Thursday 4 March 2021

மித்ராவின் நிலை என்ன?

 எந்த பெயரில் அழைத்தாலும் சரி - அது செடிக் அல்லது மித்ரா - எப்படிச் சொன்னாலும் அந்த உதவி நிதி இந்தியர்களுக்குப் போய்ச்  சேரவில்லை என்பதில் தான் போய் முடிகிறது!

இதில் ம.இ.கா.வினர் மிகத் திறமைசாலிகள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு, எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவைகளை நல்ல பிள்ளைகளைப் போல  அப்படியே கொண்டு போய் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுவது என்கிற அவர்களின் கொள்கை அவர்கள் வட்டாரத்தில் அவர்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கிறது!  இந்தியர்களுக்கு கிடைத்ததெல்லாம் நாமம் மட்டும் தான்!

பக்காத்தான் ஆட்சி தொடர்ந்திருந்தால் பணத்தை எப்படி எப்படியோ கொடுத்து முடித்திருப்பார்கள்!  பணம் இந்தியர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுகிறதோ இல்லையோ வேறு வகையில் இந்தியர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். ஏதோ கோவில் குளம், புனிதப்  பயணம், சில பல இயக்கங்கள் என்றாவது போய்ச் சேர்ந்திருக்கும். இப்போதெல்லாம் தொழில் துறையில் இளைஞர்கள் எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை மித்ராவால் கணிக்க முடியவில்லை!

ஆனாலும் வழக்கம் போல் தொழில் துறையில் இருக்கும் இளைஞர்கள் மித்ராவிலிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்! காரணம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு  அதாவது வளர்ந்து விட்ட தொழிலதிபர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வளர்கின்ற தலைமுறையினரை புறக்கணிப்பது என்பதாக இந்த தரப்பு குற்றம் சாட்டுகிறது!

யாரையும் குற்றம் சொல்லி புண்ணியமில்லை. வளர்ந்துவிட்டவர்கள் யார் என்று கண்ணுக்குப் பளிச் என்று தெரிகிறது!  வளராதவர்கள் இன்னும் தடுமாற்றத்திலேயே இருப்பதால் அவர்களால் தங்களது வளர்ச்சியை உறுதிபடுத்தப்பட முடியவில்லை! அதனால் அவர்களால் எந்த அமைப்பிலிருந்தும் பயன் பெற முடிவதில்லை!

எப்படியோ தொழில் செய்ய ஆர்வமுல்ல இளைஞர்கள் மித்ராவை நம்பியோ செடிக்கை நம்பியோ தொழிலை ஆரம்பிப்பதில்லை! எல்லாமே சொந்தப் பணம், சொந்த முயற்சி, சொந்த ஏற்றத் தாழ்வுகள் - எல்லாமே தங்களின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டவைகள் தாம்! அதனால் தான் அவர்களால் தொழிலில்  நீடிக்க முடிகிறது!

வருங்காலங்களிலாவது இந்த அமைப்புகளின் மூலம் நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்!


No comments:

Post a Comment