Wednesday 17 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (4)

 சிறு தொழில்கள் மாற்றத்தை ஏற்படுத்தும்!


எல்லா தொழில்களுமே சிறிய அளவில் தான் அதன் தொடக்கம்  அமைந்திருக்கும். நமது அப்பா அம்பானியாக இருந்தால் ஒரு வேளைத் தொழில் தொடங்கும்போதே கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டலாம். ஆனால் அது தொழிலைத் தமாஷாக எடுத்துக் கொண்டு செய்வது! 

அம்பானியின் அப்பா - அவர் தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு பெட் ரோல் பங்கில் வேலை செய்தவர். தொழிலை ஆரம்பிக்கும் போது கையில் கொஞ்சம் பணத்தை வைத்துக் கொண்டு அடக்கமாகத்தான் தனது தொழிலில் காலடி எடுத்து வைத்தார்.

எல்லாத் தொழில்களின் மூலம் என்பது ஒரு சிறிய அளவில் தான். ஏன்? துன் சம்பந்தன் தொடங்கிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆரம்பம்,  ஆளுக்குப் பத்து வெள்ளி,  என்று சொல்லித்  தான் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அதன் சொத்து மதிப்பு என்பது கோடிக்கணக்கில்! இது நமது ஒற்றுமையின் அடையாளம்.

தொழில் செய்ய நம்மிடம் உள்ள பணம் அனைத்தையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என்பதல்ல. ஒரு சிறிய அளவில் தொழிலில் முதலீடு செய்யுங்கள். அதனை வைத்தே தொழிலை வளர்த்தெடுங்கள். சிறிய அளவில் என்னும் போது வருமானம் சிறிய அளவில் தான் இருக்கும். அது பாதகமில்லை. சிறிய வருமானம் என்றாலும் தொழிலில் உள்ள  நெளிவு சுளிவுகளைப் படிக்கிறீர்கள். ஒரு தொழிலை நிர்வகிக்கும் திறனைக் கற்றுக் கொள்கிறீர்கள். அது உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். சுயகாலில் நிற்கும் தகுதியைப் பெறுகிறீர்கள்.  பயத்தைப் போக்குகிறீர்கள்.

வசதி படைத்தவர்கள் பெரிய தொழில்களுக்குப் போகலாம். நட்டம் ஏற்பட்டால் தொழிலை மாற்றிக் கொள்ளலாம்.   இது அனைவருக்கும் பொருந்தாது.  அந்த அளவு வசதி உள்ளவர்களை வரவேற்கிறோம்.

ஆனால் நமது தேவை அடிமட்டத்தில் உள்ளவர்கள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதே. அதனால் தான் சிறிய தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அரசாங்கமும் அதனை ஊக்குவிக்கிறது.

சீனர்கள் எந்த அளவுக்கு பெரும் தொழில்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அதே அளவு சிறு தொழில்களையும்  அந்த சமூகம் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இன்றைய ஒரு சிறிய தொழில் நாளை ஒரு பெரிய தொழிலாக மாற அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் பல தொழில்கள் மாறி இருக்கின்றன. இன்றைய "மைடீன் பேரங்காடி" பற்றி தெரியாதவர் யாருமில்லை.   கிளந்தான், கோத்தபாருவில்   ஒரு சிறிய பலகைக் கடையில் விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள் போன்றவைகளை வைத்து அவர்களின்  தொழில் 1957-ல் ஆரம்பிக்கப்பட்டது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய அதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வளர்ச்சி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சிறிய அளவில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது ஒரு சிலருக்குக் கௌரவ குறைச்சலாக இருக்கலாம். ஆனால் தொழில் என்று வந்து விட்டால் நாணயம் தான் முக்கியமே தவிர நமது கௌரவம் அல்ல. அவர்கள் ஒதுங்கிக் கொள்வதே நல்லது.

தொழில் என்பதே கௌரவம் தான். நமது வாழ்வின் பாதையை மாற்றியமைக்கும் தொழில், சிறியதோ பெரியதோ, ஏற்றுக் கொண்டு செயல்படுங்கள்.


No comments:

Post a Comment