பொதுவாக இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது, அது இப்போது தான் நடந்திருக்கிறது. அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில் நடந்திருப்பது மேலும் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும்.
பிரதமர் அன்வார் பற்றி பலவேறு கருத்துகள் நமக்கு இருந்தாலும் அவருடைய அமைச்சரவையில் ஒரு தமிழ் பெண்ணுக்கு இடம் கொடுத்திருக்கிறாரே அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பிரதமரின் இந்த முடிவை அவருடைய கட்சியின், அல்லது ஒற்றுமை அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்களே அவருக்கு ஆதரவு கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தான்! அதனை நாம் சமீபத்தில் கண்டோம். ஆமாம், மித்ரா அமைப்பை பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்பதில் ஏன் அத்தனை வன்மம்? அத்தனை பேரும் மாற்றியே ஆக வேண்டும் என்று பொர்க்கொடி தூக்கினார்கள், எதனால்? "எங்களுக்குத் துணை அமைச்சர் மேல் நம்பிக்கையில்லை!" என்கிற ஆவேசம் தானே! இவர் ஒரு பெண், இவரால் என்ன செய்ய முடியும்? என்கிற வயிற்றெரிசல் ஒருபுறம்! ஒரு தமிழ் பெண் என்றால் உங்களுக்கு எவ்வளவு இளக்காரம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. சீன, மலாய் பெண்கள் என்றால் காலில் விழத்தயார்! ஒன்றை நினைவில் வையுங்கள். உங்களைவிட அவர் எந்த வகையிலும் தகுதியில் முறைந்தவர் அல்ல.
ஒற்றுமைத் துறையிலிருந்து பிரதமர் துறைக்கு மித்ராவை மாற்றியது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதனை மாற்றுவதற்கு நீங்கள் காட்டிய முனைப்பு 'ஹின்ராப்' முனைப்பு என்று சொல்லலாமா? அதனையே இன்று இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அந்த முனைப்பைக் காட்டியிருந்தால் இன்று பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்குமே! ஒரு பெண் என்பதால் அவ்வளவு தீவிரம் காட்டினீர்கள்! ஏன் இப்போது நம் கண்முன்னே உள்ள பிரச்சனைகளுக்கும் அதே தீவிரத்தைக் காட்டுங்களேன்! சும்மா வெத்து வேட்டுகள் என்று தான் உங்களைப்பற்றி நான் சொல்லுவேன்!
இப்போதும் அவரைப்பற்றி புரளி கிளப்புகிறீர்கள் என்பது நமக்குத் தெரிகிறது. உங்கள் வேலையை நீங்கள் பார்த்தாலே போதுமானது. யாருக்கும் புண்ணியமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நமக்கும் விளங்குகிறது.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்தலுக்குப் போகும் போது உங்கள் சேவை தான் முன் நிறுத்தப்படும் என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு பெண் அமைச்சரை உங்களுக்கு மதிக்கத் தெரியவில்லை என்றால் வேறு யாரை மதிக்கப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment