Wednesday 6 December 2017

பூனை ஏன் குறுக்கே போகிறது..?


பூனை குறுக்கே போனால் அதற்கு ஒரு ஜோசியம். உடனே  எதிர்மறையான எண்ணங்கள் நம் மனதுக்குத் தோன்றுகின்றன. காரணம் நாம் அப்படித்தான்  பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

ஆனால் என்றைக்காவது ஏன் இந்தப் பூனை குறுக்கே போகிறது என்று யோசித்திருக்கிறோமா?  அப்படி நாம் சிந்திப்பதில்லை! காரணம் அது நமக்குத் தேவை இல்லாத ஒரு விஷயம்!

நான் வசிக்கும் வீடமைப்புப் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம். இஸ்லாமியர்கள் நாய்களை வளர்ப்பதில்லை. அதனால் பூனைகளின் ஆதிக்கம் அதிகம். எந்நேரமும் பூனைகளின் சத்தம், சண்டை, சச்சரவு ஒலித்துக் கொண்டே இருக்கும்! இந்தப் பூனைகள் பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள். அதனால் இந்தப் பூனைகள் சாப்பாட்டுப் பஞ்சத்தை எதிர் நோக்குவதில்லை. ஆனால் என்னதான் வீடுகளில் நாம் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அவைகளுக்கென்று தனிப்பட்ட உணவு வகைகளைத் தேடிப் போவது அதன் குணம்!

வீடுகளைச் சுற்றி அப்படி என்ன தான் இருக்கும்?  எலிகள் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கும். கொஞ்சம் செடிகொடிகள், மரங்கள் இருந்தால் குருவிகளும் இரைத் தேடிக் கொண்டிருக்கும். இவைகள் தாம் பூனைகளின் இலக்கு. எலிகள் என்றால் பூனைகளுக்கு இரவு நேர வேட்டை. குருவிகள் என்றால் பகல் நேர வேட்டை.

இந்த வேட்டையின் போது தான் பூனைகள் சாலைகளின் குறுக்கே போவதும், ஒடியாருவதும் நடந்து கொண்டிருக்கும்! அதுவும் இல்லெயென்றால் அதன் ஜோடியை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும்! பூனை அதன் சாப்பாட்டுக்காக ஓடுகிறது அல்லது ஜோடியை நோக்கி ஓடுகிறது! பாவம்! அதற்கு அதன் பசி! இதற்கெல்லாம் போய் நமது முன்னோர்கள் - சே! நமது பின்னோர்கள்! - அதற்கென்று வீணாக ஒரு கதையைத் ஜோடித்து தேவையற்ற  ஒரு ஜோசியம் சொல்லி நமது பொன்னான நேரத்தை வீணடித்திருக்கிறார்கள்!

பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. "வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே.. நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!"

ஆக, பூனை தனது பசிக்காக இரைத் தேடி ஓடுகிறது  அதன் பசியை போக்க வேண்டுமே தவிர அதன் பசியைக் கூட ஒரு ஜோசியமாக வைத்து வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிப் போவது, சோம்பிப்போவது சோம்பேறிகளின் வேலை!



No comments:

Post a Comment