Tuesday 23 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (10)

 தொழிலில் தோல்வி  என்பதே இல்லையா?

தொழிலில் தோல்வி என்பது இல்லையா? அப்படி சொல்ல முடியாது. அதுவும் தொழிலில் இறங்கும் முதல் தலைமுறையினர் தோல்வியைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.

இது உங்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் பொருந்தும். அதுவும் முதல் தலைமுறை வணிகர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.  நான் தோல்வியே அடையவில்லை என்று சொல்லக்கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லை.

ஆனால் இவர்களைத் தோல்வியாளர்கள் என்று சொன்னாலும் அவர்கள் தங்களைத்  தோல்வியாளர்களாக  ஏற்றுகொள்ளவில்லை என்பதைத்   தான் இங்கு நான் குறிப்பிட வேண்டும்.  தோல்விகளை எப்படி சரிசெய்வது என்பதில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர தொழிலை விட்டு ஓடிவிட வேண்டும் என்று அந்த நேரத்திலும் அவர்கள் யோசிக்கவில்லை. அதனால் தான் செட்டியார்களும், தமிழ் முஸ்லிம்களும், குஜாராத்தியர்களும் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஓடுகின்ற எண்ணமே அவர்கள் மனதில் ஏற்படுவதில்லை.

எனக்கு அறிமுகமான முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தார். அது ஒரு பாதிக் கடை. தொழில் பிரமாதம் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் தொழில் நடந்தது. சமயங்களில் நேரடியாகவே  பொருள்களைக் கொண்டு போய் கொடுப்பார். அந்த கடைக்கு வாடகை. வீட்டுக்கு வாடகை. பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் கூட்டாளிகளும் வந்து பொருள்களை வாங்குவார்கள். அவருடைய மகள் கடைக்காக வாய் மூலம் தனது பள்ளி நண்பர்களுக்கு  விளம்பரம் கொடுப்பார். தொழில் நடந்து கொண்டு தான் இருந்தது.  அவர் ஓடவில்லை. ஒளியவில்லை. அவருடைய மகள் வேலைக்குப் போனார். அவர் மூலம் கடைக்கு வியாபார  கடன் உதவி  கிடைத்தது. கடையைப் பெரிய அளவில் விரிவு படுத்திக் கொண்டார். நாம் துணிந்து நின்றால் தடைகளைத் தகர்த்தெறியலாம் என்பது தான் இதன் செய்தி. குறைவான வருமானமாக இருந்தாலும் தொழிலைப் பாதியிலேயே நிறுத்தி விடாதீர்கள்.  தொடருங்கள் என்பதுதான் முக்கிய செய்தி. தொடரும் போது தக்க நேரத்தில் தக்க உதவிகள் வந்து சேரும் என்பது தான் விதி.

சீனர்களைப் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம்.ஆனால் அவர்கள் எத்தகையப் பொருளாதாரக்  கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறோம். அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். நட்டம் அடைந்தாலோ அல்லது தொழிலை விரிவுபடுத்த வேண்டுமென்றாலோ வங்கிகளை நாடுகிறார்கள். வங்கிகள் உதவுகின்றன.  வங்கிகள் சீனர்களுக்குத் தான் உதவுகின்றன இந்தியர்களுக்கு உதவுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நம்மிடையே உண்டு. அது தவறு.

சீனர்களுக்குத் தொழில் தான் நிரந்திர வயிற்றுப்பிழைப்பு. அதனால் வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதை முதல் கடமையாக நினைக்கின்றனர். நாமோ தொழிலில் நட்டம் என்றால் தொழிலை மூடிவிட்டு தப்பிக்க நினைக்கிறோம்!  பெரும்பாலான இந்தியர்கள் நிலை இது. தொழிலுக்கு நாம் இரண்டாவது இடத்தைக் கொடுக்கிறோம். சீனர்கள் முதலிடத்தைக் கொடுக்கிறார்கள். அதனால் வங்கிகளும் சீனர்களுக்கு முதலிடத்தைக் கொடுக்கின்றன.

தொழிலில் தோல்வி வரும். அடுத்து வெற்றி வரும். தோல்விக்கு அடுத்து வெற்றி தானே! துணிவு தான் முக்கியம். எல்லாம் சரியாகும் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

தொழில் செய்ய வருகிறோம். எதற்கு வருகிறோம். நமது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் முதல் நோக்கம். அதில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். வெற்றி தோல்வி வரத்தான் செய்யும். ஏன் தோல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?  வெற்றி வரும் என்று நினைத்து செயல்படுவோமே!

    

No comments:

Post a Comment