நான் சிரம்பானில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது பெற்றோர்கள் சிரம்பான் அருகே அள்ள தேர்ட் மைல் எஸ்டேட் (அதாவது தமிழில் மூனாங்கட்டை என்பார்கள்) அங்கே மாறி வந்தார்கள்.
Thursday, 27 February 2025
செயின் போல் பள்ளி (14)
நான் சிரம்பானில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது பெற்றோர்கள் சிரம்பான் அருகே அள்ள தேர்ட் மைல் எஸ்டேட் (அதாவது தமிழில் மூனாங்கட்டை என்பார்கள்) அங்கே மாறி வந்தார்கள்.
Wednesday, 26 February 2025
நீண்ட பயணம் ஆரம்பம்!
கல்வியில் எனது நீண்ட பயணம் என்றால் அது சிரம்பானில் உள்ள செயிண்ட் போல் பள்ளி தான். முதல் ஆறு ஆண்டுகள் காலை நேரம் பின்னர் மூன்று ஆண்டுகள் மாலை நேரப்பள்ளி. காலை நேரப்பள்ளியில் திறமையற்ற என்னைப்போன்ற மாணவர்களை மாலை நேரத்தில் தள்ளி விட்டார்கள்.
ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். நான் திறமையற்ற மாணவன் என்று சொல்லிவிட முடியாது. எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை. கடைசிவரையிலும் இல்லை. ஏதோ பள்ளிக்குப் போனோம் வந்தோம். என்னத்தையோ படித்தோம். அவ்வளவு தான். ஆசிரியர்களிடம் கேட்க தைரியம் இல்லை. ஆங்கிலம் வராது. ஆசிரியர்கள் அனைவருமே சீனர்கள்.
உண்மையில் மாலை நேரப்பள்ளி ஒரு வராப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். காலை நேரத்தில் சிலோனீஸ் மாணவர்கள் மற்றும் மலையாள மாணவர்கள் - இவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்தாலே ஆகாது. என்னுடைய சூழலில் உள்ள மாணவர்கள் யாரும் இல்லை. அதனால் சீன மாணவர்கள் தான் நண்பர்கள். அவர்களும் என்னைபோன்ற புத்திசாலிகள்!
மாலை நேரப்பள்ளியில் இந்திய மாணவர்கள், மலாய் மாணவர்கள், சீன மாணவர்கள் எல்லாம் ஒரு கலப்பு. . அப்போது தான் பேசக்கூடிய தைரியமே வந்தது. நாலு பேரோடு பேசுகின்ற துணிவும் வந்தது. ஆனால் பரிதாபம். கல்விக்கு அது உதவவில்லை. எப்படியோ சீனியர் கேம்ப்ரிட்ஜ் பரிட்சை எழுதும் அளவுக்குப் போய்விட்டேன். வெற்றி பெறவில்லை.
நான் செண்டாயான் தோட்டத்தில் தான் எனது கல்வியை ஆரம்பித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னைத்தவிர வேறு மாணவர்கள் யாரும் என்னோடு படித்ததில்லை. நான் அங்கிருந்த மூன்று ஆண்டுகளில் நான் ஒருவனாகத்தான் தனி ஆளாக போய் வந்துகொண்டிருந்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் சேர்ந்து படிக்க உதவியாக இருந்திருக்கும் அல்லவா?
அறிவோம்: அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை எப்போது தனது வண்ணத்தை மாற்றியது? 1814 - ம்- ஆண்டு இங்கிலாந்துக்கும் அமரிக்காவுக்கும் கடும் போர் நடந்தது. அந்த நேரத்தில் அமரிக்க அதிபரின் மாளிகை - பல வண்ணங்களோடு இருந்த மாளிகையை - நெருப்பு வைத்து எரித்தனர் இங்கிலாந்து படையினர். எரித்த பாகங்களை மறைக்க வெள்ளையடித்து மறைத்தனர் அமெரிக்கர்கள். ஆக, இன்றுவரை, வெள்ளையடித்த மாளிகை, வெள்ளை மாளிகை (White House) யாகவே தொடர்கிறது.
