Sunday 14 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி....! (1)

            உயர்வோம்!  தமிழினமே உயர்வோம்!                                                                                                                                                            

இது நமது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கிய பயணம்!

வாழ்க்கை என்றால் அது ஒரு தொழில் செய்வதாகத்தான்  இருக்க வேண்டும்.

யூத இளைஞர்கள் தாங்கள் மேற்படிப்பு படிக்கும் காலத்திலேயே அவர்கள் என்ன தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்களாம். அவர்களுக்குப் பிடித்தமான தொழில் என்பது தான் முக்கியம்.

படிக்கும் காலத்திலேயே அது பற்றியான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுவதும் அது பற்றியான செய்திகளை சேகரிப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவார்களாம்.

இன்று உலகளவில் யூதர்கள் தான் மாபெரும் தொழில்களை நடத்தி வரூகின்றனர். எந்தவொரு தொழிலை எடுத்துக் கொண்டாலும் அவர்களது பங்கு இல்லாமல் எந்த ஒரு பொருளும் இல்லை!

பொருளாதாரத்தில் அவர்களை அசைக்க ஆளில்லை. அசைக்கவும் முடியாது! அத்துணை உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

யூதர்களை அசைத்துப் பார்க்க வேண்டுமென்றால் அது ஒரே ஒரு இனத்திற்குத்தான் முடியும். சொல்லுவதை நம்புங்கள்.  அது நம்மால்  மட்டுமே முடியும். அதாவது தமிழினத்தால் மட்டுமே முடியும்.

அந்த அளவுக்கு ஆற்றலுள்ளவர்கள் தமிழர்கள். நமது சரித்திரம் அதனை நிருபிக்கின்றது. அன்று முடிந்தவர்களுக்கு இன்று மட்டும் முடியாதா, என்ன? அன்று முடிந்தது; இன்றும் முடியும். 

இடைப்பட்ட காலத்தில் நடந்தவைகளை மறந்து விடுவோம். அதனை நமது பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நாம் நமது வலிமையை பெருக்கிக் கொள்ள அந்த இடைப்பட்ட காலம் நமக்குத் தேவைப்பட்டது. அதனை நாம் சரியாகவும் பயன்படுத்திக் கொண்டோம்.

இப்போது நாம் தயார் நிலையில் உள்ளோம். நேரம் காலம் கூடி வந்தால் எல்லாமே சரியாக நடக்கும் என்பார்கள். அந்த நேரம் காலம் இப்போது கூடி வந்திருக்கிறது. எல்லாம் சரியாக நடந்து கொண்டும் இருக்கிறது.

இப்போது நமது தேவை எல்லாம் தொழிலில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்பது தான். ஆயிரம் முறை சிந்தியுங்கள். சிந்தித்த பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் பின் வாங்காதீர்கள். தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். தடைக்கற்கள் இருக்கத்தான் செய்யும். தடைக்கற்களை தூர எறிந்துவிட்டு பயணத்தைத் தொடருங்கள்.

சதாகாலமும் 'வேலை! வேலை!' என்று அலையும் சமுதாயமாக நாம் இருக்க வேண்டாம். இருந்தது போதும்.  வேண்டுமானால் தொழில் செய்வதற்காக போதுமான பணத்தைத்  திரட்டிக் கொள்ள அது உங்களுக்கு ஏதுவாக  இருக்கும்.

எந்த துறையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். வேலை செய்தால் ஏற்றம், தொழில் செய்தால் இறக்கம் என்று ஒன்றுமில்லை.  ஏற்றம் வரும் போது இறக்கமும் வரும், இறக்கம் வரும் போது  ஏற்றமும் வரும்! அதனை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதில்  தான் நமது திறமை அடங்கியிருக்கிறது.

பயணத்தைத் தொடர்வோம்! ஓர் இலட்சியத்தோடு தொடர்வோம்! பொருளாதாரம் நம் கையில் என்கிற இலட்சியப் பிடிப்போடு தொடர்வோம்!


No comments:

Post a Comment