Tuesday 14 February 2023

உயிரோடு இருக்கிறார்!



 

தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் உயிரோடுஇருக்கிறார் என்பதாக  உலகத் தமிழர் பேரவைத் தலைவர்  பழநெடுமாறன்  அவர்கள் கூறியிருப்பதானது  உலகத் தமிழிரிடையே ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என நம்பலாம்.

ஆனாலும் என்ன தான் ஐயா நெடுமாறன் போன்றவர்கள் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டாலும் அதனை நம்புவதற்கு ஆளில்லை என்று தான் சொல்ல வேண்டும். பிரபாகரன் இப்படி  உயிரோடு இருப்பதாக பலமுறை செய்திகள் வாந்தாலும் அதனை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது  முடிந்துபோன  ஒரு வீர வரலாறு!

இலங்கை இராணுவமும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதற்கான தடயங்களும், ஆதாரங்களும் அனைத்தும் பக்காவாக காட்டிவிட்டது இலங்கை அரசு. இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஓடி ஒளிந்து கொண்டு வீரம் பேசும் மனிதரல்ல பிரபாகரன். அது அவரது குணமும் அல்ல. ஒரு வீரனைப் போய் இப்படி ஒரு கோழை போல சித்தரிப்பதை நாம் விரும்பவில்லை.

ஆனால் ஏன் இந்த நேரத்தில் இந்த செய்தி யாருக்குத் தேவைப்படுகிறது? இந்திய அரசாங்கம் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் நேரமிது. உலகத்தின் இரண்டாவது பணக்காரர் என்று சொல்லப்பட்ட அதானி என்பவருக்கு உதவப்போய் சிக்கலில் மாட்டியிருப்பதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. அதனால் இது திசை திருப்பும் வேலையாகவும் இருக்கலாம்! எல்லாமே அரசியல் தான்!

அல்லது தமிழ் நாட்டில் உள்ள அரசியல் நிலைமை. தமிழ் தேசியம் என்பது  இப்போது மெள்ள மெள்ள தமிழ் நாட்டில் பரவி வருகிறது. அது திராவிடக்கட்சிகளுக்கு எப்படிப் பார்த்தாலும் நல்ல செய்தியே அல்ல. அதனால் தமிழ் தேசியம் என்பது பயங்கரவாதம்  என்பதாகச் சொல்லி  அவர்களை முடக்கிவிட சாதகமாக அமையும். அதற்காகக் கூட ஐயா பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு பயன்படலாம்!

பொதுவாகவே இங்கு இந்திய அரசியலே இந்த அறிவிப்பின் பின்னணியிலிருந்து  செயல்படுவதாக நம்பப்படுகிறது! பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே அவர் இதுபோன்ற அறிவிப்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போது அதுபற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை.  ஆனால் இப்போது அது திட்டமிட்டு வைரலாக்கப்படுகிறது! காரணம் வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலும் ஒரு காரணம்!

மேதகு பிரபாகரன் உயிரோடு இல்லை என்றாலும் அவரது வீரம் என்றென்றும் பேசப்படும்!

No comments:

Post a Comment