Tuesday 16 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......! (3)

 சீனர்களால் தான் முடியும்!

தொழில் என்றால் அது சீனர்களுக்கு மட்டும் தான் என்கிற ஒரு கருத்து ஒரு காலக்கட்டத்தில் நிலவியது.

இந்தியர்கள் எப்படி மலாயா தோட்டங்களில் வேலை செய்யக்  கொண்டு வரப்பட்டார்களோ அதே போல சீனர்கள் ஈய லம்பங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்டவர்கள்.  அவ்வளவு தான்.

மற்றபடி சீனர்கள் வியாபாரம் செய்ய இங்கு வரவில்லை. ஆனால் ஒன்று கவனிக்கத்தக்கது. அந்த காலக்கட்டத்திலயே நமது செட்டியார்கள் இங்கு தங்களது தொழிலை ஆரம்பித்து விட்டார்கள். வியாபாரத்திற்கான முன்னோடிகள் என்றால் மலேயாவில் நமது செட்டியார்கள் தான்.

ஆனால் சீனர்களின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு.  அதை நாம் ஆராய வேண்டாம்.

ஒரு காலக்கட்டத்தில் சீனர்கள் யாராக இருந்தாலும், நாம் அவர்களை, "தவுக்கே"  என்று கூறும் அளவுக்கு அவர்களை  உயர்த்திப் பிடித்திருந்தோம்! ஒரு நிகழ்வு எனது ஞாபத்திற்கு வருகிறது. தோட்டத்தில் வாசக்கூட்டி என்று சொல்லப்படும் இருவர் - ஒருவர் சீனர், ஒரு இந்தியர் -  வாசல் கூட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள். அந்த சீனர் கொஞ்சம் வயதானவர், இந்தியர் நடத்தர வயது. ஒரு முறை, மழை காரணமாக -  ஒரு சிறிய கால்வாயில்  மரக்கிளைகள் விழுந்து நீர் ஓட்டத்தை அடைத்துக் கொண்டது.  அப்போது அந்த சீனர் அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அந்த இந்தியர் "இப்படி செய், அப்படி செய்!" என்று அவருக்கு வழிக்காட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அவரைத் "தவுக்கே! தவுக்கே!" என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. சீனர்கள் என்றால் அவர்கள் தவுக்கே என்கிற முடிவுக்கே நமது சமுதாயம் வந்துவிட்டது!  அந்த சொல் சீனர்களுக்கு எத்தகைய உளவியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை யோசித்துப் பாருங்கள்.     சிறுசோ பெருசோ, தொழிலில் ஈடுபட்டிருக்கும்  நம்மவர்களை  "முதலாளி" என்று அழைக்கும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி அழைப்பதன் மூலம் அந்த "முதலாளி" யைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதலை அவருக்கு அது ஏற்படுத்தும்.

தொழில் என்றால் சீனர்களால் தான் முடியும் என்பது மாயை. நான் மேலே சொன்னது போல செட்டியார்கள் முன்னோடியாக இருந்து நாட்டில் தொழிலை வளர்த்திருக்கிறார்கள். நமது தமிழ் முஸ்லிம்கள்  தொழில் செய்தே வளர்ந்தவர்கள்.  தொழிலில் அவர்களின் ஈடுபாடு அதிகம்.  நமது வட இந்திய குஜாராத்தியர் (பட்டேல்) எல்லாக் காலங்களிலும் வீட்டுத் தளவாடப் பொருள்களை விற்றே  தங்களின் தொழிலை வளர்த்துக் கொண்டவர்கள். . நமது பஞ்சாபியர் பசும்பாலை விற்றவர்கள். இப்போது முழுமையாக  தொழிலின் பக்கம் இருக்கின்றனர்.

தோட்டங்களிலேயே அடைந்த கிடைந்த  நம்மவர்கள்  அப்போது சும்மாவா இருந்தார்கள்? இல்லையே! எங்களது பக்கத்து வீட்டுப் பாட்டி காலையில் பசியாறப் போட்டு அட்டகாசமாக விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவர் போடும் தேங்காப்பால் ஆப்பத்திற்கு  ஈடு இணையில்லை! இன்னும் ஒரு சிலர் தங்களது வீட்டிலேயே சிறிய மளிகைக் கடை வைத்து வியாபாரத்தை நடத்தி வந்தனர். இன்னும் சிலர் தோட்டத்தில் பெரிய அளவில் மளிகைக்கடை, காப்பிக்கடை என்று பிரமாதப்படுத்தினர். பக்கத்துத் தோட்டத்திலிருந்து "ரொட்டி பாய்"  அனுதினமும் வருவார். தேங்காப்பு ரொட்டி, காயாரொட்டி, இஞ்சித்தண்ணி, சாப்பிடாத நாளில்லை! வீட்டில் விசேஷம் என்றால் கேக் வகையறாக்கள் எங்கே கிடைக்கும்? தமிழர்கள் தான் செய்தார்கள். சட்டை சிலுவார் தைக்க வேண்டும். தமிழர்கள் தான் தைத்தார்கள்.

அப்போதும் ஓரளவு பொருளாதாரத்தை நாம் வைத்திருந்தோம். இடைப்பட்ட காலத்தில்  விடுபட்டுப் போன அந்த பொருளாதாரத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

நம்மால் முடிந்தது! இப்போதும் முடியும்! எப்போதும் முடியும்! தேவை எல்லாம்  தமிழர்களால் முடியும் என்கிற உணர்வு  தான்!

No comments:

Post a Comment