Wednesday 10 March 2021

கட்சித் தாவல் குற்றமா?

 கட்சித் தாவல் என்பது குற்றமா? என்கிற கேள்வி நம்மிடையே எழுவது இயல்பு தான்!

ஆனாலும் அது குற்றமில்லை என்பதை நாம் அறிந்து தான் வைத்திருக்கிறோம். அது குற்றம் என்றால் இந்நேரம் எத்தனையோ அரசியல்வாதிகள்  சிறைகளிலில் அடக்கமாகி இருப்பார்கள்! அது இல்லை என்பதால் தான் கட்சித் தாவல் மிகவும்  இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது!

கடைசியாக நமது சட்டத்துறை அமைச்சர் கூட கட்சித்  தாவல் குற்றமாகாது என்று சமீபத்தில் கூறியிருக்கிறார். பாவம்! சட்டத்துறை அமைச்சரே  இவ்வளவு கீழே  இறங்கி வந்து இந்த தகவலை மலேசியர்களுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்! என்ன செய்வது? அது தான் ஜனநாயகம்!

கட்சித் தாவல் குற்றம் என்றால் ஒரு நிலையான அரசாங்கம்  கவிழ வழியில்லை. அப்படி ஒரு சட்டம் இல்லாததால் எதுவும் நடக்கலாம். அதைத் தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்! மிக அநாவசியமாக தாவல்கள் நடந்து கொண்டிருக்கின்றன!  அதனால் பொது மக்களுக்குத் தான் நட்டம். 

ஒரு நிலையான  அரசாங்கம் நடப்பில் இல்லாததால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்.  எந்த ஒரு முடிவையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. அரசாங்கம் கவிழ்ந்து விடக்கூடாது  என்பதே அவர்களின் வேலையாகப் போய்விட்டது! கவிழ்ந்து விடக்கூடாது அத்தோடு பிரதமர் பதவியையும் விட்டு விட முடியாது! கோவிட்-19 வைத்து அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

சரி, கட்சித் தாவல் குற்றமில்லை. ஏற்றுக் கொள்ளுகிறோம். நமது நாட்டின் முதல் கோட்பாடு என்பதே "இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்!. நமக்கு இறைவன் மீது கூடவா நம்பிக்கை இல்லை?

மக்களை ஏமாற்றுவது இறைவனை ஏமாற்றுவது  தானே! அதைவிட கட்சித் தாவலின் போது கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறதே, இது என்ன நமது பக்தியையா குறிக்கிறது?  சுற்றி வளைத்துப் பார்த்தால் அது மக்களின் பணம் தானே!

பணத்தின் மீது குறிவைத்து கட்சித் தாவல் நடந்தால் அவனை  என்னவென்று சொல்லுவது? பக்திமானா? புனிதனா? சட்டப்படி அவர் குற்றம் செய்யவில்லை என்று சட்டம் சொல்லுகிறது. ஆனால் ஆன்மீகம் அவனை குற்றவாளி என்கிறதே! சட்டம் அவனுக்குப் பயத்தைக் கொண்டு வரவில்லை. ஆன்மீகமும் அவனுக்குப் பயத்தைக் கொண்டு வரவில்லை! கடவுள் இறங்கி வந்து தண்டனைக் கொடுக்கப் போவதில்லை! அதனால் அவன் கடவுளைப் பார்த்துப் பயப்படப் போவதும் இல்லை!

அதனால் நாம் சொல்ல வேண்டியது ஒன்று தான். இனி புதிய தேர்தல் நடந்து, நாடாளுமன்றம் கூடும் போது முதல் தீர்மானம் கட்சித் தாவல் குற்றம் என்று  சட்டம் இயற்றுவது தான். அதை விட வேறு முக்கியமானது ஏதும் இல்லையே!


No comments:

Post a Comment