வரலாற்று ஆசிரியர் மன்னர் மன்னன்
Tuesday, 25 February 2025
இரண்டு ஆண்டுகளே படித்தேன் (12)

Monday, 24 February 2025
ஆங்கிலப்பள்ளி எப்படி? (11)
ஆங்கிலப்பள்ளி என்பதால் எந்த ஒரு பயமும் ஏற்பட்டதாக நினைவில் இல்லை. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்திருப்பதால் அனைத்தும் சுமூகமாகத்தான் இருந்தன. ஒரே ஒரு குறை: ஆங்கிலம் பேச வராது என்பதைத் தவிர குறை ஏதும் இல்லை!
எனது முதல், வகுப்பு (Primary 1) ஆசிரியை: மிஸ் நாயர். வகுப்பில் அதிகம் இருந்தவர்களில் மலாய் மாணவர்களே அதிகம் என நினைக்கிறேன். இந்திய மாணவர்கள் இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. யாரிடமும் தமிழில் பேசியதாக நினைவில் இல்லை. வகுப்பில் குறைவான மாணவர்கள் தான்.
எனது முதலாவது நண்பன் என்றால் எனது பக்கத்தில் அமர்ந்திருந்த மலாய் மாணவன் ஏடம் (Adam) என்பவன் தான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவனது முகம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. எப்போதும் சிரித்த முகம். என்னைவிட இரண்டு மூன்று வயது கூட இருக்கும். என்னைப் பார்த்து அவன் காப்பி அடிப்பான்!
என்னிடம் உள்ள 'திறமை' என்னவென்றால் எனக்கு வாசிக்கும் திறன் உண்டு. புரிகிறதோ புரியவில்லையோ, வாசிக்கத் தெரியும்! சொல்வதெழுதல் (Dictation) நன்றாகவே செய்வேன்.
அந்தப்பள்ளியில் தான் நோட்டுப்புத்தகம், பென்சிலில் எழுதுகிற பழக்கம் வந்தது. தினசரி தேதி, மாதம், ஆண்டு எழுதுகின்ற பழக்கமும் வந்தது. அப்போது தான் ஆண்டு 1948 என்று மறக்க முடியாதபடி ஆண்டின் ஞாபகமும் திணிக்கப்பட்டது. பின்னர் அதுவே பழக்கத்திற்கு வந்துவிட்டது.
அறிவோம்: மலேசியாவில் தமிழ்க்கல்வி எங்கு, எப்போது ஆரம்பிக்கப்பட்டது? Penang Free School என்னும் பள்ளியில், பினாங்கில் - 21-10-1816 - அன்று தான் தமிழ்க்கல்வியின் தொடக்கம். (209 ஆண்டுகள்) தொடங்கியவர்: Rev.Hutcings. நாம் வாழும் சிரம்பான் நகரின் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியில் தொடக்கம் 1898 - ம் ஆண்டு.
Sunday, 23 February 2025
எனது முதல் ஆங்கிலப்பள்ளி (10)
Saturday, 22 February 2025
இப்படியும் எழுதலாமே! (9)
Friday, 21 February 2025
ஓடி விளையாடு பாப்பா! (8)
முன்பெல்லாம் பலவிதமான விளையாட்டுகளை நாம் விளையாடி வந்தோம்.
பல விளையாட்டுகளின் பெயர்களே மறந்து போயின. எல்லாமே தமிழ் நாட்டிலிருந்து வந்த விளையாட்டுகள் தாம்.
சடுகுடு, கோலாட்டம், பம்பரம் விடுதல், குண்டு விளையாடுதல், தாயம் விளையாடுதல், நொண்டியடித்தல், பல்லாங்குழி ஆட்டம் - அதற்கு மேல் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. விளையாட்டுகள் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டு. அதிகமாக ஆடும் ஆட்டம் என்றால் பம்பரம், குண்டு விளையாடுதல். எப்போதும் விளையாடுவது அல்ல. அதற்கும் ஒரு காலம் உண்டு!
சமீபத்தில் விடியோ ஒன்றைப் பார்த்த போது ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் தாயம், நொண்டியடித்து விளையாடுவதைப் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால் நமக்கு இந்த விளையாட்டெல்லாம் மறந்து போய் விட்டன. பழைய விளையாட்டுகள் மறந்து போயின என்றால் புதிய விளையாட்டு மட்டும் விளையாடுகிறோமா? அதுவுமில்லை! சோம்பேறித்தனம் தான் அதிகமாக வளர்ந்துவிட்டது
ஓடி விளையாடு பாப்பா என்றார் பாரதி. இப்போது ஓடுவதும் இல்லை ஆடுவதும் இல்லை, வில்லாடுவதும் இல்லை விளையாடுவதும் இல்லை - எல்லாவற்றிலுமே ஒரு தேக்கநிலை. பெற்றோர்களும் அதை அனுமதிப்பதுமில்லை. வருங்காலங்களில் வேறு பெயர்களில் "ஓடி விளையாடு பாப்பா" வரலாம். வராமலும் போகலாம்.
