Monday 13 August 2018

ஆணாவது...பெண்ணாவது...!

ஒரு பாக்கிஸ்தானிய நண்பர். வாடகைக் கார் ஓட்டுனர். கார் அவருக்குச் சொந்தமானது. பெர்மிட் அனைத்தும் அவருக்குண்டு. நல்ல மனிதர்.  மிகவும் குறைந்த வயதினர். ஆனாலும் என்னன்னவோ பெயர் சொல்ல முடியாத வியாதிகள் எல்லாம் அவருக்குண்டு. கால்கள் ஆடும். கைகள் ஆடும். இன்னும் என்னன்னவோ!  ஒரு நாளைக்கு இருபதுக்கு  மேற்பட்ட மாத்திரகளைச் சாப்பிட்டாக வேண்டும், உயிர் வாழ!

இருந்தாலும் மனிதர் மகிழ்ச்சியாகவே இருப்பார். மனைவி வீட்டோடு சரி. குழந்தைகள் இடைநிலைப் பள்ளிகளில் படிக்கின்றார்கள்.  கடைசியாக எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது. அவரால் கார் ஓட்ட முடியவில்லை. அவருடைய வருமானம் என்பது அந்த வாடகைக் கார் தான்.

இருந்தாலும் அவர் மனைவி அசாதாரணப் பெண்மணி.  "உங்களால் முடியவில்லை என்றால் என்ன? நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள்"  என்று அதிரடியாகக் கூறி விட்டார்! அப்படிச் சொல்லுவதற்கே மிகவும் துணிச்சல் வேண்டும். காரணம் பாக்கிஸ்தானியப் பெண்கள் என்றால் அது பழைய மாதிரியானப் பாக்கிஸ்தான்!. அதிகம் வீட்டை விட்டு வெளியே போவதில்லை! வேலைக்குப் போவதில்லை! வீட்டோடு சரி.

ஆனாலும் குடுமபத்தைக்  காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளதே. அப்போது தான் அதிரடியாக முடிவெடுத்தார் அந்தப் பெண்மணி. அரசாங்க உதவி எல்லாம் ஏதோ ஒரு மாதம், இரு மாதங்கள் என்பதைத் தவிர எப்போதும்  தொடர முடியாது. அதுவும் இந்தப் பெண்கள் "பிச்சை" எடுப்பதை விரும்பாதவர்கள். டாக்சி ஓட்டும் பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தாலும் ஒரு சில தினங்களில் சுதாரித்துக் கொண்டார். இப்போது அவர் தான் குடும்பப் பொறுப்பை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டுள்ளார். பொருளாதாரத்தை மனைவி பார்த்துக் கொள்ள வீட்டை கணவர் பார்த்துக் கொள்ளுகிறார்.

இது போன்ற துணிச்சல் தான் நமது பெண்களுக்குத் தேவை. தேவை ஏற்படும் போது களத்தில் இறங்க வேண்டும்.  நமது கஷ்ட நேரத்தில் யாரும் நமக்கு உதவப் போவதில்லை. நமக்கு நாமே தான் உதவிக் கொள்ள வேண்டும். "அவர்கள் அப்படிச் சொல்லுவார்கள், இவர்கள் இப்படிச் சொல்லுவார்கள்"  என்று அனைத்தையும் காதில் போட்டுக் கொண்டிருந்தால் கடைசியில் நாம் தான் அவதிப்பட வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற யாரும் கை கொடுக்க மாட்டார்கள்.

நமது துணிச்சல் தான் நமக்குக் கை கொடுக்கும். துணிச்சல் இருந்தால் தான் நாம் பிழைக்க முடியும். துணிந்தவனுக்கு துக்கம் இல்லை ! அழுதவனுக்கு அகங்காரம் இல்லை!

ஆணாவது, பெண்ணாவது! துணிவே ஒன்னாவது!

No comments:

Post a Comment