Monday 12 July 2021

வேற்றுக்கிரக வாசியோ?

 பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி  அவாங் எந்த கிரகத்திலிருந்து வந்திருக்கிறார் என்று நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது!

நாட்டின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஆட்சியில் உள்ள பாஸ் கட்சியினருக்கு மட்டும் இது தெரியவில்லை. அவர் ஏதோ ஒன்றுமே நடக்காதது போல் பேசிக் கொண்டிருக்கிறார்!

கோவிட்-19 எந்த அளவுக்கு மலேசியர்களைப் பாதித்திருக்கிறது என்பது ஆட்சியிலிருக்கும் பாஸ் கட்சியினர் எப்போது புரிந்து கொள்வார்களோ,  தெரியவில்லை. 

அவர்களின் கட்சி  அரசாங்கமே மலேசியாவில் நாள் ஒன்றுக்கு மூன்று தற்கொலைகள் நடைபெறுவதாக அவர்களது சுகாதார அமைச்சே அறிவித்திருக்கின்றது. இது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு அல்ல.  இது  அரசாங்கத்தின் அறிவிப்பு! 

இந்த அறிவிப்பைக் கூட பாஸ் கட்சியின் தலைவர் மறுத்தாலும் மறுப்பார். அவர் சொல்லுவது போல எந்த ஒரு நாடும் கொவிட்-19 தொற்றை முற்றிலுமாக நாட்டிலிருந்து அகற்ற  முடியவில்லை என்பது உண்மை தான். ஆனால் பல நாடுகள் தொற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அதனால் என்ன பலன் என்றால் அவர்கள் வாழ்க்கை முறை ஓரளவு பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பியிருக்கிறது என்பது தான் இங்கே நாம் கவனிக்கத்தக்கது.

நமது நிலை என்ன என்பதை ஹாடி அவாங் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். வேலை இல்லை என்பதே நமக்குப் பெரிய பிரச்சனை. இன்றை நிலையில் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் மாதத் தவணை என்கிற இரும்புப்பிடியில் சிக்கியிருக்கின்றனர். கார், வீடு, மோட்டார் சைக்கிள் தவணைகள், வீட்டு வாடைகை இப்படிப்  பல.   இன்றைய வேலை இல்லாத குடும்பங்களின் நிலை என்னவாவது? எப்படி அவர்கள் இந்த மாதத் தவணைகளைக் கட்டப் போகிறார்கள் என்பது தான் ஒவ்வொரு குடும்பத்தின் முன் உள்ள கேள்வி.

மாதம் அதிகச் சம்பளம் வாங்கினாலும்,  குறைவான சம்பளம் வாங்கினாலும் பிரச்சனை என்னவோ அதே பிரச்சனை தான். ஒன்று மாதத்தவணை இன்னொன்று வாடகை. இது தான் எல்லாரும் எதிர் நோக்கும் பிரச்சனை.

 ஒவ்வொரு மலேசியரும் இன்று இந்த நிலையில் தான் உள்ளனர். இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? முழு சம்பளம் இல்லையென்றாலும் பாதி சம்பளம் கிடைத்தால் கூட அவர்கள் சமாளிப்பார்கள்.  ஆனால் ஒன்றுமே இல்லையென்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்?

இன்று இந்த நிலையில் தான் மலேசியர்கள் உள்ளனர். வருமானம் இல்லை. தவணைகளைக் கட்ட முடியாத சூழல். அரசாங்கத்தின் குரல் வங்கிகளுக்குத் தான் ஆதரவாக இருக்கின்றது. பொது மக்களுக்காகப் பேச ஆளில்லை என்பது மிகப் பெரிய குறை.

ஒரு காலத்தில் மக்களின் காலில் விழுந்து விழுந்து கும்பிட்டவர்கள் இன்று அந்த மக்களின் மேல் சீறி சீறிப்  பாய்கின்றனர்! காரணம் இது தான் நேரம் என்று  'கறந்து' கொண்டிருப்பவர்களால் மக்களின் பிரச்சனைகளைக்  களைய முடியவில்லை! கேள்வி எழுப்பினால் கோபம் வருகிறது!

ஹாடி அவாங் மக்களின் பிரச்சனைகளை அறிய கீழே இறங்கி வர வேண்டும். கிளந்தான் மாநிலைத்தை மட்டும் மனதிற் வைத்துக் கொண்டு பேசுவது கூடாது! பதவியில் இருப்பது கிளந்தான் மாநிலம் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களும் தான்.

No comments:

Post a Comment