Wednesday 20 December 2017
ஏழை மனதை மாளிகை ஆக்கி....!
"மயக்கமா, கலக்கமா" என்னும் கவியரசு கண்ணதாசனின் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி தான் "ஏழை மனதை மாளிகை ஆக்கி" என்னும் இந்த வரி.
நாம் ஏழையாக இருக்கலாம். தினக்கூலியாக இருக்கலாம். இன்றைக்கு உழைத்தால் தான் இன்றையச் சாப்பாடு என்னும் நிலையில் இருக்கலாம். எவ்வளவு தான் கீழ் நிலையில் இருந்தாலும் ஒன்றை மட்டும் நாம் மறந்து விடக் கூடாது. நாம் ஏழையல்ல என்பது தான் அது. ஏழை என்பது தற்காலிகம் என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அது எந்நேரத்திலும் நம்மை விட்டு அகன்று போகலாம். வளமான வாழ்க்கைக்கு உங்களைத் தயார் செய்யுங்கள். ஏழ்மையில் உழன்றாலும் பணத்தில் உழல்வதாக ஒரு சிறிய கற்பனை. ஆமாம், கற்பனைக் கூட ஏழ்மையாகவா இருக்க வேண்டும்? அமரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய இளம் வயதில் எழுதுவதற்கு ஏடுகள் கூட இல்லாத நிலையில் மண்வெட்டியில் எழுதிப் படிப்பாராம்! பிற்காலத்தில் அவர் பல தோல்விகளைச் சந்தித்த பின்னர் தான் அவர் ஜனாதிபதி ஆனார். எந்தக் காலத்திலும் அவர் தன்னை ஏழை என்று நினைத்ததில்லை! மனதை மாளிகையாகவே வைத்திருந்தார்!
நாம் இப்போது, இந்த நேரத்தில் ஏழையாக இருக்கலாம். அது தற்காலிகம். மனதை மாளிகையாகவே வைத்திருக்க வேண்டும். ஏழை என்பது நிரந்தரம் அல்ல. நேரங்கள் மாறலாம்! கோலங்கள் மாறலாம்! காட்சிகள் மாறலாம்! ஏழ்மையும் மாறத்தான் வேண்டும். ஏழ்மை ஏன் மாறுவதில்லை? மாற வேண்டும் என்னும் எண்ணம் நம் மனதில் ஏற்படவில்லை என்றால் ஏழ்மை மாறாது!
ஒரு கறுப்பினக் குழந்தை தனது தாயைப் பார்த்து "அம்மா! நாம் ஏன் எப்போதும் ஏழையாகவே இருக்கிறோம்?" என்று கேட்டாள். அதற்குத் தாய் சொன்ன பதில்"மகளே! உண்மையில் நாம் ஏழையில்லை. உன் தந்தை, நாம் வசதியாக வாழ வேண்டும் என்று எந்தக் காலத்திலும் நினக்கவே இல்லை. அதனால் நாம் ஏழையாகவே இருக்கிறோம்!"
அது தான் உண்மை! நாம் வசதியாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் அதே பஞ்சப்பாட்டை பாடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்!
மனம் ஏழ்மையிலேயே ஊஞ்சலாடிக் கொண்டிருக்காமல் அந்த மனதை மாளிகையாக மாற்றுவது என்பது நமது கையில்!
ஏழை மனதை மாளிகை ஆக்கி....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment