Friday 19 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (6)

 தொழில் செய்ய அனுபவம் தேவையா?



அனுபவம் இருப்பது நல்லது என்பது தான் பொதுவான கருத்து.

அது உங்களை பல சங்கடங்களிலிருந்தும் காப்பாற்றும். ஒன்றுமே தெரியாமலும், அறியாமலும் தீடீரென்று தொழிலில் இறங்கும் போது ஆரம்பம் எது முடிவு எது என்கிற தெளிவு இல்லாமல் மனதிலே ஒரு பயத்தை ஏற்படுத்தும். ஓரளவு அனுபவம் இருந்தாலும் அது  தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

நாம் எந்த தொழிலைத் தெர்ந்தெடுக்கிறோம் என்பதில் நமக்கு  ஒரு தெளிவு  வேண்டும். சிறு தொழில் என்னும் போது பல வகையான தொழில்கள் இருக்கின்றன. அதில் நமக்கு ஏற்றது எது என்பதை ஆராய்ந்து அதில் ஈடுபட்டால் வெற்றி பெறுவது உறுதி.

இப்போது நமது பெண்களில் பலர் உணவுத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். அதில் பலர் சமைப்பதில் ஈடுபாடு உள்ளவர்கள். அவர்கள் எல்லா வகையான உணவு வகைகளைத்  தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அதனைத் தெரிந்த தக்கவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.  அவர்களே செய்து ஒரு சிலருக்கு அந்த உணவுகளைக் கொடுத்து அதன் தரத்தைப் பார்க்க வேண்டும்.  

சமீப காலங்களில்  தேநீர் விற்பனை, நாசி லெமாக், பத்தாய் விற்பனை என்று நமது இளைஞர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  பத்தாய் விற்பனையென்றால் அது எங்கு கிடைக்கும், அதன்  வாங்கும் விலை, அதன் விற்கும் விலை, காய்கள் தரமானவையா, பிஞ்சுகளா, முற்றினவையா - இப்படித் தெரிந்து கொள்ள சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன.

இதைத்தான் நாம் அனுபவம் என்கிறோம். பள்ளிக்கூட புத்தகப் பைகள், பென்சில் பேனா இன்னும் பல பள்ளிக்கூட உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள் - இவைகள் எல்லாம் எங்கே கிடைக்கும், என்ன விலையில் கிடைக்கும் - இதற்கெல்லாம் ஓரளவாவது அனுபவம் வேண்டும். அல்லது அனுபவம் உள்ளவர்களை நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொழில் ஆரம்பிக்கும் புதிதில் நமக்கு நாம் பொருள் வாங்கும் மொத்த வியாபாரிகளிடம் சரியான பழக்கம் இருக்காது. ஒரு சில வியாபாரிகள் அதிக விலை போடுவார்கள், ஒரு சிலர் குறைவான விலை போடுவார்கள். இதற்குக் காரணம் ஒருவர் தரமான பொருள்களாக விற்பவர் இன்னொருவர் மலிவான பொருள்களை விற்பவர். நமது வாடிக்கையாளர்களோ மலிவு விலையைத்தான் நாடுவர்.   நமது வாடிக்கையாளர்கள் மேல்மட்டமா, கீழ்மட்டமா என்பதைப் போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

இதைத்தான் அனுபவம் என்கிறோம். நமக்கு நேரிடையாக அனுபவம் இல்லை என்றாலும் அனுபவம் உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நம்மிடம் உள்ள பலவீனங்களைப் பலமாக ஆக்கிக் கொள்ள முடியும். ஆனால் நம்மிடம் நேரிடையான அனுபவம் இருப்பதே எப்போதுமே சிறந்தது. பிறருடைய தயவில் இருப்பது நல்லதல்ல! கவனிக்கவும்!

அனுபவம் இல்லை என்றால் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எதை எதையோ கற்றுக் கொண்டிருக்கிறோம். அது நமது உயிர்நாடியான தொழிலுக்கும் பொருந்தும். இதற்குத் தான் அதிகம் தேவை. காரணம் நமது வீட்டுப் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.அதன் உரிமையாளர் நாம் தான். அதனால் அலட்சியமாக இருந்து விட முடியாது.

அனுபவம் தேவை. இல்லையெனில் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனுபவம் தேவையே!

No comments:

Post a Comment