Sunday 10 December 2017

தேவசூரியா ....ஒரு பாடம்!


மலேசியத் தமிழ்ப்பெண்களுக்கு தேவசூரியா ஒரு பாடம்! மலேசியப் பெண்ணான தேவசூரியா தமிழ் நாட்டைத் சேர்ந்த ஒரு இளைஞனைத் திருமணம் செய்து, அந்த இளைஞர் இங்கு நிரந்தரமாகத் தங்க முடியாத சூழ்நிலையில், அவரோடு அவரது மனைவியான தேவசூரியாவும் தமிழகம் சென்றிருக்கிறார். அங்கு அவரது மாமியாரால் துன்புறுத்தப்பட்டு,  அடிபட்டு, உதைப்பட்டு,  அங்கிருந்து விரட்டப்பட்டு ஒரு வழியாக மீண்டும் மலேசியா வந்து சேர்ந்திருக்கிறார்.

அவர் இங்கு வருவதற்கு பலர் உதவியிருக்கின்றனர். அதுவும் தனக்கு அறிமுகமில்லாத ஒருவரிடம் தனது கதையைச் சொல்லி கதறி அழுது அதனை அந்த நண்பர், விடியோவாக எடுத்து வலைத்தளங்களில் பரவலாகியதைத் தொடர்ந்து அவருக்கு உதவ பலர் முன் வந்தனர். மலிண்டோ விமான நிறுவனம் தேவசூரியாவுக்கும் அவரது மகனுக்கும் விமான டிக்கெட்டுக்களைக் கொடுத்து உதவியது. ராமநாதபுரத்திலிருந்து மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு அவர்கள்  வருவதற்கான செலவுகளை மலேசிய ருத்ரா தேவி சமாஜ் அமைப்பு ஏற்றுக் கொண்டது. 




தற்காலிகமாக ரவாங், ஸ்ரீசாரதாதேவி இல்லத்தில் அவர் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ருத்ராதேவி சமாஜ் செய்து  தந்துள்ளது. அவரின்  உடனடிச் செலவுகளுக்காக கிள்ளான் மலையாளி சங்கம் ரொக்கம் ரி.ம.1500.00 கொடுத்து உதவியுள்ளது.  இவர்கள் அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும். தக்க நேரத்தில் செய்யப்பட்ட உதவி; மறக்க முடியாத உதவி. அவருடைய கணவரும் இங்கு வருவதற்கான வாய்ப்புக்கள் இருந்தால் அவரோடு சேர்ந்து கொள்ளட்டும்.  வாழ்த்துவோம்!

இவரது நிலை மற்ற பெண்களுக்கும் ஏற்படக் கூடாது என்பது தான் நமது எண்ணம். காரணம் தமிழ்ப் பெண்களே வெளிநாட்டு ஆடவர்களை அதிகமாகத் திருமணம் செய்து கொள்ளுகின்றனர்; அவதிப்படுகின்றனர்.       தாய் தகப்பன் சொல்லுவதையும் கேட்பதில்லை. நண்பர்கள் சொல்லுவதையும் கேட்பதில்லை. சொந்தப்புத்தியும் இல்லை. பத்திரிக்கைகளையும் படிப்பதில்லை. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுவதில்லை.  சின்னத்திரை நாடகங்களைப் பார்த்தால் புத்தி கெட்டுப்போகுமே தவிர புத்தியா வரும்? அதுவே நமது கவலை!

இங்கு நம்மிடையே வங்காளதேசிகளைத் திருமணம் செய்து கொண்டவர்கள், பாக்கிஸ்தானியரைத் திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். நாம் சொல்ல வருவதெல்லாம் இங்கேயே உங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். கனவில் கூட உங்கள் கணவர்களின் நாடுகளுக்குப் போகலாம் என்று நினைக்காதீர்கள். இங்கு இருக்கும் உங்களின் அன்பான கணவர் அவருடைய நாட்டுக்குப் போனால் வம்பான கணவராக மாறி விடுவார்! போகும் வழியிலேயே உங்களை "விற்று" விட்டுப் போய்விடுவார்! அவர்களுடைய நாடுகளில் பெண்களை ஒரு பெண்ணாக பார்க்க மாட்டார்கள்.  அனைத்தும் ஆண்களின் ஆதிக்கம் தான்! 

இதோ! இந்த தேவசூரியா நமது பெண்களுக்கு ஒரு பாடம். இவரைப் பற்றி மட்டும் தான் இப்போது நமக்குத் தெரிந்திருக்கிறது. வெளி வராத தேவசூரியாக்கள் நிறைய இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை அவ்வளவு தான்!

மற்றப் பெண்களுக்கு இவர் ஒரு பாடமாக அமையட்டும்!

No comments:

Post a Comment