Monday 15 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (2)

 ஏன் பயம் வருகிறது?

எல்லாக் காலங்களிலும் யாருக்கோ ஒருவருக்கு அடிமையாக உழைத்து,  உழைத்து நம்மைப்  பழக்கப்படுத்திக் கொண்டோம்!

மாதம் முடிந்தால் சம்பளம். எப்படிப்பட்ட சம்பளம்?  பற்றாக்குறைச்  சம்பளம்! அப்புறம் கடன் வாங்க வேண்டும். களைத்துப் போய் உழைத்ததற்குச் சாராயம் அடிக்க வேண்டும்!  பற்றாக்குறைச் சம்பளத்திற்காகப் போராட வேண்டும்! தொழிற் சங்கம் வேண்டும்.

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்  நமக்குப் பயம் வரவில்லை.  எப்படியோ ஒரு வருமானம் தடையின்றிக்  கிடைத்து விடுகிறது. அது குறைந்த வருமானமாக இருந்தாலும், பற்றாக்குறையான வருமானமாக இருந்தாலும் நமக்கு எங்கிருந்தாவது கடன் கிடைக்கும்! சாராயம் கிடைக்கும்! அப்படி ஒரு வாழ்க்கைக்கு நாம் அடிமையாகி விட்டோம்!

சரி,  இந்தப் பக்கம் சீனர்களைப் பார்ப்போம். தினசரி பணம் பார்ப்பவர்கள். அது பற்றாக்குறையாகவும் இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். அதிரடியாகவும் இருக்கலாம்.ஒரு நேரம் நோகடிக்கலாம்! ஒரு நேரம் கைக்கடிக்கலாம். ஒரு நேரம் தூக்கியடிக்கலாம்! ஒரு நேரம் தூக்கிவிடலாம்! இது தான் தொழில் செய்பவர்கள் அன்றாடம்  சந்திப்பவை.

இங்கும் கடன் உண்டு. அது தங்களது தொழிலின் வளர்ச்சிக்கான கடன். கடனை வங்கிகளுக்குச் சரியாக செலுத்தினால் உங்களுக்கு இன்னும் அதிகமாகக்  கடன் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் வளர வளர நீங்களும் வளரலாம். உங்கள் தொழில் வளர வளர சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும்.

தொழிலில் நீங்கள் உயர முடியும். சாத்தியக் கூறுகள் அதிகம்.  நீங்கள் கோடிசுவரனாக ஆக முடியாவிட்டாலும் நீங்கள் இலட்சாதிபதி என்கிற அந்தஸ்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்! அப்படி இல்லயென்றாலும் ஒரு கௌரவமான வியாபாரி என்கிற முத்திரையோடு வாழலாம்.

எப்படிப் பார்த்தாலும் தொழில் செய்பவர்களில் 99% விழுக்காடு வெற்றி பெறுகின்றனர்.

ஆனால் வேலை செய்கின்ற ஒருவரின் நிலை என்ன? என்றென்றும் பற்றாக்குறை பட்ஜெட்டிலேயே வாழ்ந்து செத்துப் போகிறார்!  அவர் பிள்ளைகளுக்கும் "உனக்கு நிரந்தர வருமானம்!"  என்று அவர் வளர்ந்த பாதையையே காட்டிவிட்டுப் போகிறார்! ஓர் அடிமையாகவே இரு என்கிற பாதை அது!

வேலை செய்வதை நான் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் தொழில் செய்வதில் ஒரு சுவராஸ்யம் உண்டு. தினசரி வருமானம் ஒரே விதமாக இருப்பதில்லை.  அந்தப் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். வாடகை தர வேண்டும், பொருள்கள் வாங்க வேண்டும். அவைகளை  விற்பனைப்படுத்த வேண்டும். சம்பளம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பன போன்ற  ஒவ்வொன்றையும் கணக்குப் பண்ணி செலவு செய்ய வேண்டிய சூழல் வரும்.. ஒரு முதலாளிக்கு உள்ள அத்தனை தன்மைகளையும் நாம் வளர்த்துக் கொள்ளுகிறோம். அது தான் நம்மை தலை நிமிர வைக்கிறது.

 அது ஒரு முதலாளி என்கிற பெயரைக் கொடுக்கிறது!  நாம் வேலை செய்வதில் மாதம் முடிந்தால் பணம் கிடைக்கிறது. அதில் நமக்கு பயம் இல்லை.  ஒரு நிரந்தர வருமானம் இல்லை ஆனால் அந்த மாதச் சம்பளத்தை இங்கே ஒரே நாளில் எடுத்து விடலாம்! அது தான் நமக்குப் பயத்தைக் கொடுக்கிறது!

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. நாட்டின் பொருளாதாரம் சீனர்களின் கையில் இருக்கிறது. அவர்களிடம் அந்த பயம் இல்லை. அடிமையாக வாழ்ந்த நமக்குத் தான் அந்த பயம் இன்னும் தெளியவில்லை!

No comments:

Post a Comment