Sunday 2 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (47)

இது சரியான தருணமா?


புதிய தொழில்கள் செய்வதற்கு இது ஏற்ற தருணமா என்பது கேட்க வேண்டிய கேள்வி தான்.

காரணம் எத்தனையோ தொழில்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் புதியதொழில்கள் தொடங்குவதற்கு இது சரியான தருணம் அல்ல என்கிற முணுமுணுப்பு நமக்கும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும்  புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.  அப்படி ஒன்றும் முழுமையாக நின்றுப்போய் விட வில்லை. அதிலும் குறிப்பாக சிறு சிறு முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சிறிய தொழில்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு பலதொழில்கள் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்காக  நம்மின பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். காரணம் வேலை இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். வேறு வழியில்லை. தங்களுக்கு என்ன தெரியுமோ அதைச் செய்கின்றனர். பெரும்பாலும் உணவு சார்ந்த வியாபாரங்கள்.  இதில் பெண்கள் பங்கு தான் அதிகம்.

இன்னொன்று இந்த தொற்று நோய் காலத்தில் ஓரளவு பணம் வைத்திருப்பவர்களைக் கவர்ந்த தொழில் என்றால் அது மளிகைக் கடைகள். எத்தனை பேரங்காடிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருப்பவை இந்த சிறிய நடத்தர மளிகைக் கடைகள் தான். நாம் பெரும்பாலும் தூரமான இடங்களுக்குப் போக முடியாத சூழலில் இந்த கடைகள் தான் நமக்கு வாய்ப்பாக அமைகின்றன.

இன்னும் கணினி நிறுவனங்களும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன!  கையில் பணம் இருந்தால் எங்கே பணம் பார்க்க முடியுமோ அங்கே எல்லாம் பணம் உள்ளவர்கள் பாய ஆரம்பித்துவிட்டனர்!

ஆக ஏதோ ஒரு வகையில் ஒரு சில தொழில்கள் மீண்டும் தலை காட்டுகின்றன. தொழில்களை நிறுத்த முடியாது. எல்லாத் தொழில்களும் நாட்டில் மூடப்பட்டுக் கிடந்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. சிறு நடத்தர தொழில்கள்  மீண்டும் வர வேண்டும். மீண்டும் தொடக்கபட வேண்டும்.

ஆனால் உணவகத் தொழில் தான் இன்னும் நம் இனத்தவருக்கு விரும்பி செய்கின்ற தொழிலாக இருக்கிறது. அதுவும் சரிதான்.  ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் புதிதாக திறக்கப்படும் தொழில் என்றால் அது உணவகத் தொழில் தான்.

தொழில் செய்ய இது சரியான தருணமா என்று கேட்டால் "ஆம்!இல்லை!" என்று தான் சொல்ல வேண்டியுள்ளது!  எல்லாம் அவரவர் கையிருப்பைப் பொறுத்தது!

துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பார்கள். எல்லாமே சரியான தருணம் தான்!

No comments:

Post a Comment