Wednesday 13 December 2017

தெருக்கூத்து ஆடப்போறேன்..!


நம் ஒவ்வொருக்கும் ஏதாவது ஒரு கனவு இருக்கத்தான் செய்யும். ஆனால் நம்முடைய பிரச்சனை எல்லாம் "அது" தான்  நமது கனவு என்று உறுதியாக நமக்குத் தெரிவதில்லை.  அதனைத்தான் நம்மை அறியாமல் நாம் செய்து கொண்டிருப்போம்  அது தான் நமது கனவு என்று அறியாமலே! நமது பெற்றோர்கள் அவர்கள் கனவுகளை நம்மீது திணிப்பதில் தீவிரமாக இருப்பார்கள். நம்மிடம் உள்ள திறமைகளை அவர்கள் ஊக்குவிப்பதில்லை.  நம்மாலும் ஊக்கப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இது தான் படித்தவரிடையே உள்ள ஒரு நிலை.

ஆனால் படிக்காதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் இவர்களுக்கும் கனவுகள் இருக்கத்தான் செய்யும்?  ஏதோ பெரியதாக இல்லாவிட்டாலும் சிறியதாகவாவது இருக்கத்தான் செய்யும். சிறிது கூட ஒரு காலக்கட்டத்தில் பெரிதாக வெடித்துச் சிதறலாம்! யார் கண்டார்?

அப்படித்தான் அந்த ஏழை விவசாயி மகனுக்கும். படிப்போ கம்மி. சரியான கல்வி இல்லாமல் விவசாயமும் சொல்லக்கூடிய அளவுக்கு இல்லாமல் இருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த அந்த சிறுவனுக்கு இருந்த கனவோ கொஞ்சம் வித்தியாசமான கனவு. யாரும் எதிர்ப்பார்க்க முடியாத கனவு. யாரும் விரும்பாத ஒரு கனவு. அப்படி அந்த சிறுவன் கண்ட கனவு தான் என்ன? "நான் தெருக்கூத்து ஆடப்போறேன்" என்னும் கனவு! விவசாயம் செய்கின்ற குடும்பத்தில் தெருக்கூத்து ஆடுவதா? கேவலம் இல்லையா? அப்போது அந்த சிறுவனுக்கு தெருக்கூத்து மட்டும் தான் தெரிந்திருந்தது. வேறு எதனைப்பற்றியும் அறிந்திருக்கவில்லை. 

பெற்றோர்கள் தங்களது ஏழ்மையின் காரணமாக பலரிடம்    முட்டி மோதி கடைசியாக ஒரு நாடகக் குழுவில் சேர்த்து விட்டனர். அது ஒரு சிறிய ஆரம்பம். அது போதும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். நாடகக்குழுவில் சிறிய வேலை, பெரிய வேலை என்றில்லாமல் எல்லா வேலையும் செய்தான். நடிப்பில் சிறிய வேடம், பெரிய வேடம் என்றில்லாமல் எல்லா வேடமும் ஏற்றான் பெண் வேடம் உட்பட. 

பல ஆண்டுகள் நாட உலகில் பேர் போட்டுக் கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு ஒன்று தேடி வந்தது. முதல் படம்.      முதலில் பாதி படம் எடுத்த பின்னர் தயாரிப்பாளர் திருப்தி அடையாததால் அதனை அழித்துவிட்டு மீண்டும் படத்தை எடுத்து வெற்றிகரமாக முடித்தார். அந்தப் படம் தான் பராசக்தி. அந்த இளைஞன் தான் கணேசன். அப்புறம் பராசக்தி கணேசன். அதன் பின்னர் சிவாஜி கணேசன்; நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; செவாலியர் கணேசன். 

சிறு வயதாக இருந்த போது ஏற்பட்ட ஒரு பொறி. எங்கிருந்தது வந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை கிராமத்தில் ஏதாவது தெருக்கூத்து நடந்திருக்கலாம். அதனையே ஒரு இலட்சியமாக எடுத்துக் கொண்டு அதனை நோக்கி தனது பயணத்தைத் துவக்கிய நடிகர் திலகத்தின் வெற்றி என்பது சாதாரணமான வெற்றி அல்ல. அசாதாரண வெற்றி. ஆனால் அது தான் எனது இலட்சியம். அது தான் எனது பயணம்.கவனம் வேறு திசையில் பயணிக்கவில்லை. ஒரு வேளை சாப்பாடு. அல்லது இரு வேளையாக  இருக்கலாம். ஆனால் வயிற்றை மட்டும் நிரப்புவது நோக்கமல்ல. இலட்சியம் மட்டுமே நோக்கம். 

தெருக்கூத்து ஆட வேண்டும் என்ற கனவு கண்ட ஒரு சிறுவனுக்கு இன்று தமிழகத்தில் மாபெரும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது! இன்று நடிக்க வருபவர்களுக்கு அவர் தான் நடிப்புக்கு இலக்கணம். அவரின் நடிப்பை மீற யாருமில்லை! அவர் நடிக்காத வேடங்கள் இல்லை.

நமக்கும் வேறு துறையில் ஆட வேண்டுமென்று ஆசை இருக்கலாம்! நடக்கட்டும்!

No comments:

Post a Comment