அறிவோம்: "நான் சுமார் 1500 ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். 500 க்கு மேற்பட்ட பந்தயங்களில் பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் 1500 போட்டிகளில் கலந்து கொண்டதுதான் எனது வெற்றிக்குக் காரணம்." பேராசிரியை பர்வீன் சுல்தானா.
Thursday, 20 February 2025
வேட்டையாடு விளையாடு! (7)
Wednesday, 19 February 2025
நான் பார்த்த முதல் கார் (6)
இப்போதெல்லாம் கார்களைப் பார்ப்பது பெரிய விஷயமே இல்லை. எந்த நாட்டுக் கார்களையும் நம் நாட்டில் பார்க்கலாம்.
ஆனால் தோட்டப்புறங்களில் எந்தக் காரைப் பார்ப்பது அதுவும் அந்தக் காலத்தில்? வாய்ப்பே இல்லை ராசா!
எனது பக்கத்து வீட்டு நண்பன் என்னைவிட முன்று நான்கு வயது பெரியவன். நான் பள்ளிக்கூடம் போன காலத்தில் அவன் பள்ளிக்கூடம் போகவில்லை. அவன், தான் விரைவில் மலாக்கா போவேன். அங்கே பள்ளிக்கூடம் போவேன் என்று சொல்லுவான். அவர்கள் தற்காலிகமாக, வேறு வழியில்லாததால், தோட்டத்திற்கு வேலைக்கு வந்தவர்கள். அவர்கள் தந்தையார் நோய்வாய்ப் பட்டதால் குடும்பம் நொடித்துப்போனது.
அவன் சொன்னது போல அவனுடைய மாமா ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மலாக்காவில் மாட்டு டாக்டராக (Veterinary Doctor) இருந்தவர். அவர் வந்த கார் தான் புஜோட். அப்போது தான் ஒரு காரையே முழுசாகப் பார்த்தேன். அது புஜோட் கார் என்று நண்பன் தான் சொன்னான். புஜோட் என்கிற பெயர் அப்படியே மனதில் பதிந்து விட்டது. பிற்காலத்தில் நானும் புஜோட் காரைப் பயன்படுத்திருக்கிறேன்.ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதனை விற்றுவிட்டேன். இப்போதும் அது தான் எனக்குப் பிடித்தமான கார்.
ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். நாடு வெள்ளையனின் காலனியாக இருந்தது. கார்கள் எல்லாம் பெரும்பாலும் பிரித்தானிய கார்கள்தான் வரும். அந்தக் காலத்தில் பிரஞ்ச்காரன் கார் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. புஜோட் பிரஞ்ச் நாட்டைச் சேர்ந்த கார். பயன்பாட்டில் இருந்தவை மோரிஸ் மைனர் கார்கள். வெள்ளையனின் கார்.
எப்படியோ என் நண்பனின் மாமா புதுமை விரும்பியாக இருக்கலாம். எனக்கும் அது ஒட்டிக்கொண்டது. இப்போதும் அத தான் எனது நம்பர் ஓன்!
அறிவோம்: இத்தனை ஆண்டுகளில் இப்போது தான், முதன் முதலாக, பாலக்காடு தமிழரான நடிகர் அஜித் குமார், கார் பந்தயத்தில் பரிசு பெற்றிருக்கிறார். தமிழர்களுக்கு அது பெருமை தானே!
Tuesday, 18 February 2025
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எப்படி? (5)
ஞாயிற்றுக்கிழமை வழிபாடு என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காலம். சுருக்கமாகச் சொன்னால் போக்குவரத்து இல்லாத காலம். இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் இரவில் வழிபாடுகள் நடக்கும். தோட்ட நிர்வாகம் லோரி கொடுத்து உதவி செய்யும். மாலை நேரத்தில் லோரியில் ஏற்றிக் கொண்டு போய் கோவிலில் இறக்கி விடுவார்கள். வழிபாடு இரவு 11.30 க்கு.
