Wednesday, 23 May 2018
சிறிய கட்சிகளுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும்!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சி அமைப்பதற்கு இந்தியர்களின் பங்கும் கணிசமானது என்பதை நாம் அறிவோம்.
ஒரு பேட்டியின் போது கூட பக்காத்தான் பிரமுகர் ஒருவர் இந்தியர்கள் 88 விழுக்காடு பக்காத்தானுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார். யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை தான். காரணம் நாம் எல்லாக் காலங்களிலும் ம.இ.கா. விசுவாசிகளாகவே இருந்து வந்திருக்கிறோம்.
நாம் இந்த அளவுக்குப் பக்காத்தானுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்றால் நம்மிடையே உள்ள சிறு சிறு அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. ஆனால் வெளிப்படையாக நமக்குத் தெரிந்தவை என்றால் வேதமூர்த்தியின் ஹின்ராப், இராஜரத்தினத்தின் நியு ஜென் கட்சிகள் தான். இன்னும் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் வெளிப்படையாக ஆதரவு கொடுத்தவர்கள் இவர்கள் தான். அதுவும் குறிப்பாக நியு ஜென் கட்சியைப் பாராட்ட வேண்டும். இப்படித் துணிச்சலாக வெளியே வந்து பக்காத்தானோடு குரல் கொடுத்தவர்கள் நியு ஜென்.
நாம் சொல்ல வருவதெல்லாம் இது போன்ற சிறிய சிறிய கட்சிகள் எல்லாம் பக்காத்தானுக்காக உழைத்திருக்கிறார்கள் என்பது தான். இப்படி உழைத்த கட்சிகளுக்கு நிச்சயமாக ஓர் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
மேல்சபை என்று சொல்லப்படும் செனட்டர் பதவிகளுக்கு இந்தக் கட்சிகளில் உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அவர்களின் உழைப்புக்கு போதுமான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் பொறுப்புக்கள் தரப்பட வேண்டும். சும்மா பொம்மைகளாக தலையாட்டிவிட்டு போவோர்களாக இருக்கக் கூடாது. ஏற்கனவே அந்தத் தலையாட்டிகளை நாம் பார்த்து விட்டோம்! இனி வேண்டாம். இந்தியர்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே உள்ளன. செய்வதற்கு இன உணர்வும், மான உணர்வும் வேண்டும். அந்த உணர்வு உள்ளவர்கள் தான் சமுதாயதிற்குச் சேவை செய்ய முடியும்.
இப்போது பக்காத்தான் கட்சியில் உள்ளவர்களுக்கு அந்த இன உணர்வு உண்டு. நம்முடைய தேவைகள் அனைத்தையும் இன்றைய அரசாங்கத்தால் செய்ய முடியும். தொடர்ந்து அவர்கள் சேவையை நல்ல முறையில் தர முடியும். என நான் நம்புகிறேன்.
சிறிய கட்சிகளையும் கொஞ்சம் பாருங்கள் என கேட்டுக் கொள்ளுகிறேன்! வாழ்த்துகள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment