இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும், திட்டங்களையும் ண்காணிக்க சிறப்பு செயற்குழு எதுவும் தேவை இல்லை என்பதாகக் கூறியிருக்கிறார் டத்தோ ரமணன்.
அவர் சொல்லுகின்ற காரணம் எல்லாம் சரிதான். எல்லாத் திட்டங்களுக்கும், எல்லா நிதி ஒதுக்கீடுகளுக்கும் அதனைக் கண்காணிக்க ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயற்குழுக்கள் உள்ளன என்பதை யாரும் மறுக்கவில்லை.
அதில் இன்னொன்றையும் குறிப்பிட்டிருக்கிறார் டத்தோ. "பதவியில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்தால் இன்னொரு செயற்குழு என்கிற பேச்சுக்கே இடமில்லை" என்பது சரிதான். ஆனால் பதவியில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்கள் தான் நிறையவே இருக்கின்றன. அதனால் தான் மித்ரா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கின்றன!
டத்தோ சொல்லுவது போல பதவியில் இருப்பவர்கள் ஒன்று: ஒழுங்காகச் செயல்படவில்லை. அடுத்து அவர்களின் செயற்குழுவும் சரியாகச் செயல்படவில்லை. பதவியில் உள்ளவர்களும் சரியாகச் செயல்படவில்லை! அதே போல அவர்களின் செயற்குழுவும் சரியாகச் செயல்படவில்லை! சரியான முறையில் செயல்பட்டிருந்தால் ஏன் மித்ராவைப்பற்றி இத்தனை குளறுபடிகள்? அந்த குளறுபடிகளைப் பற்றி டத்தோவுக்கே தெரியும். யாரும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை!
மித்ராவுக்குத் தலைமை தாங்கிய காலத்தில் டத்தோ மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. தமிழ் பள்ளிகளுக்குத் தரமற்ற கணினிகள் கொடுக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு! அப்படியென்றால் என்ன பொருள்? அவர் பதவியில் இருந்த காலத்தில் அவர் சரியாகச் செயல்படவில்லை! அதே சமயத்தில் அவருடைய செயற்குழுவும் சரியாகச் செயல்படவில்லை!
இது ஒன்றே போதும். நிதி ஒதுக்கீடுகளையும், அமுல்படுத்தும் திட்டங்களும் சரியாகச் செயல்பட, கண்காணிக்கப்பட ஒரு செயற்குழு தேவைதான். சிலாங்கூர் இந்தியர் ஆலோசக மன்றம் சொன்ன கருத்து சரியானதே.
டத்தோ ரமணன் பயப்பட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை!
No comments:
Post a Comment