கோவில் அருகிலேயேகிறிஸ்துவ பள்ளிக்கூடம். (St.Paul's Institution) அங்குள்ள பள்ளி மண்டபத்தில் அனைவரும் தங்கி இரவில் வழிபாட்டுக்குப் போவோம். அது போன்ற நாள்களில் தியேட்டர்களில் புதிய தமிழ்ப்படம் ஒன்றை இரவு காட்சியாகப் போட்டுவிடுவார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் இரவு வழிபாடு. அடுத்த நாள் காலை பஸ் பிடித்து வீடு திரும்புவோம். வீடுதிரும்புமுன் ஏதோ ஒரு சீனர் கடையில் மீ கோரெங் சாப்பிட்டுவிட்டுத்தான் திரும்புவோம். அப்போது தமிழர்களின் சாப்பாட்டுக் கடை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.
இது தான் பண்டிகைக் காலங்களில் நமது வாடிக்கை. பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தானே. அதிக மகிழ்ச்சி என்பது: லோரியில் பயணம் செய்வது 2) சினிமா படம் பார்ப்பது! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எல்லாம் பார்த்ததில்லை.
ஆட்டு இறைச்சி சாப்பாடு என்பது பண்டிகைக்காலம் மட்டும் தான், ஓர் ஆட்டை வாங்கி நாலைந்து குடும்பங்கள் கூர் போட்டுக் கொள்வார்கள். கோழி இறைச்சி என்றால் வீட்டில் வளர்க்கப்படும் கோழி தான். அதற்கு வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வரவேண்டும். மீன் உணவைப் பார்த்ததில்லை. அதற்குச் சிரம்பான் மார்க்கெட் போக வேண்டும். ஆனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையாகத் தோன்றியதில்லை. ஏங்கியதுமில்லை.
பண்டிகைகள் அப்போதும் மகிழ்ச்சியைக் கொடுத்தன இப்போதும் கொடுக்கின்றன. வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பண்டிகை என்பதே மகிழ்ச்சியான விஷயம் தான்!
Monday, 17 February 2025
பாஷாணம் சாப்பிட்டால் என்ன ஆகும்? (4)
தோட்டங்களில் பாஷாணம் அடிப்பது சாதாரண விஷயம். செடி கொடிகள், புதர்கள், வளரும் லாலான்கள் இவைகளுக்கெல்லாம் பாஷாணம் அடிப்பது எப்போதும் உள்ளது தான்.
Sunday, 16 February 2025
ஜப்பான்காரன் காலம் (3)
ஜப்பான் காலம் என்றாலே அந்தக் காலத்து மனிதர்களுக்கு நடுக்கும் வரத்தான் செய்யும்.
எனது பெற்றோர்கள் ஏதும் கஷ்டம் அனுபவித்தார்களா என்பது தெரியவில்லை. நான் கேள்விப்பட்டதெல்லாம் எனது சித்தப்பா சயாம் ரயில்பாதை போடப்போனவர் திரும்பவில்லை.
மற்றபடி எனது காலம் முற்றிலுமாக வெள்ளைக்காரன் காலம் தான். எங்கள் வீட்டில் புதிய ஜப்பானிய பண நோட்டுகள் இருந்தன. அதனையெல்லாம் "இனி தேவை இல்லை" என்று அவைகளைப் போட்டு எரித்த சம்பவம் ஞாபகத்தில் இருக்கிறது.
எனது குடும்பத்தில் நான் ஒரே பிள்ளை. நான் பட்டினி இருந்ததில்லை. அப்போது அரிசி உணவு, மரவெள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளிக்கிழங்கு இவைகள் தான் முக்கிய உணவுகள். அரிசித் தட்டுப்பாடு இருந்ததா என்பது தெரியவில்லை. என் தாயார் அரிசியில் , ஒவ்வொருநாளும் கற்களைப் பொறுக்கிக் கொண்டிருப்பார். அது தெரியும்.
காலையில் எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டி வியாபாரத்திற்காகப் பசியாறப் போடுவார். புட்டு, தேங்காப்பால் அப்பம், தோசை - அதனால் காலைப் பசியாறல் தினசரி உண்டு. அது போக காலைப் பத்து மணிக்குப் பக்கத்து தோட்டத்திலிருந்து பாய் ஒருவர் (உத்திரபிரதேசத்துக்காரர்) வங்காளி ரொட்டி, இஞ்சித்தண்ணி விற்க வருவார். பள்ளி விடுமுறை நாள்களில் அவருக்காகக் காத்திருப்பேன். அவர் சம்பள நாட்களில் எங்கள் வீட்டில் பணம் வசூலித்து விடுவார்.
இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் அந்த நேரத்தில் பலருக்குக் கஷ்டம் என்னைப் போன்ற ஒரு சிலர் நோகாமல் வளர்ந்தோம் என்பதற்காகத்தான். எல்லாகாலத்திலும் இது உண்டு. இன்னொன்று தொழில் முயற்சிகள் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஆனால் அவர்களை வளர்த்துவிடத்தான் ஆளில்லை.
Saturday, 15 February 2025
கல்வி அதிகாரிகள் (2)
ஆறு மாதத்திற்கு ஒரு முறை கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் வருவர். அதில் ஒருவர் வள்ளிபுரம் - யாழ்ப்பாணத் தமிழர். இன்னொருவர் ஹென்ரி - இந்தியத் தமிழர். அவர்களை இன்ஸ்பெக்டர்கள் என்பார்கள். வள்ளிபுரம் மிகவும் வன்மமாகவே இருப்பார். ஹென்ரி சாந்த சொரூபி. இருவரும் மாறி மாறி வருவர். மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பவர்களோ என்னவோ தெரியவில்லை.
நான் படித்த அந்தப் பள்ளிக்கூடம் இப்போது இல்லை. தோட்ட அலுவலகத்தை பள்ளியாக மாற்றிவிட்டார்கள். இப்போது அது சீன மொழிப்பள்ளியாக மாறிவிட்டது. முன்பு பணிபுரிந்த iஇந்தியத் தொழிலாளர்கள் எல்லாம் தோட்டத்தைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டார்கள். சீனக் குழந்தைகள் வெளியிலிருந்து வந்து படிக்கின்றனர்.
Friday, 14 February 2025
ஓரிடந்தனிலே.........!
வானொலியில் நான் கேட்ட முதல் சினிமா பாடல் என்றால் அது தான் "ஓரிடந்தனிலே... நிலையில்லா உலகினிலே.....!" என்கிற வேலைக்காரி படத்தில் பி.லீலா மற்றும் ஜானகி பாடிய பாடல். உடுமலை நாராயணகவி வரிகள். (படம் 1949-ல் வெளியானது) நான் இந்தப் படத்தைப் பார்த்ததில்லை.
அப்போதெல்லாம் வீடுகளில் வானொலி பெட்டிகள் இல்லாத காலம். அந்த காலகட்டத்தில் தான் தோட்ட மக்களின் 'நலனுக்காக' அவர்கள் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, எல்லாரும் பயனடைய வேண்டும் என்பதற்காக, பொதுவான இடத்தில், ஒலிபெருக்கி வசதியுடன் வானொலி ஒன்றை நிர்வாகம் அமைத்துக் கொடுத்தது.
அப்போது நான் கேட்ட முதல் பாடல் தான் மேலே குறிப்பிட்ட பாடல். அப்படியென்றால் நான் பார்த்த முதல் சினிமா படம் எதுவாக இருக்கும்? அதையும் சொல்லிவிடுகிறேன். போர்ட் டிக்சனில் ஏதோ ஒரு தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் 'அபூர்வ சகோதரர்கள்'. எம்.கே.ராதா (இரட்டை வேடம்), பி. பானுமதி நடித்திருந்தனர். படம் ஞாபகத்தில் இல்லை. பானுமதி பாடிய 'லட்டு லட்டு மிட்டாய் வேணுமா?' என்கிற பாடல் மட்டும் ஞாபகத்தில் உள்ளது. (1949-ல் வெளியான படம்) மீண்டும் அந்தப் படத்தை நான் பார்த்ததும் இல்லை.
இந்தக் காலகட்டத்தில் எனது பெற்றோர்கள் வசித்த தோட்டம் என்றால் அது சிலியோவ், போர்ட்டிக்சன் அருகே உள்ள சென்டாயான் தோட்டம். நான் பிறந்தது சிரம்பான் மருத்துவமனையில் (1941) மற்றபடி தமிழ்க்கல்வி அதே தோட்டம் அதன் பின்னர் போர்ட்டிக்சன் ஆங்கிலப்பள்ளியில்.
