கிடைக்கவில்லை! ஒன்றுமே தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டேன்! அணில்கள் ராமருக்குப் பாலம் கட்ட உதவியதாம். அது சரி! கடவுளுக்கே உதவி செய்த அணிலைப் பற்றி ஏதாவது கெடுதல் சொல்ல முடியுமா, என்ன? நல்லதைத் தானே சொல்ல முடியும். அதனால் தான் யாரும் ஜோசியம் சொல்லத் துணியவில்லை!

சரி! பரவாயில்லை!  நானே ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இனி இந்த அணில்கள் என் கண்களுக்குப் பட்டால் உடனே "ஆகா! இன்று அற்புதமான நாள்! நீங்கள் எனக்குப் பாலங்கட்ட உதவிதற்காக நன்றி! நன்றி!" அதனாலென்ன?  நினைக்கிறதே, நினைக்கிறோம், கொஞ்சம் நேர்மறையாகவே, நினைப்போமே! நல்லது நடக்கும் என நம்புவோமே!

 இந்த அணில்களை நினைக்கும் போதெல்லாம் அது ஒரு பாவப்பட்ட பிராணியாகவே தோன்றுகிறது. மரங்களை வெட்டி விடுகிறார்கள். பழ மரங்கள் காணாமல் போய்விட்டன. அவைகள் என்ன தான் செய்யும்? இப்படியும்  அப்படியும்     அலைந்து கொண்டு இரை கிடைக்காமல், வீடுகளில் புகுந்து கொண்டு, இரைகளைத் தேடி.......! பாவந்தான்!  அவைகள் சாப்பிட சில நாள்களுக்கு  இரை கிடைக்கவில்லை என்றால் அதன் முன் பற்கள் வளர்ந்து விடுமாம்! அதன் பின்னர் சாப்பிட இயலாமல் அவைகள் இறந்து போகுமாம்!

மனிதன் செய்யும் அட்டூழியங்களினால் இந்த அணில்களும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன! இந்த நேரத்தில் இன்னொரு ஜோசியமா? வேண்டவே வேண்டாம்! இருக்கிற ஜோசியமே போதும்!


No comments:

Post a Comment