Friday 12 March 2021

மீண்டும் போட்டியிடுவாரா?

 அடுத்த  15-வது பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதிர் போட்டியிடுவாரா என்கிற கேள்வி அவ்வப்போது எழுந்து கொண்டு தான் வருகிறது!

ஒரே காரணம்  அவருடைய வயது தான். வருகிற ஜூலை மாதம் அவர் தனது 96 -ராவது  பிறந்த நாளைக்  கொண்டாட விருக்கிறார். அவர் வயதைப் பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை! நாம் தான் கவலைப்படுகிறோம்!

பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. தனது வேலையை அல்லது தனது தொழிலை நேசிப்பவர்களுக்கு வயது பற்றி அவர்கள்  கவலைப்படுவதில்லை. அல்லது அது பற்றி சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்பார்கள்.

டாக்டர் மகாதிர் அரசியலை நேசிப்பவர்.  மலாய்க்காரர் முன்னேற்றத்திற்காக பெரும் அளவில் பாடுபட்டவர். இன்று அரசியலில் இருப்பவர்கள் பெரும்பாலும் அவரது காலத்தில் கல்வி கற்று களத்தில் இருப்பவர்கள்.

இன்றளவும் அவருக்கு மக்களிடையே செல்வாக்கு உண்டு. ஏன் அவர் கொண்டு வந்த பல மாறுதல்களினால் இந்தியர்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். இன்று இந்தியர்கள் தொழிலில் காலூன்றி இருக்கிறார்கள் என்றால்  அதற்கு அவரும் ஒரு காரணம். 

மலாய்க்காரர் முன்னேற்றம் என்பது  அவர் காலத்தில் தான் வெரூன்றியது. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புக்கள் அனைத்தும் அவர் காலத்தில் தான் சரியான பாதை அமைக்கப்பட்டது. இன்று வெளிநாட்டு நிறுவனங்கள் பல உள்ளன. பாதைப் போட்டவர் டாக்டர் மகாதிர் தான். அதனால் வேலை வாய்ப்புக்கள் நிறைய உருவாக்கப்பட்டன. உள் நாட்டில் ஆள் பற்றக்குறையினால் வெளி நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வருவிக்கப்பட்டனர்.

எப்படிப்  பார்த்தாலும் மலேசியாவின் அபரிதமான வளர்ச்சிக்கு  அவர் தான் காரணம். அவருக்குப் பின் வந்தவர்கள் நாட்டை நாசமாக்கி விட்டார்கள் என்பது வருத்தமான செய்தி.

அவருக்கு வயதாகிவிட்டது என்று நாம் தான் கவலைப்படுகிறோமே தவிர அவர் எப்போதும் போல அதே பழைய மிடுக்குடன் அரசியல் பேசிக் கொண்டும், ஊடகங்களைச் சந்தித்துக் கொண்டும், வெளி நாட்டுப் பிரமுகர்களைப் பார்த்துப்  பேசிக் கொண்டும் தனது நேரத்தைப் பயன் உள்ளதாகவும் பார்த்துக் கொள்கிறார்.

அவர் மீது நமக்குக் கருத்து வேறு பாடுகள் இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்!  அவர் நூறு வயது வரை வாழ வேண்டும்! நமது வாழ்த்துகள்!


No comments:

Post a Comment