தோட்டப்பள்ளியில் மூன்றாம் வகுப்புக்கு மேல் இல்லை. நான் ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்து ஏழு வயதில் மூன்றாம் வகுப்பை முடித்து விட்டேன்! பள்ளியில் ஒரே ஆசிரியர் மட்டும் தான். அவர் பெயர் அனுகிரகம். பள்ளியில் மாணவர்கள் சுமார் பத்து பேர் இருப்பார்கள். நாங்கள் தான் முதலாம் ஆண்டு மாணவர்கள். மூன்றாம் ஆண்டை முடித்த முதல் மாணவர்கள்! எனக்குத் தெரிந்த முகங்களாக யாருமில்லை. என் வீட்டிலருகிலேயே பள்ளிக்கூடம். பெருசா நடக்க வேண்டிய அவசியமில்லை.
அப்போதைய பாடப்புத்தகங்கள் எல்லாம் தமிழ் நாட்டிலிருந்து வருபவை. அதில் வரும் பாடல் ஒன்றின் ஒரு சில வரிகள் "கீச்சு கீச்சு தம்பளம், கியாங் கியாங் தம்பளம்...!" இப்படித்தான் அந்தப் பாடல் போகும். எனக்கு மனனம் என்பது வராது. இப்போதும் கூட ஒரு சினிமா பாடல் கூட எனக்கு முழுமையாகத் தெரியாது! வாசிப்பது எனது பலம் . சொல்வதெழுதல் எனது பலம். கணக்கு எனது பலவீனம்! இந்த மூன்று பாடங்கள் தான் அப்போது சொல்லிக் கொடுத்தார்கள் என நினைக்கிறேன்.
Wednesday, 12 February 2025
இனி புதியதொரு பாதை!
Monday, 10 February 2025
தைப்பூச திருவிழா வாழ்த்துகள்!
நாளை (11-2-2025) உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் இந்து பெருமக்கள் கொண்டாடும் தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!
Sunday, 9 February 2025
பெரிது படுத்த வேண்டாம்!
சுமார் இருபது இலட்சம் மக்கள் கூடுகின்ற ஒர் இடத்தில் பல குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். நமது இனமோ இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக திருந்தும் இடத்தில் இருக்கின்றனர்.
இதில் ஒரு சிலர் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்தியைப் பரப்பும் இடத்தில் இப்படித்தானா குடியைப் பரப்புவது? ஒரு சிலருக்கு அது புரிவதில்லை? எங்கே வேண்டுமானாலும் குடிப்போம் என்று குடித்துவிட்டு வம்பு இழுப்பவனை யார் என்ன செய்வது? ஒரு வேளை அவனது குடும்பம் அப்படித்தான் இருக்க வேண்டும். எப்படியோ நாளடைவில் அவர்கள் திருந்துவார்கள் என நம்புவோம்.
ஒரு வகையில் பத்துமலை தேவஸ்தானம் பாரட்டப்பட வேண்டும். தேவையற்ற காவடிகளை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டனர். குடித்துவிட்டு ஆடுபவர்களையும் கட்டுப்படுத்தி விட்டனர். ஆனால் அதனையும் மீறித்தான் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிருக்கின்றன.
பெருங்கூட்டம் கூடும் இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். முன்பெல்லாம் திருடர்கள் வேற்று இனத்தவராக இருந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. நமது பெண்களே திருடர்கள்! அது தான் கொடுமையிலும் கொடுமை. சரி, யார் திருடினால் என்ன? திருட்டு திருட்டுத்தான். வேறு வழியில்லை.
அதனால் தான் பொது இடங்களில் நகைகளைப் போடாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். என்ன செய்ய? போட்டால் தானே மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்! திருடு போனால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று புரிந்து கொண்டால் சரி! நிறைய மக்கள் கூடுகின்ற இடத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு பத்துமலை தைப்பூச திருவிழா, குறைந்த குறைபாடுகளோடு, சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிய நாமும் இறைவனை இறைஞ்சுவோம்.
Saturday, 8 February 2025
பிரபா சொல்வது சரிதான்!
13-வது மலேசியத் திட்டம் என்பது அதாவது இந்தியர் சம்பந்தப்பட்ட திட்டங்கள் வெறும் வாயளவில் தான் இருக்கின்றனவா அல்லது உண்மையில் செயல்படுகின்றனவா என்பது இந்தியர்களுக்குத் தெரியத்தான் வேண்டும்.
அது சரியாகத்தான் செயல்படுகின்றனவா என்பதை தெரிந்துகொள்ள மித்ரா கண்காணிக்க விரும்புவது சரியான முடிவு தான். என்ன தான் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. பிரதமரோ திடீரென்று ஒரு நாள் நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று தான் சொல்லுகிறாரே தவிர, நமக்கு ஒன்றும் தெரியவில்லை!
