Thursday 7 July 2022

ம.இ.கா.வின் நடவடிக்கை தேவை!

 

இன்றைய ஆளும் அரசாங்கத்தில் பங்குப் பெற்றிருக்கும் கட்சிகளில் ஒன்று ம.இ.கா.  ம.இ.கா. இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி என்பது நாம் அறிந்தது தான்.

15-வது பொதுத்தேர்தல் என்பது இன்னும்  ஓர்  ஆண்டுக்குள் நடக்கும் என்னும் எதிர்பார்ப்பு இருப்பதால் கட்சிகள் எல்லாம் இப்போதே இயங்க ஆரம்பித்திருக்கின்றன. ம.இ.கா.வும் விதி விலக்கல்ல.

இந்த நேரத்தில் ஆளுங்கட்சி என்னும் முறையில் ம.இ.கா. விடம்  சில கோரிக்கைகள்  நம்மிடம் உண்டு.

ம.இ.கா.வும் தனது கல்விக்குழுவுக்குப் புதியதொரு  தலைவரை நியமித்திருப்பதே அவர்கள் தமிழ்க்கல்வி மீது அக்கறை உள்ளவர்கள்  என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளுகிறோம்.

இன்றைய நிலையில் நமது கோரிக்கை இது தான்: நாட்டில் பல்வேறு இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  இதில் பல பள்ளிகள் பல்வேறு  பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

குறிப்பாக  பல பள்ளிகள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழலில் உள்ளன. கணினி அறைகள் தேவைப்படலாம். இன்னும் சில பள்ளிகள் நீண்ட காலங்கள் இயங்குவதால், ஒரு சில பகுதிகள்,  இடிந்து விழும் நிலையில் உள்ளன.  சில பள்ளிகளில் கழிவறை மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை.

அது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்: புதிய பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன. ஆனால் அந்த கட்டடங்கள் இன்னும் காலியாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. காரணம் பயன்படுத்துவதற்கான சான்றிதழ் வெளியாக்கப்படவில்லை! கட்டியவன் பணம் வாங்கிவிட்டான்; கொடுத்தவன் கமிஷன் வாங்கி விட்டான். அவர்கள் தப்பித்தார்கள். படிக்க வேண்டிய குழைந்தைகள் காலி கட்டடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

இன்னும் சில பள்ளிகளில் இடப்பற்றாக்குறையால் கூடுதலாக  கட்டடங்களைக் கட்டிவிட்டு மேலே சொன்ன அதே பிரச்சனை தான். திறக்கப்பட முடியவில்லை! காரணம் சான்றிதழ் இல்லை!

ஒரு சுதந்திர நாட்டில், வளர்ந்து வரும் நாட்டில்,  கல்விக்கு எத்தகைய முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை இதனை வைத்தே ஒரு முடிவுக்கு வரலாம். உண்மையைச் சொன்னால் அரசாங்க அதிகாரிகள்  எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள், ஏன் தங்கள் பணிகளில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்.

இந்த பிரச்சனைகளுக்காகத் தான் ம.இ.கா.வை நாம் நாடுகிறோம். ஆளுங்கட்சியில் உள்ளவர்களின் குரல் தான் இத்தகைய சூழலில் எடுபடும்.

தேர்தலில் உணவுக் கூடைகளை, ஓட்டுக்காக, அன்பளிப்பாகக் கொடுப்பதைவிட இப்படி சில நல்ல காரியங்களைச் செய்தால் நல்ல பெயராவது கிடைக்கும். அதற்கான வாய்ப்புக்களும் வசதிகளும்  ம.இ.கா.வினருக்கு உண்டு. குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பெயர் வாங்க நினைக்காமல் நேர்மையான வழிகளில் பெயர் வாங்கப் பாருங்கள்.

இந்தியர்களின் பார்வை இப்போது மாறிவிட்டது.  ம.இ.கா. வினரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் முன்னற்றத்திற்காக இந்தியர்கள் உழைக்கத் தயாராக இல்லை! இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் உழைத்தால் இந்தியர்களும் உங்களுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள்!

உங்களின் அக்கறையைப் பார்ப்போம்!

No comments:

Post a Comment