தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ம.இ.கா.கண்டனப் பேரணியை நடத்தும் என்று ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.
உண்மையில் இது தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனை. அவர்கள் இன்று எதிர்ப்பார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள்! அவர்களுக்கு இதெல்லாம் அரசியல். வெகு விரைவில் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கிறார்கள். அதனால் தேர்தல் காலம்வரை அவர்கள் இதுபற்றிப் பேசுவார்கள். அதன் பின்னர் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்! அவ்வளவு தான் அவர்களது எதிர்ப்பு. எல்லாம் பிசுபிசுத்துப் போகும்!
நமக்கு ஒன்று புரியவில்லை. இதனை ஏன் ம.இ.கா. கையில் எடுக்கிறது? அப்படி என்ன அவர்களுக்குத் தமிழர் மீதான கோபம்?
நம்மைப் பொறுத்தவரை சனாதனம் என்றால் என்னன்னவோ விளக்கங்கள் இருக்கலாம். ஆனால் மிகச்சுருக்கமாக மேல் ஜாதி கீழ் ஜாதி என்பது மட்டும் தான். இப்படிச் சொல்லுவதற்கே நமக்கு அருவருப்பாக இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மற்றவை எவ்வளவு தான் சனாதனம் அருமையான கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும் இந்த ஒரு கொள்கையே அதனை வெறுப்பதற்குப் போதுமானது.
நம் நாட்டில் ம.இ.கா. சாதியை வளர்த்து வரும் கட்சி என்பது மக்களுக்குப் புரியும். ம.இ.கா. தலைமைத்துவம் எல்லாகாலங்களிலும் மேல் தட்டு மக்கள் தான் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மற்றவர்களைப் புறக்கணிப்பவர்கள் என்பது தெரியும். அவர்கள் மக்கள் சக்தி கட்சி டத்தோ தனேந்திரன் நாயர் உடன் சேரவார்களே தவிர ஐ.பி.எப். கட்சியுடன் சேர மாட்டார்கள்!
இப்படிப்பட்ட கொள்கை உடையவர்கள் 'சனாதன ஒழிப்பை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மேலும் இது போன்ற பிரச்சனைகள் தமிழ் நாட்டில் எப்போதும் நடைபெரும் ஒன்று தான்! அப்போது எந்த ஒரு ஆர்வமும் காட்டாதவர்கள் இப்போது ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள்? ம.இ.கா. வுக்குச் செய்ய ஒன்றுமில்லையே என்று நினைக்கிறார்களோ!
நமது ஆலோசனை இது தான். அவர்களே அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளட்டும். இது போன்ற செயல்களால் தான் அவர்கள் வளர்ந்து வருகிறார்கள் அல்லது வீழ்ச்சி அடைகிறார்கள். இதெல்லாம் ஒரு வகையான அரசியல்.
இதனைத் தேவையற்ற கண்டனப் பேரணி என்றே நினைக்கிறேன்!
No comments:
Post a Comment