இன்றைய நிலையில் டத்தோ ரமணன் மட்டும் தான் தனது அமைச்சு என்ன செய்கிறது என்பதை அடிக்கடி மக்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அது எந்த அளவு உண்மை என்று நமக்குத் தெரியாவிட்டாலும் ஏதோ நடக்கிறது என்கிற உணர்வையாவது நமக்குத் தருகிறது என்பது மட்டும் உண்மை.
இப்போது மித்ராவே நாங்கள் அதனைக் கண்காணிக்கிறோம். எங்களுக்கு அந்த அனுமதியைக் கொடுங்கள் என்று கேட்பது நமக்கும் சரி என்று தான் படுகிறது. இந்தியர்களுக்கான திட்டங்கள் நிறையவே உண்டு. ஆனால் அது எந்த அளவில் நிறைவேற்றப்படுகிறது என்பது தான் யாருக்கும் தெரியவில்லை.
இந்த அனுமதியைக் கொடுக்க வேண்டியது பொருளாதார அமைச்சு அவர்களுக்கு அதில் எந்த பிரச்னையும் எழ வாய்ப்பில்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது. இந்தியர்களின் மீது அக்கறை உள்ள அரசாங்கம் தான் ஒற்றுமை அரசாங்கம். ஏமாற்று வேலை ஒன்றுமில்லை என்றால் அவர்கள் தயங்குவதற்கு ஒன்றுமில்லை.
மித்ராவின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மித்ராவின் தலைவர் பிரபாகரனுக்கு நமது ஆலோசனை என்னவெனில்: ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒற்றுமை அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும். ஏதாவது ஒரு காரியம் செய்து தானே இருப்பார்கள்? அப்படி வெற்றிகரமாகச் செய்த சாதனைகளைப் பட்டியிலிட்டுக் காண்பிக்க வேண்டும்., அப்படி ஒன்றுமே இல்லையென்றால் "ஒன்றுமில்லை" என்றாவது இந்திய மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
கண்காணிப்புக்குழு என்று ஒன்று இல்லாத நிலையில் மித்ரா அதனை ஏற்றுக்கொள்வதை நாம் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம். யாராவது முன்வர வேண்டும் அல்லவா? மித்ரா முன் வருகிறது. வாழ்த்துவோம்!
Friday, 7 February 2025
அப்பாடா! பிரதமர் வந்தார்!
பிரதமர் வருவாரா? அப்படியெல்லாம் அவர் வந்துவிடமாட்டார் என்பது பலருக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்ய? பிரதமர் ஆயிற்றே, அழைப்பது தேவஸ்தானத்தின் கடமை.
அவரும் பிரதமராயிற்றே! என்ன செய்ய? போகத்தான் வேண்டும். எம்.ஜி.ஆர். வேடம் போட்டாயிற்று! போகத்தான் வேண்டும்.
அப்படியும் வேண்டாம்! இப்படியும் வேண்டாம்! ஓர் இரண்டும் கெட்டான் நாளைத் தேர்ந்தெடுத்து போய் வந்துவிடுவோம் என்கிற நிலைமையில் தான் பிரதமர் வந்திருக்கிறார்.
அவரைக் குற்றம் சொல்லியும் புண்ணியமில்லை. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் நஜிப் பத்துமலைக்குப் போய் வந்தபிறகு இன்று அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை பிரதமருக்கு நெருங்கியவர்கள் சொல்லத்தானே செய்வார்கள்? வாழ்நாளெல்லாம் கொள்ளையடிப்பவன் கூட மூடநம்பிக்கைகளை நம்பத்தானே செய்கிறான்! நாம் சாதாரணமாகச் சொல்வோம்: மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பதாக. ஆனால் இன்று மடியில் கனமில்லாத அரசியல்வாதி யார்?
இப்போது பிரதமர் அன்வார் வருங்கால மலாய்த் தலைவர்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார். திருவிழா கொண்டாட்டத்திற்கு முன்பாகவே சும்மா தலையைக் காட்டிவிட்டுப் போய்விடுங்கள் என்பது தான் இதன் மூலம் அவர் கொடுக்கும் செய்தி. ஒரு வேளை அவருடைய மனசாட்சியின்படி அது சரியாகக் கூட இருக்கலாம்.
