Wednesday 8 August 2018

கேள்வி - பதில் (82)

கேள்வி

கலைஞர் மறைவு பற்றி...........?

பதில்

எதிர்பார்த்தது தான்.   95 வயது வரை வாழ்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. கலைஞர் வாழ்ந்திருக்கிறார்.  கடந்த ஒரு வருடமாக அவர் வாழவில்லை.  மருத்துவர்களின் உதவியால் ஏதோ நகர்த்தப்பட்டிருக்கிறார்.  அவர் எழுதவில்லை, படிக்கவில்லை, பேசவில்லை என்றால் அவைகள் எல்லாம் அவரது இயல்பு வாழ்க்கை அல்ல.

அவரைப் பற்றியான பழைய ஞாபங்கள் கிளர்ந்து எழுகின்றன.  பராசக்தி படம் வந்த நேரம்.  சிவாஜி பேசிய அந்த வசனங்கள் அந்தக் கால பொடிசுகள் முதல் இளைஞர்கள் வரை அந்த வசனங்களைப் பேசிப் பேசி தங்களை சிவாஜி கணேசனாகவே நினைத்துக் கொண்டனர்!  அந்த வசனங்களைப் பேசியவர் முன்னணியில் நிற்கின்றாரா அல்லது எழுதியவர் முன்னணியில் நிற்கின்றாரா என்று பார்த்தால் கலைஞர் தான் முன்னணியில் நிற்கின்றார். காரணம் தொடர்ந்தாற் போல் வந்த அவருடைய படங்களான மனோகரா, திரும்பிப்பார், பணம் இன்னும் தொடர்ந்தாற் போல் வந்த குறிப்பாக இல்லற ஜோதியில் வந்த "அனார்கலி" நாடகம்,  "அசோக சக்கரவர்த்தி"  ஓரங்க நாடகம் மறக்க முடியாத இலக்கியங்கள்.  

சிவாஜி கணேசன் போய்க் கொண்டிருந்த வேகத்தில் கலைஞரும் திரைப்படம், அரசியல் என இரு வழிச் சாலையில் பயணம் செய்த கொண்டிருந்தார்! கலைஞர் வேகத்தில் குறையவில்லை. அந்த வேகம் கடைசிக் காலம் வரை அவரிடம் தொடர்ந்தது . அரசியலும், எழுத்தும் அவருடைய இரு கண்கள்! இரண்டுமே அவரிடமிருந்து பிரியவில்லை! கடந்த ஓராண்டைத் தவிர!

பராசக்தி திரைப்படத்தோடு அவருடனான எனது தொடர்பு விட்டுவிடவில்லை. அப்போது எனது நண்பர் சுகுமாறன் தமிழ் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அவர் கலைஞரின் புத்தகங்களை விரும்பி வாசிப்பவர். அதனால் நானும் அவருடைய புத்தகங்களை "ஓசியில்" படிக்கும் வழக்கமுண்டு. வாங்கிப் படிக்கின்ற அளவுக்கு வயசும் போதாது,  காசும் இல்லை! அப்போது நான் படித்த, இப்போது எனது  நினைவுக்கு வருவது கலைஞர் எழுதிய "நான்சன்ஸ்",  "நேருவே திரும்பிப்போ!" புத்தகங்கள் மட்டுமே!  அவர் வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா, திரும்பிப்பார்  போன்ற திரைவசனங்களைப் படித்ததாக ஞாபகம் உண்டு, இப்போது என்னிடம் உள்ள அவருடைய புத்தகம் "நெஞ்சுக்கு நீதி" மட்டுமே! இப்போது என்னுடைய ரசனை மாறிவிட்டது. அதனால் அவ்வப்போது நாளிதழ்களில் வரும் கட்டுரைகளோடு சரி!

கலைஞர் தனது தமிழால் தமிழர்களைக் கட்டிப் போட்டவர். அவரது பேச்சால் தமிழ் இளைஞர்களை மயங்க வைத்தவர். தமிழ் மொழி தான் அவரது ஆயுதம்.  தமிழை வைத்து தமிழர்களைத் தனது வசம் இழுத்தவர். இந்த அளவுக்குத் தமிழை வேறு யாரும் பயன் படுத்தியதில்லை. அதனால் தான் தமிழ் என்றால் கலைஞர் என்று நாம் சொல்லுகிறோம்.

இந்த நூற்றாண்டில் தமிழ் என்றால் கலைஞர் தான்! மறக்க முடியாத மனிதர். தமிழக சரித்திரத்தில் அவருக்கு நிரந்தர இடம் உண்டு, 

அவருடைய மறைவு அவருடைய குடும்பத்திற்கு மட்டும் அல்ல தமிழ் நாட்டிற்கும் பேரிழப்பு.

அனுதாபம் என்பதைத் தவிர, வேறு என்ன சொல்ல?


 

No comments:

Post a Comment