Thursday 7 November 2019

இனி அடுத்த ஆண்டும் இல்லை..!


பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிடம் ஒப்படைப்பது பற்றி,  மகாதிர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் என்று சொல்லுவதில் நியாயமில்லை!

அவர் எப்போதும் ஒன்றை மட்டும் வலியுறுத்துகிறார்.  "அன்வார் இப்ராகிம் தான் அடுத்த பிரதமர்" என்பதை மட்டும் அவர் சொல்லத் தவறுவதில்லை.  அப்படி அவர் ஒவ்வொரு முறையும் சொல்லும் போதும் அடுத்து வருவது ஏதோ ஓர் அறிவிப்பு.  அது அன்வாருக்குப் பாதகமாகவே அமைகிறது!

சமீபத்தில் பேங்கோக்கில் ஒரு பேட்டியின் போது "அன்வார் தான் அடுத்த பிரதமர், அஸ்மின் அலி அல்ல" என்பதாகப் பேட்டி கொடுத்திருந்தார். இங்கு வந்த பிறகு  அடுத்து ஆண்டும் "நான் தான் பிரதமர்" என்பதாகக் கூறியிருக்கிறார்!

இதனையெல்லாம் குறை கூறுவதில் புண்ணியமில்லை.  அவர் தன்னை விட சிறந்த பிரதமர் இன்றைய நிலையில் யாரும் இல்லை என்கிற எண்ணத்தில் அவர் இருக்கிறார். 

அதற்கும் காரணங்கள் உண்டு.   முன்பு அவர் பிரதமர் பதவியிலிருந்து  விலகிய போது  அவரின் வாரிசுகள் என்று சொல்லப்பட்டவர்கள் யாரும் அவர் எதிர்பார்த்தபடி அவர்களின் செயல்பாடுகள் சரியாக அமையவில்லை  என்பது தான் அவர்கள் மீது இப்போதும் அவர் வைக்கின்ற குற்றச்சாட்டு!

அதனால் அடுத்த பிரதமர் யார்  என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் நினைக்கிறார்.

உண்மை தான் நாமும் அவர் கருத்தில் உடன்படுகிறோம். ஆனால் இப்போது அவர் யாரையும் வாரிசாக நினைக்க வேண்டிய நிலையில் இல்லை.  காரணம் அடுத்த பிரதமர் யார் என்கிற பிரச்சனை எப்போதோ தீர்க்கப்பட்டு விட்ட ஒரு பிரச்சனை.  சென்ற பொதுத் தேர்தலின் போது  அந்த முடிவு எடுக்கப்பட்டு விட்டது.  ஆமாம், அன்வார் இப்ராகிம் தான் அடுத்த பிரதமர் என்கிற முடிவு பக்காத்தான் தலைவர்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முடிவாகும்.  

பிரதமர் மகாதிர் தற்காலிகமாகத் தான் பதவிக்கு வந்தார்.  அடுத்த பிரதமரிடம் ஒப்படைக்கும் தேதி, ஆண்டு என்பதெல்லாம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  பதவியை ஒப்படைக்க அவர் விரும்பினாலும் அவரைச் சுற்றியிருக்கும் ஊழல்வாதிகள் அன்வார் பதவிக்கு வருவதை விரும்பவில்லை! அதன் காரணமாகத்தான்  இந்த இழுத்தடிப்பு நாடகம்!

பிரதமர் மகாதிர் எப்போது தனது பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பார் என்பது நம் முன்னே உள்ள கேள்வி.  இப்போதைக்கு அல்ல என்பது நமக்குத் தெரிகிறது.  அடுத்த தேர்தல் வரை இழுத்தடிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. அவர் பதவி விலகுவார் என்று நமக்குத் தோன்றவில்லை!

அடுத்த பொதுத் தேர்தல் வர ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அவர் விலகலாம்  என்பதே நமது கணிப்பு! இது அரசியல்! எதுவும் நடக்கும்!

ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்பதே நமது எதிர்பார்ப்பு!

No comments:

Post a Comment