Friday 6 May 2016

இந்திரா காந்திக்கு ...என்று தான் விடியும்?



இந்திரா காந்தியின் பிரச்சனை எந்த ஒரு முடிவும் இல்லாமல் இழுத்துக் கொண்டே போகிறதே தவிர அதற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்குமா என்பது இதுவரை நம்மால் ஊகிக்க முடியவில்லை!

இந்திராவுக்கும் - கே.பத்மநாதனுக்கும் மூனறு பிள்ளைகள் பிறக்கும் வரை ஏதும் பிரச்சனைகள் இருந்ததா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் முன்றாவது குழந்தைப் பிறந்த பிறகு தான் அவர் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். இன்றைய அவரது பெயர் ரிதுவான் அப்துல்லா.

பத்மநாதன் தனது மனைவியோடு கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால்  அவர் வீட்டுப் பெரியவர்களை வைத்து பிரச்சனைகளுக்கு ஒரு முடிவைக் கண்டிருக்க வேண்டும். அது சரிபட்டு வரவில்லை என்றால் முறையாக நீதிமன்றத்தை அணுகி விவாகரத்துக்குச் மனு செய்திருக்க வேண்டும்.

அவர் இதனை எதையும் செய்யவில்லை. அவரது நோக்கம் "உன்னைப் பழி வாங்கியே தீருவேன்!" என்னும் எண்ணத்தில் அவர் இஸ்லாமிய மதத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்!  காரணம் ஒருவன் இஸ்லாமியனாக மாறியபிறகு "என்னை எவனும் அசைக்க முடியாது" என்னும் எண்ணம் மலேசிய சூழலில் தானகவே வந்துவிடும்!

ரிதுவான் 2009 - ம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாத்திற்கு மதம் மாறினார். போகும் போது அவர் சும்மா போகவில்லை. போகும் போது அவருடைய மூன்று பிள்ளகளையும் கூடவே கூட்டிக்கொண்டு போய் விட்டார்.போனதும் முதல் வேலையாக அவருடைய மூன்று பிள்ளைகளையும் மதம் மாற வைத்தார். அப்போது அவர் பிள்ளைகளின் வயது 11, 10 கடைசியாக 11 மாதக் குழந்தை. பெயர் பிரசன்னா டிக்சா. பெரிய குழந்தைகள் இருவரும் பின்னர் தங்களது முஸ்லிம் அடையாளத்தோடு தாயாரோடு சேர்ந்து விட்டனர்.  11 மாதப் பெண் குழந்தை மட்டும் ரிதுவான் தன்னோடு வைத்துக் கொண்டார். குழந்தையின் தாயார் அதன் பின்னர் இதுநாள் வரை தனது பெண் குழந்தையைப் பார்க்கவில்லை. நீதிமன்றத்திலும் பார்க்க ரிதுவன் அனுமதிக்கவில்லை.

ஒரு பக்கம் சிவில் நீதிமன்றம் குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாலும் இன்னொரு பக்கம்  ஷரியா  நீதிமன்றம்  அந்தக் குழந்தையைத்  தாயாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிறது! வேண்டுமென்றால் தாயார் ஷரியா நீதிமன்றத்திடம் வழக்காடலாம் என்கிறது. ஷரியா நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு உரியது! ஒர் இந்து எப்படி வழக்காட முடியும்! நமக்கும் புரியவில்லை! அவர்களுக்கும் புரியவில்லை!

ஆரம்பத்திலிருந்தே ரிதுவான் நீதிமன்ற ஆணையை மதிக்கவில்லை! குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்கச் சொல்லியும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. காவல்துறையும் அவரைக் கைது செய்ய முடியவில்லை!

ஆகக் கடைசியாக உச்ச நீதிமன்றம் ரிதுவானைக் கைது செய்யும் படியும் குழந்தையைத் தாயாரிடம் ஒப்படைக்கும் படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையோ அவரைக் கைது செய்ய முடியவில்லை என்று மீண்டும் மிண்டும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறது!.

என்ன நடக்கிறது? முகமது ரிதுவான் எந்தவொரு முகவரியிலும்  இல்லாமல் மலேசியாவில் இருக்கிறார் என்கிறது காவல்துறை. அது தான் அவர்கள் சொல்லும் காரணம்.  கடந்த ஏழு வருடங்களாக அவர் எந்த முகவரியிலும் இல்லை.  ஆனால் வழக்கு நடைபெறும் போது அவர் வருகிறார்; போகிறார்! கடந்த ஏழு வருடங்களாக ஒரே ஒரு கைபேசியை வைத்துக் கொண்டு அவர் முன்னாள் மனைவியை அவ்வப்போது - திட்ட வேண்டும் என்று ஆசை வந்தால் - திட்டுகிறார்! ஆனாலும் காவல்துறையினர் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்கின்றனர்!

குழந்தையின் தாயாரான இந்திரா காந்தி தனது குழந்தையைப் பார்த்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன என்று ஏங்குகிறார். குழந்தையின் தகப்பனோ குழந்தையை நீதிமன்றத்திற்குக் கூட்டி வந்தாலும் குழந்தையைத் தாயாரிடம் காட்ட அனுமதிப்பதில்லை! ஒருவன் என்ன தான் வேறு ஒரு மதத்தில் ஈடுபடுத்திக் கொண்டாலும் அவனுடைய பிறவிக்குணத்தை மாற்ற முடியாது என்பது உண்மை தான்!

என்ன தான் முடிவு? இப்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத வாழ்க்கை.

இந்திரா காந்தி தனது குழந்தைக்காக ஏங்குகிறார். அதோடு அவருடைய பிரச்சனைத் தீரவில்லை. அவரோடு இருக்கின்ற இரு குழந்தைளும் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். அது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. அப்பனின் உதவி இல்லாமல் அதுவும் எளிதில் நடக்கப் போவதில்லை. நீதிமன்றமும் வீடுமாக வாழ்நாள் பூராவும் அலைய வேண்டிய நிலைமை.

அப்பனின் நிலை என்ன?  ஓடி, ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுகின்ற நிலைமை. நிம்மதி இல்லாத வாழ்க்கை. வெளியே எங்கும் போவதற்குப் பயம். எங்கு என்ன நடக்குமோ என்னும் பயத்தோடு வாழும் நிலைமை. என்ன தான் 'பாதுகாப்பு' என்று இருந்தாலும் அது எப்போதும் இருக்கப் போவதில்லை. பள்ளிக்குப் போகும் தனது குழந்தைக்கு என்ன நேருமோ என்னும் பயம்! எல்லாம் பய மயம்!

 எல்லா வழக்குகளிலும் குழந்தைகள் தாயாரோடு இருக்க வேண்டும் என்பது தான் பொதுவானது. அதுவும் பெண் குழந்தைகள் தயாரோடு இருப்பது பாதுகாப்பானது. இது நமது கலாச்சாரம் சார்ந்த விஷயம். ஆனால் இதனை எடுத்துச் சொல்ல நம்மால் முடியவில்லை. நமது மதம் அது அல்லவே!

எனினும் எல்லாம் நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!

ஒரு வலிமையான அரசோடு மோதிக் கொண்டிருக்கிறார் இந்திராகந்தி.அந்தப் பெற்றத்  தாய்க்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.


















No comments:

Post a Comment