Friday 15 December 2017

தீர்வு பிறந்துவிட்டதா...?


குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு தீர்வு பிறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது! நமக்கும் மகிழ்ச்சியே!

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக் கொண்டும், சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டும் இருந்த ஒரு பிரச்சனை   முடிவுக்கு வந்தால் நாம் நிச்சயமாக மகிழ்ச்சியடையலாம்! அப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது!  அப்படியென்றால் இது வரை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற அனைத்துக் கட்டடங்களும்      ஒரு முடிவுக்கு வந்ததா? என்கிற கேள்வியெல்லாம் வேண்டாம்!  எதிர்மறையான சிந்தனை வேண்டாம் என்று நினைத்தாலும் அது ஏனோ "இதெல்லாம் ஒரு திருட்டு வேலை!"  என்று தான் மனம் சொல்லுகிறது! மன்னிக்கவும்!




போன பொதுத் தேர்தலின் போது நடந்தது என்ன? அப்போதைய   துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் இந்தப்பள்ளியின் கட்டடத்திற்கென 25  இலட்சம் வெள்ளி  ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அத்தோடு அந்தப் பிரச்சனை முடிந்தது.  ஒரு வேளை கட்டடம் கட்டப்பட்டுவிட்டதென அவர் நினைத்தாரோ என்னவோ! எதுவும் அசையவில்லை! அதன் பின்னர் பல போராட்டங்கள்; பல சர்ச்சைகள்; பல அறிக்கைகள்! 

இப்போது அடுத்த  பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்கிற நிலை.  இந்த நேரத்தில் எல்லாப் பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக - நாம் அதனை நம்ப வேண்டும் - என்பதாக ஓர் அடிக்கல் நாட்டு விழா!  இந்த முறை துணைப்பிரதமரோ அல்லது பிரதமரோ அல்லது எந்த அம்னோ அமைச்சர்களோ கலந்து கொள்ளவில்லை!   துணைப்பிரதமர் கூட ஒன்றும் செய்ய இயலாத நிலையில் "வெறும் ம.இ.கா. அமைச்சர்கள் என்ன  செய்ய முடியும்?"  என்று நாம் நினைத்தால் அது தவறில்லையே!  ம.இ.கா. அமைச்சர்கள் என்றால் அவர்களுக்கு மரியாதை இல்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே! இன்னுமா நாம் நம்ப வேண்டும்! அப்படி இவர்களால் முடியும் என்றால் இது நாள் வரை டத்தோ   கமலநாதன் என்ன செய்து கொண்டிருந்தார்?

டத்தோஸ்ரீ சுப்ரமணியம் சொன்ன ஒரு கருத்து சிந்திக்கத்தக்கது: மாநில அரசின் அனுமதி, நில ஆய்வுப் பணிகள் ஆகியன பரிசீலனையில்  இருக்கின்றன!  ஆனால் கட்டடத்திற்கான நிதி ஒதுக்கீடு 70,000 லட்சம்  வெள்ளி தயார் நிலையில் இருக்கிறது!

இவைகளெல்லாம் நாம் கேட்டு சலித்துப் போன விஷயங்கள்! ஒன்று மட்டும் நிச்சயம். இன்னும் ஆறு மாதத்திற்குள் கட்டடம் கட்டபடுமானால் - அல்லது தேர்தலுக்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்டால் - ம.இ.கா. தலைவருக்கு என் வாழ்த்துகளும், வணக்கங்களும்! ஏன்? நானே அவர் காலில் விழுந்து நன்றி சொல்லுவேன்!

நல்ல தீர்வு பிறக்கட்டும்!

நன்றி: வணக்கம் மலேசியா






No comments:

Post a Comment