Friday 29 December 2017

கேள்வி - பதில் (71)


கேள்வி

ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்று விட்டாரே! இனியாவது அங்குல்ல பிரச்சனைகள் தீருமா?

பதில்

பிரச்சனைகள் தீர வாய்ப்பில்லை. தினகரனின் வரவால் அங்கு எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை என்பது அவரைத் தேர்ந்தெடுத்த வாக்களர்களுக்கும் தெரியும்! அப்படியே தி.மு.க. வோ அல்லது அ.தி.மு.க. வோ தெர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் அந்நகருக்கு எந்தவொரு விடிவு காலமும் ஏற்படப்போவதில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்! அதனால் கொடுக்கின்ற பணத்தையாவது வாங்கிக் கொள்ளுவோம் என்பதே மக்களின் மனநிலை. அதனால் தான் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுகிறார்கள்! மக்களைக் குறை சொல்லுவதில் பயனில்லை!

இதே ஆர்.கே. நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், அவர் பதவியில் இருந்த காலத்திலேயே  அவரே இந்த நகரின் வளர்ச்சிக்காக எதனையும் செய்யவில்லை! ஒரு முதல்வரே ஒன்றும் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்? வளர்ச்சித் திட்டங்கள் தேவையில்லை என்பது தானே அர்த்தம்! தேர்தல் வரும் போது பணமோ, சட்டிப்பானைகளோ, தொலைக்காட்சிப் பெட்டிகளோ இப்படி  எதையாவது கொடுத்து வெற்றி பெற முடியும் என்பது தானே அம்மையார் காட்டிய வழி! அவர் காட்டிய வழியை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள்! இந்த அரசியல்வாதிகளால் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதனால் கொடுப்பதையாவது பெற்றுக் கொள்ளுவோம் என்னும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்!
அதனாலேயே எந்தக் கட்சிக்காரன் எவ்வளவு கொடுப்பான் என்று பேரம் பேசுகின்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்!

இந்தத் இடைத் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசியிருக்கிறார்கள்! முக்கியமாக அ.தி.மு.க. வும் தி.மு.க.வும். ஆனால் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் அனைவரையும் மிஞ்சிவிட்டார்! அவர் சேவை செய்ய வரவில்லை. இப்போதைய அரசாங்கத்தை பதவியிலிருந்து கவிழ்க்க வேண்டும் என்பதே அவரின் உயரிய நோக்கம்!  மக்களுக்குத் தற்காலிகமாக பணம் கிடைத்தது. அவர்களுக்கு அது போதும்! தினகரனுக்குப் பதவி கிடைத்தது. அவருக்கு அது போதும். 

இன்னும் மூன்று மாதத்தில் அரசாங்கம் கவிழும் என்று தனது அடுத்த திட்டத்தை தினகரன் அறிவித்து விட்டார். ஆக, இனி அவரின் அடுத்த கட்ட வேலைகள் தொடரும்.

தினகரனிடம்,  கொள்ளையடித்த பணம் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கிறது. இந்த இடைத் தேர்தலுக்கே கோடி கோடியாக செலவு செய்திருக்கிறார்! இனி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அவர் பக்கம் இழுக்க வேண்டும். ஒவ்வொருனுக்கும் 10 கோடி கொடுக்கிறேன் என்றால்  அனைவரும் வாயைப்பிளந்து கொண்டு வருவார்கள்! இன்னும் கூடுதலாகக் கூட கொடுக்க வேண்டி வரும்! இனி அவர்களுக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் எவ்வளவு "புடுங்க" முடியுமோ  அவ்வளவும் லாபம்!

அதனால் தினகரனின் வெற்றி என்பது அவருக்கும் அவரின் குடும்பத்திற்கு மட்டுமே லாபம்! மக்களுக்கு அல்ல!




No comments:

Post a Comment