Wednesday 24 March 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (11)

 


துணிச்சலோடு செயல்படுங்கள்

தொழில் என்றாலே சாதுரியம், துணிச்சல், சமயோசித புத்தி  இப்படி சில குணாதிசயங்கள் உண்டு.

முதலில் தலையாயது தொழிலுக்கு வந்த பிறகு "போய் வேலை ஏதாவது செய்வோம்!" என்கிற எண்ணத்தை முற்றிலுமாக  மறந்து விடுங்கள். அப்படி ஒரு மனநிலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் தொழில் செய்ய இலாயக்கில்லாதவர்! ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் எதற்கும்  உதவாது!    

                                                                                                                                             சிலநேரங்களில் நமது பொருட்களை மூன்று மாத தவணையில்  கொள்முதல் செய்வோம். பணம் கட்ட முடியாத சூழ்நிலை. கையைப் பிசைந்து கொண்டு இருப்போம். என்ன செய்வது? ஒன்றும் புரியாது!

நான் என்ன செய்தேன்? வாரா வாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிக் கொண்டு வருவேன். இடையிடையே தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்வேன். பணம் அவருக்குத் தொடர்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கும். அதனால் அவரும் அலட்டிக் கொள்ள மாட்டார்.  நான் "இண்டா வாட்டர்" (Indah Water) நிறுவனத்திற்கு இரண்டாயிரம் வெள்ளி கட்ட வேண்டியிருந்தது. என்ன செய்தேன்?  வாரா வாரம் பத்து வெள்ளி அனுப்பி பிரச்சனையை  சரி செய்தேன்! மாதா மாதம் டி.என்.பி.யின் மின்சார கட்டணத்தைக் கட்ட வேண்டும். அதனை மாத ஆரம்பத்தில் பாதியும்  மாத முடிவில் பாதியும்  கட்டுவேன். நான் வாங்கிய கடனைப் பல ஆண்டுகளாகக்  கட்ட முடியவில்லை. அதனால் கடிதம் எழுதி அவர்களின் அனுமதி பெற்று மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க அனுமதி பெற்று அதன் படி கட்டி முடித்தேன்.

தொழில் செய்பவர்களுக்கு இப்படியெல்லாம் வரத்தான் செய்யும். நான் ஓடுவதற்குத் தயாராக இல்லை. எதிர்த்து நின்றேன். அவ்வளவு தான்! தொழில் செய்பவர்கள் இதையெல்லாம் தாண்டித் தான் வர வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம்.  நம்மிடம் நேர்மை இருக்க வேண்டும். நான் யாரிடமிருந்தும் தப்பிக்க நினைத்ததில்லை.

நாம் தொழிலை ஆரம்பித்ததும் கொட்டோ கொட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.  தொழில் என்றவுடன்  மூன்று நான்கு மாதத்தில் பணத்தைக் குவித்து விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இவர்கள் ஏதோ ஒரு திட்டத்தோடு வருபவர்கள். "பார்ப்போம்! முடியவில்லை என்றால் மீண்டும் வேலைக்குப் போய் விடுவோம்!". இந்த மனப்பான்மை உங்களைத் தொழிலில் வெற்றியைக் கொண்டு வராது.

தொழில் என்றாலே துணிச்சல் தான். பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் தான். பெரிய அளவில் வங்கிக் கடன்களை வாங்கி பெரிய அளவில் தொழில் செய்கிறார்களே அதெல்லாம் எப்படி முடிகிறது?  எல்லாம் ஒரு நம்பிக்கை தான். அசாதாரண துணிச்சல் தான்.

ஆனால் கடனே வாங்காமல் தங்களைப் பெரிய அளவில் தங்களை  வளர்த்துக் கொண்டவர்களும் உண்டு. அதற்கு எனது நண்பரே சாட்சி. தனது முதல் கடையில் வந்த வருமானத்தை வைத்தே நான்குக் கடைகளை வாங்கிப் போட்டார். ஒரு கடையை வாடகைக்கு விட்டார். மற்ற கடைகள் அவரது பிள்ளைகள் நடத்துகிறார்கள். அது அசாதாரண துணிச்சல் தானே. கடைசி காலம் வரை ஒரு மோட்டார் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வந்தார்! அவருக்கு அது போதும்!

துணிச்சலோடு செயல்படுங்கள். தொழில் என்றால் இன்னும் அதிகமான துணிச்சலோடு செயல்படுங்கள். வெற்றி தானாக வரும்!

No comments:

Post a Comment