நமது தொழிலில் நீட்சி தேவை
நம்முடைய குறைபாடுகள் அனைத்தும் நாம் ஒர் தொழிலைச் செய்கிறோம். நம்மோடு அந்த தொழிலை முடித்துக் கொள்ளுகிறோம். இது நமது பெரிய குறைபாடு.
நாம் தொழிலைத் தொடங்கும் போதே ஒரு நீண்ட காலத் திட்டத்தோடு தொழிலைத் தொடங்க வேண்டும். இன்னும் நூறு ஆண்டு காலமாவது இந்த தொழில் நீடீக்க வேண்டும் என்கிற கொள்கையோடு திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் தோல்வியைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதனையெல்லாம் தற்காலிகம் என்று எடுத்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.
சீன வணிகர்கள் தோல்வியே அடைவதில்லையா? அவர்களுக்கும் அந்த பிரச்சனை உண்டு. ஆனால் அது பற்றி கவலைப்படாமல் எப்படிப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பதிலே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். நாமோ "போய் வேலை செய்யலாமா!" என்று யோசிக்க ஆரம்பிக்கிறோம்! நமது புத்தி வேலை செய்வதிலேயே குறியாய் இருக்கிறது!
நாம் செய்கின்ற தொழிலில் பிள்ளைகளுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். தொழில் செய்வதன் மூலம் தான் நமது பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்பதை அவர்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். பெரும்பாலும் நாம் அதனைச் செய்வதில்லை.
நண்பர் ஒருவர் எட்டு லாரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். தீடீரென ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். மகன் பெரிய பையனாக வளர்ந்திருந்தான். தந்தையின் பொறுப்பை அவன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டான். தொழில் ஒரு சீனருக்குப் பறி போனது. இது தான் நமது நிலை. தந்தை தவறு செய்து விட்டார். இளம் வயதிலேயே தொழிலின் மூலம் என்ன நன்மை, குடும்பப் பொருளாதாரம் எப்படி உயரும் என்று சொல்லி தொழிலில் அவனையும் ஈடுபடுத்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. ஒரு மாபெரும் தொழில் பிறரிடம் பறி போனது!
தொழிலில் நாம் வளரும் போது நமது பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளை படக்கூடாது!" என்று சொல்லுவதைக் கேவலமாக நினைக்க வேண்டும். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்று சொல்லியே பல தொழில்களை இழந்தோம்.
நாம் எந்த தொழிலில் இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் வளர்ந்து வருகிறோம். பிள்ளைகளும் அதோடு சேர்ந்து வளர வேண்டும்.
தொழிலில் ஒரு நீட்சி தேவை. அடுத்த தலைமுறைக்கு நமது தொழில் சென்று சேர வேண்டும்!
No comments:
Post a Comment