Wednesday, 27 December 2017
அலறுகிறது ஆங்கிலம்..!
ஆங்கிலத்தின் நிலைமை நமது நாட்டில் எப்படி இருக்கிறது? பாவமாகத்தான் இருக்கிறது! வேறு என்ன சொல்லுவது? கடைசியாக கோத்தபாரு விமான நிலையத்தில் "merry christmas" என்பதற்குப் பதிலாக "mary christmas" என்றும் "happy new years" என்று போட்டு பயணிகளைக் கொஞ்சம் கலகலப்பாக்கி இருக்கிறார்கள்!
ஆமாம்! நாம் ஏன் ஆங்கில மொழியில் இவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பாட்டோம்? தேசிய மொழிக்கு அடுத்து ஆங்கில மொழியே நாட்டின் தொடர்பு மொழி. தொடர்பு மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுப்பதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. ஆங்கில மொழிக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்திருப்பார்கள். ஆங்கிலேயர்களைக் கொண்டு ஆங்கிலம் படிக்க வைத்திருப்பார்கள். ஆனாலும் அத்தனையும் எந்தவித பலனையும் கொண்டு வரவில்லை! என்ன காரணம்? உண்மையைச் சொன்னால் இங்குள்ள ஆசிரியர்களே ஆங்கிலம் கற்பிக்க தகுதியானவர்கள் தான். சீன, இந்திய ஆசிரியர்களுக்கு அந்தத் தகுதிகள் நிறையவே இருக்கின்றன. ஆனாலும் கல்வி அமைச்சு மலாய் இனத்தவர்களை வற்புறுத்தி ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்கின்றனர். பிரச்சனையே இங்கு தான் ஆரம்பமாகிறது. பெரும்பாலான மலாய் இனத்தவர் ஆங்கிலம் படித்துக் கொடுக்க விரும்புவதில்லை! காரணங்கள் பல. சீன, இந்திய ஆசிரியர்களின் நிலை வேறு. அவர்கள் வீடுகளில் கூட ஆங்கிலத்தையே பயன் படுத்துகின்றனர். நிச்சயமாக ஆங்கிலத்தில் இவர்கள் தரம் அதிகமாகவே இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
கல்வி அமைச்சு மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய பட்டதாரிகளின் ஆங்கிலத் திறமையின்மையால் வேலைக் கிடைப்பதில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களையே தேர்வு செய்கின்றனர். வெளி நாடுகளுடன் தொடர்பு உள்ள நிறுவனங்களுக்கு ஆங்கிலத் திறன் உள்ளவர்களே தேவை.
ஆங்கிலக் கல்வி பள்ளியிலிருந்தே தவறுதலாகக் கற்பிக்கப் படுகின்றது. அத்தோடு மலாய் மூலம் ஆங்கிலம் பேசப்படுகின்றது. தவறான ஆங்கிலத்தினாலேயே பல நூறு மாணவர்கள் தங்களது மருத்துவப் படிப்பை இழக்கின்றனர்.
இதற்கு ஏதாவது தீர்வு உண்டா? உடனடியாக கண்ணுக்கு எட்டியவரை தீர்வு தெரியவில்லை! ஆங்கிலத் திறன் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் உடனே தேசிய மொழிக்கு எதிரிகளாக மலாய்க்காரர் அல்லாதார் சித்தரிக்கப்படுகின்றனர்!
அதனாலேயே எல்லாத் துறைகளிலும் இன்று ஆங்கிலம் அலறிக் கொண்டிருக்கிறது!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment