Friday 7 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (50)

வியாபாரந்தான் அவர்களது தொழில்!


 
தமிழ் முஸ்லிம்கள் பினாங்கு மாநிலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்கள்.  அவர்கள் வந்த காலந்தொட்டே வியாபாரம் தான் அவர்களின் தொழில்.  வெள்ளைக்காரர்கள் அங்கு வருவதற்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து தொழில் செய்து வருகின்றனர்.

தமிழ் முஸ்லிம்கள் சிறிய  சமூகத்தினர் தான். இப்போதும்  அதே நிலை தான். அவர்கள் அந்த காலத்து மலேயாவிற்கு வரும் போது ஆயிரக்கணக்கிலோ இலட்சக்கணக்கிலோ வரவில்லை. சிறு சிறு குழுக்கலாக வந்தவர்கள்.

ஆரம்பக் காலத்தில்  சிறிய சிறிய மளிகைக் கடைகள், உணவுக் கடைகள்,  சைக்களில் பொருள்களை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வது போன்றவைகளில் தான் அவர்கள் கவனம் செலுத்தினர். அத்தோடு இன்னும் கடற்கரை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டனர்.

அன்று அவர்களால் ஏற்படுத்தப்பட்ட பல தொழில்கள் இன்று உலக அளவில் சென்று விட்டன. இன்று அவர்களின் தொழில்கள் பல அவர்களின் வாரிசுகளால் வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன.

அன்று நமது தமிழ் முஸ்லிம்கள் ஊரறியாத  இந்த ஊருக்கு வந்து, இங்கு  வந்து வேலை செய்து, அதில் கிடைத்த ஊதியத்திலிருந்து சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்று அவர்கள் செய்த அந்த வியாபாரங்கள் தான் இன்று வளர்ந்து ஆலமரமாக 
நிற்கின்றன.

அவர்களுடைய வாரிசுகள் இன்று பல துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். வியாபாரம், அரசியல், அரசாங்க வேலைகள் என்று பெரிய அளவில் அவர்களின் முன்னேற்றம் அமைந்திருக்கின்றது. வியாபாரத்துறை இன்றளவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு கணம் அவர்களது வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். அவர்கள் இங்கு  வந்த போது பினாங்கு என்பதே ஏதோ ஒரு பெரிய கிராமமாகத்தான் இருந்திருக்க வேண்டும். துறைமுகம் இருந்ததால் அதனையொட்டி பல தொழில்கள்  தோன்றிருக்கின்றன. அந்த சூழலை வைத்து அவர்கள் தங்களது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டனர்.

தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்த போது பணத்தோடு வரவில்லை. கிடைத்த வேலைகளைச் செய்து, கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து, அதன் மூலம் சிறு சிறு வியாபாரங்கள் செய்து தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்று அந்த சிறு வியாபாரிகள் தான் இன்றைய பினாங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அவர்களும் இன்று பெரிய பெரிய நிறுவனங்களை நடத்துகின்றனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். சிறிய அளவில் வியாபாரங்களில் ஈடுபட்ட தமிழ் முஸ்லிம்கள் இன்று பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ளனர் என்பதை மறப்பதற்கில்லை.

இன்று அவர்கள் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கின்றனர்!


No comments:

Post a Comment