Thursday 22 March 2018

யார் அந்த அரக்கி...!


வேலை தேடி வெளி நாடுகளிலிருந்து நமது நாட்டிற்கு வருகின்றனர். எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான். ஆனால் ஒரு சில வீட்டு எஜமானர்கள் அவர்களைப் படுத்துகின்ற பாடுகள் இருக்கிறதே....மனத்தையே கசக்கி விடுகிறது.  அந்த அளவுக்குக் கொடூர உள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அரக்கர்களின் வழி வந்தவர்கள் என நம்பலாம்!




பல வீடுகளில்  கணவன்  -  மனைவி  இருவரும் வேலை செய்வதால் பிள்ளைகளைப் பார்ப்பதற்கு பணிப்பெண்கள் தேவைப்படுகிறார்கள்.  சில வீடுகளில் பணிப்பெண்கள் வைத்திருப்பது பெருமைக்குறிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மேலே பார்க்கப்படுகின்ற பெண்மணியும் அந்த வகை எஜமானர் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.  மற்றவர்கள் தனது அருமைப் பெருமைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  வேலைக்காரப் பெண்களைப் பணியில் வைத்திருப்பவர்!  வெறும் பெருமை மட்டும் அல்ல. தன்னுடைய 'பலம்' என்ன என்பதை அந்த ஏழைப் பெண்ணிடம் காட்டியிருக்கிறார்! அந்த  இந்தோனேசியப்  பெண் பணியில் அமர்ந்து இரண்டு வாரத்தில் தன்னுடைய பலம்,  செல்வாக்கு  அனைத்தையும் காட்டியிருக்கிறார்!  19 வயதே நிரம்பிய அந்தப் பெண்ணை அடிப்பதற்கு இரும்புக்கம்பி, குடைக்கம்பி அனைத்தையும் பயன்படுத்தி ஒரு பட்டறையையே ஞாபகப்படுத்தியிருக்கிறார். 

கையில் பணம் இருக்கிறது என்பதற்காகத்   தன்னிடம் வேலை செய்யும் ஏழை பெண்களிடம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் துணிவு இவர்களுக்கு எப்படி வருகிறது? ஒரே காரணம் தான். பணம், பதவி, செல்வாக்கு உள்ளவர்கள் எப்படியோ தப்பித்து விடுகிறார்கள்  அதனால் ஏற்படுகின்ற விளவுகள் தான் இவை. நமது நாட்டின் சட்ட திட்டங்கள் ஆளுக்கேற்றவாறு  வளைந்து கொடுக்கிறது என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது!

ஆமாம், இவர்களைப் போன்றவர்களை என்ன சொல்லுவது? அரக்கி என்பது தான் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது!

No comments:

Post a Comment