Tuesday 12 December 2017

குழந்தைகளின் பால் பவுடரிலும் போலிகள்!



இன்றையக் காலக்கட்டத்தில் எல்லாவற்றிலும் போலிகள் புகுந்து விட்டன. அரிசிகளில் போலி என்றார்கள். வாங்கும் வஞ்சனை மீன்களில்  பிளாஸ்டிக் கலந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்! இவைகள் எல்லாம் சமீப கால செய்திகள். 

ஆனால் இப்போது கடைசியாக வந்த செய்தி இன்னும் கொடூரம். குழைந்தைகளின் பால் பவுடரில் கலப்படம் நிகழ்ந்திருப்பதாக  வெறும் வதந்தியாகச் சொல்லவில்லை. அந்தச் செய்தி  உண்மை என்பதாக உள்நாட்டு வாணிபத்துறை அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.  ஜொகூர்பாருவில்  ஐந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய  சோதனையில் 210  போலிப்பால் பவுடர் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் 42,000 ரிங்கிட். சீனர் மருந்துக்கடை மற்றும் மளிகைக்கடைகளில் நடந்த சோதனைகளில்  இந்தப் போலிப்பால் பவுடர்கள் கைப்பற்றப்பட்டன.

சென்ற ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தக் குழந்தைகளின் பால் பவுடர் தயாரிக்கும் நிறுவனம்  போலிப்பால்கள் சந்தையில் உளவுவதாக வாணிபத்துறை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்து விட்டனர். அதுவுமின்றி சமீபத்தில் ஒரு குழைந்தையின் பெற்றோர் இந்தப் பாலை அருந்திய பின்னர் தங்களது குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்ததாகப் புகார் செய்திருக்கின்றனர். அதன் பின்னரே அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். இப்போது இந்தப் போலிப்பால் சோதனைக்கூடத்திற்கு  அதன் தரமறிய அனுப்பப்பட்டிருக்கிறது..

இப்போதைக்கு நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்தப் போலிப்பால் ஜொகூர்பாரு, செனாய் பகுதிகளில் மட்டுமே உலவுவதாக தெரிய வருகிறது. ஜொகூரில் மற்றப் பகுதிகளிலோ அல்லது மற்ற மாநிலங்களிலோ அதன் நிலை தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம். இது போன்ற போலிகள் நடப்பதற்குக் காரணம் நம்முடைய சட்டங்கள் கடுமையாக இல்லை என்பது தான். சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும். அது வரை போலிகளோடு நாம் வாழத்தான் வேண்டும். அனைத்தும் வாணிப அமைச்சின் கையில்!




No comments:

Post a Comment