Thursday 18 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .............! (5)

 இயல்பானது என ஏற்றுக்கொள்ளுங்கள்!


தொழில் செய்வது இயல்பானது என ஏற்றுக் கொள்ளுங்கள். ஏதோ சீனன் தான் செய்வான், வெள்ளைக்காரன் தான் செய்வான் , பணக்காரன் தான்  செய்வான் - என்பதையெல்லாம் மறந்து விடுங்கள். தொழில் செய்வதற்கு யார், எவர்,  நிறம், உயரம் என்கிற  வரையறை எதுவும் இல்லை!  யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஒரு செல்வர் வீதியில் போய்க் கொண்டிருக்கிறார். தாகம் தாங்க முடியவில்லை. அதோ அருகே ஒருவர் ஐஸ் விற்றுக் கொண்டிருக்கிறார். போய் வாங்கிக் குடிக்கிறார். தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுகிறார். கார் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருக்கிறது. தாகம் எடுக்கிறது. ஒரு வியாபாரி இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறார்.  இளநீரை வாங்கிக் குடிக்கிறார் அந்த காரில் சென்றவர்.

எல்லாமே இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. யார் அவர்! யார் இவர்! என்கிற கேள்வி எழுவதில்லை. 

நாமும் இயல்பாகவே இருப்போம்.  யாரும் நம்மை வித்தியாசமாகப் பார்க்கப் போவதில்லை. சீனர்களே வியாபாரத் துறையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது ஒரு இந்தியரோ, ஒரு மலாய்க்காரரோ வியாபாரம் செய்தால் அது அதிசயமாக இருந்தது. அந்த நிலையில் கூட நமது செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியரும்  வியாபாரம் செய்து கொண்டு தான் இருந்தனர்.  இன்றைய நிலை என்பது வேறு.  வியாபாரம் பரவலாக்கப்பட்டு விட்டது. வாய்ப்புக்கள் அதிகம்.

எந்த ஊர்களுக்குப் போனாலும் செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியரும் தாங்கள் தொழில் செய்ய வந்தவர்கள் என்கிற அடையாளத்தோடு தான் இருக்கின்றனர். தொழில் செய்வதையே தங்கள் இயல்பாகவே  ஆக்கிக் கொண்டனர். 

அவர்களெல்லாம் நமக்கு முன்னோடிகள். வேலை செய்தால் தான் பிழைப்பை நடத்த முடியும் என்று எப்படி நமக்கு இயல்பாகி விட்டதோ, அவர்களுக்கு தொழில் செய்வதே  இயல்பான ஒன்றாகிவிட்டது.

வேலை செய்தால் மிச்சம் மீதி உள்ள காலத்தை ஓட்டலாம். தொழில் செய்தால் வாழ்க்கையில் உயரலாம்; வளரலாம்.

வேலை செய்வதை எப்படி நாம் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டோமோ அதே போல  தொழில் செய்வதையும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொழில் செய்வதை நமக்கு இயல்பானதாக மாற்றிக் கொண்டு நமது முன்னேற்றம் இனி தொழில் தான் அடங்கியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம். நமது முஸ்லிம் நண்பர்களுக்குத் தொழில் எப்படி இயல்பாக இருக்கிறதோ அதே போல நமக்கும் அது இயல்பாக இருக்க வேண்டும்.

தொழில் நமக்கு இயல்பானது என்கிற உத்வேகத்தோடு தொழிலில் காலடி  எடுத்து வைப்போம்!

No comments:

Post a Comment