இப்போதெல்லாம் கார்களைப் பார்ப்பது பெரிய விஷயமே இல்லை. எந்த நாட்டுக் கார்களையும் நம் நாட்டில் பார்க்கலாம்.
ஆனால் தோட்டப்புறங்களில் எந்தக் காரைப் பார்ப்பது அதுவும் அந்தக் காலத்தில்? வாய்ப்பே இல்லை ராசா!
எனது பக்கத்து வீட்டு நண்பன் என்னைவிட முன்று நான்கு வயது பெரியவன். நான் பள்ளிக்கூடம் போன காலத்தில் அவன் பள்ளிக்கூடம் போகவில்லை. அவன், தான் விரைவில் மலாக்கா போவேன். அங்கே பள்ளிக்கூடம் போவேன் என்று சொல்லுவான். அவர்கள் தற்காலிகமாக, வேறு வழியில்லாததால், தோட்டத்திற்கு வேலைக்கு வந்தவர்கள். அவர்கள் தந்தையார் நோய்வாய்ப் பட்டதால் குடும்பம் நொடித்துப்போனது.
அவன் சொன்னது போல அவனுடைய மாமா ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மலாக்காவில் மாட்டு டாக்டராக (Veterinary Doctor) இருந்தவர். அவர் வந்த கார் தான் புஜோட். அப்போது தான் ஒரு காரையே முழுசாகப் பார்த்தேன். அது புஜோட் கார் என்று நண்பன் தான் சொன்னான். புஜோட் என்கிற பெயர் அப்படியே மனதில் பதிந்து விட்டது. பிற்காலத்தில் நானும் புஜோட் காரைப் பயன்படுத்திருக்கிறேன்.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதனை விற்றுவிட்டேன். இப்போதும் அது தான் எனக்குப் பிடித்தமான கார்.
ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். நாடு வெள்ளையனின் காலனியாக இருந்தது. கார்கள் எல்லாம் பெரும்பாலும் பிரித்தானிய கார்கள்தான் வரும். அந்தக் காலத்தில் பிரஞ்ச்காரன் கார் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. புஜோட் பிரஞ்ச் நாட்டைச் சேர்ந்த கார். பயன்பாட்டில் இருந்தவை மோரிஸ் மைனர் கார்கள். வெள்ளையனின் கார்.
எப்படியோ என் நண்பனின் மாமா புதுமை விரும்பியாக இருக்கலாம். எனக்கும் அது ஒட்டிக்கொண்டது. இப்போதும் அத தான் எனது நம்பர் ஓன்!
அறிவோம்: இத்தனை ஆண்டுகளில் இப்போது தான், முதன் முதலாக, பாலக்காடு தமிழரான நடிகர் அஜித் குமார், கார் பந்தயத்தில் பரிசு பெற்றிருக்கிறார். தமிழர்களுக்கு அது பெருமை தானே!
No comments:
Post a Comment