Wednesday 5 May 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .........! (48)

சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்!    


பிரச்சனைகள் எங்கும் உண்டு. எல்லாப் பக்கமும் உண்டு. தினசரி வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் எப்படி எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறோம்! அதாவது எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும் என்கிற துணிச்சல் நமக்கு உண்டு.

ஆனால் அதுவே சொந்தத் தொழில் என்று வரும் போது அதனை சமாளிப்பதில் சிரமப்படுகிறோம். அதாவது  நாமே ஒரு பயத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறோம்!  அதற்குப் பதிலாக அதனை எளிதாக எடுத்துக் கொண்டு அதனை சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு செயல்படுவதே அறிவுடமை.

நம்மால் சமாளிக்க முடியும். அந்த ஆற்றல் நம்மிடம் உண்டு. வாழ்க்கையில் எல்லாமே ஒரு சமாளிப்புத் தன்மையைக் கொண்டது தான். சமாளிப்பது ஒரு பிரச்சனைக்குத் தற்காலிகத் தீர்வைக் கொடுக்கும்.

தொழில் செய்கின்ற ஒரு சிலரை நான் அறிவேன்.  எவ்வளவோ பிரச்சனைகள் அவர்களுக்கு உண்டு. தொழிலில் பிரச்சனைகள் என்றாலே அது பொருளாதாரச் சிக்கல்கள்  தான்! அதுவும் குறிப்பாக கடன் பிரச்சனைகளாகத் தான் இருக்கும். ஆனால் இந்த ஒரு சிலர்  இருக்கிறார்களே இவர்கள் ஒன்றுமே ஆகாதது போல சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்!  இவர்கள் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் அவைகளை மிக எளிதாக சமாளித்து விடுவார்கள்! அவர்கள் சொல்லுவதெல்லாம் ஒன்று தான்:  "இதுவும் கடந்து போகும்" என்பது தான்!  இன்னும் ஒரு சிலர் என்ன தான் தலை போகிற காரியமாக இருந்தாலும்: Take It Easy!  என்று சொல்லிவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்க போய்விடுவார்கள்! நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ  அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது!

ஒரு சில வியாபாரிகளைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கும்! எந்நேரமும் உம்ம்...என்று இருப்பார்கள்! பிரச்சனை பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிறிய பிரச்சனை அதனை சமாளிக்கத் தெரியாத அப்பாவியாக இருப்பார்கள்!

பிரச்சனைகள் எல்லாம் ஒன்று தான். அவைகளை சமாளிக்கும் திறன் நமக்கு வேண்டும். சாதாரண நடைமுறை வாழ்க்கையில் சமாளிக்கும் திறன் நமக்கு உண்டு. ஆனால் வியாபாரம் என்று வரும் போது நாம் தடுமாறுகிறோம். அந்த தடுமாற்றம் தேவையற்ற ஒன்று.

சவாலே சமாளி!

No comments:

Post a Comment