உலகில் எந்த நாடுகளிலும் இந்தியர்கள் பெயர் வாங்கி விடுவார்கள். ஆனால் அது மலேசியாவில் நடக்காது என்றே தோன்றுகிறது!
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் பல துறைகளில் பெயர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கத்தை தவிர்த்து வேறு பல தனியார் துறைகளில் இந்தியர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
அதே சமயத்தில் அமெரிக்காவில் தனது அரசாங்கத்தில் சுமார் 55 இந்திய வம்சாவளியினர் பல துறைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். அவர்கள் திறமைசாலிகள் என்பதாகப் புகழாரம் சூட்டியிருக்கிறார். உலகில் வாழும் இந்தியர்களுக்கு அது பெருமை தரும் விஷயம் தான்! அதுவும் அது அமெரிக்க அதிபரின் வாயிலிருந்து வருகின்ற செய்தி என்றால் சாதாரண விஷயம் அல்லவே!
சரி நமது பக்கம் வருவோம். இங்கு உலக அளவில் பெயர் பெற்ற இந்திய வம்சாவளியினர் என்றால் அது நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தான். ஆமாம் அவர் இந்திய வம்சாவளி தான். சிங்கப்பூரில் அவர் மருத்துவம் பயில சென்ற போது தன்னை அவர் இந்தியர் என்றே குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. பின்னாளில் அரசியல் காரணங்களுக்காக என்னன்னவோ மாற்றம்!
சமீபகாலத்தில் நாட்டில் குடியேறிய இந்திய மத போதகர் ஜாகிர் நாயக் இன்று உலகளவில் பிரபலமானவர் என்று குறிப்பிடலாம். பொதுவாக எல்லா நாடுகளும் அவரை அறிந்திருக்கின்றன. ஒரு நாடும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் ஏமாற்றத்திற்கு உரியது!
மற்றபடி யாரையும் நம்மால் குறிப்பிட முடியவில்லை. நல்ல கல்வியாளர், உலகப் புகழ் பெற்ற மருத்துவர் அல்லது விளையாட்டாளர் - இப்படி யாரும் இல்லை! ஒரு வேளை பனிச்சறுக்குப் போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றால் சிறுமி அபிராமிக்கு அந்த பெயர் வர வாய்ப்புண்டு.
வருங்காலங்களில் அரசாங்கத்தால் நமது பெருமைகள் புரிந்து கொள்ளப்படலாம். அல்லது படாமலும் போகலாம். அதற்காக நாம் திறமையற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?
ஆனால் நாம் அப்படித்தான் சொல்லப்படுகிறோம்! அப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறோம்! அது தான் கொடுமை!
இந்நாட்டில் கல்வியாளர் என்றால் அது இந்தியர்களைத்தான் குறிக்கும். ஆனால் இன்று அது கூட நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது! நமது கல்வியாளர்கள் தான் சிறந்த ஆட்சியாளர்களை உருவாக்கினார்கள். ஆனால் இன்று எத்தகைய அரசியல்வாதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தாலே போதும்! இன்றைய கல்வியாளர்கள் யார் என்பது புரியும்!
எப்படியோ அதிபர் ஜோ பைடனைப் பாராட்டுவோம். திறந்த மனதுடன் இந்தியர்களின் திறமையைப் பாராட்டியிருக்கிறார். பாராட்டுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். பாராட்டுவது என்பது கூட "இவன் என்ன ஜாதி! இவன் என்ன மதம்! இவன் எந்த நாடு!" என்கிற பின்னணியைப் பார்த்துத் தான் வருகின்றது!
நம்மால் ஏன் முடியவில்லை? முடியும்! அதற்கும் நேரம் காலம் உண்டு!
No comments:
Post a Comment