இந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம் இனி வருகின்ற திருவிழா காலங்களில் முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்காதீர்கள். அதனை அவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இந்து சமயத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுங்கள். அதனை அவர்கள் மறுக்க மாட்டார்கள். மற்ற மதத்தினரை ஏன் வற்புறத்த வேண்டும்?
இனி இதுபோன்ற விஷயங்களில் தெளிவான முடிவு எடுங்கள். தேர்தல் காலம்வரும் இவர்களுக்கு ஒவ்வொரு கோவிலிலும் என்ன செய்ய வேண்டுமோ அப்போது செய்யுங்கள்! அப்போது இவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். நமக்கும் காரியம் ஆகும்!
Thursday, 6 February 2025
இரட்டை வேடம் போடுகிறாரா PMX?
ஒரு சில விஷயங்களில் நமது பிரதமர் இரட்டை வேடம் போடுகிறாரோ என்று நாம் ஐயுற வேண்டியுள்ளது.
சில நாட்களாகவே பிரச்சனை ஒன்று மலேசியரிடையே பேசுபொருளாக விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது. ஜாக்கிம் ஒரு பக்கம் பிரதமர் இலாக்காவைச் சேர்ந்த இஸ்லாமியத்துறை அமைச்சர் ஒரு பக்கம். இவர்கள் சேர்ந்து முஸ்லிம்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது பற்றியான வழிகாட்டி ஒன்றை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.
அதுபற்றியான எதிரொலிகள் நாடெங்கும் ஒலித்தன. நாட்டில் இப்போது அப்படி என்ன பிரச்சனையை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர்? பார்க்கப் போனால் முஸ்லிம் அல்லாதவர்கள் ஜாக்கிம் போன்ற அமைப்புகளினால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை பலர் அறிவர்.
நம்மிடம் உள்ள கேள்வி எல்லாம் இஸ்லாமியத்துறை அமைச்சர், பிரதமர் அலுவலகத்திலேயே குடிகொண்டிருப்பவர். பிரதமருக்குத் தெரியாமல் அவர் சுயமாக எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். காரணம் மக்களைப் பாதிக்கக் கூடிய எந்த ஒரு முடிவையும் இஸ்லாமியத்துறை அமைச்சரால் தனிப்பட்ட முறையில் எடுக்க வழியில்லை. பிரதமர் தான் இது போன்ற பிரச்சனைகளைக் கையாள வேண்டும்.
ஒரு வேளை சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏதேனும் வரையறை வரலாம். காரணம் பிரதமரே தைப்பூச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் என்பது தெரிகிறது. அவரும் சரி அவருடைய அமைச்சர்களும் சரி தைப்பூச நிகழ்வுக்கு முன்னரே கலந்து கொள்வதை வழக்கத்திற்குக் கொண்டுவருவர் என்றே தோன்றுகிறது.
என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் சமய நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது மற்ற நாட்களில் கலந்து கொள்ளலாம் என்பதற்கான முன்னோட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதென்ன முஸ்லிம்களுக்குத் தெரியாதா? இவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
என்ன சொல்ல? முஸ்லிம்களை மேயுங்கள். மற்றவர்களின் மீது கை வைக்காதீர்கள்.
Wednesday, 5 February 2025
இவர்கள் என்ன முட்டாள்களா?
Tuesday, 4 February 2025
வா தமிழா உணவகம்!
Monday, 3 February 2025
நுழைவு தேர்வில் தளர்ச்சி!
நாட்டில் தாதியர் பற்றாக்குறை மிக மோசாமான சூழலை அடைந்திருப்பதால் இரண்டு ஆண்டுகளுக்கு (2025-2026+ -ம் ஆண்டுகளில் கல்வியில் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
Sunday, 2 February 2025
சம்பளம் உயருகிறது!
Saturday, 1 February 2025
பாராட்டுகிறோம்!
பிரதமர் அன்வார் அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள முதலீட்டார்களைச் சந்தித்து அவர்களை ஈர்த்து முதலீடுகளை நாட்டுக்குக் கொண்டுவருவது பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை. ஒப்பந்தம் போட்டுவிட்டால் அனைத்தும் வந்துவிடும் என்று பொருளல்ல. ஒரு சில வரலாம் ஒரு சில வராமல் போகலாம். வந்தால் நல்லது வராவிட்டால் கைநழுவி போய்விட்டது! அவ்வளவுதான்!