Tuesday 27 December 2022

இது அவரது இயல்பே!

 

                                                                டாக்டர் மகாதிர்

டாக்டர் மகாதிர் மீண்டும் தனது இயல்பான குணத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்!

அவரின் இயல்பான குணம் என்பது தன்னைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டும். அப்படி பேச வேண்டுமென்றால் அவர் பதவியைவிட்டு விலகிய பின்னர் யார் யார் பதவிகளுக்கு வந்தார்களோ அவர்களையெல்லாம் குறை கூற வேண்டும்! இது தான்,  இன்றுவரை,  அவர் கடைப்பிடித்து வரும் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்!

அவர் பதவியில் இருந்த காலத்தில் அனுதினமும் வெளிநாட்டு தூதர்கள், பத்திரிக்கையாளர்கள், முக்கியமான பதவிகளில் உள்ளவர்கள் - இப்படி பல்வேறு தரப்பினர் அவரைச்  சந்திப்பதை  வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அவருக்கு நிறைய மதிப்பு, மரியாதைகள் இருந்தன.  உலகளவில்  பெயர் பெற்றிருந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட  மாலை மரியாதைகள்!

அப்படியே சுமார் 22 ஆண்டு காலம் பதவியில் இருந்து கொண்டு  ஆரவாரமான வாழ்க்கையை வாழ்ந்தவர்.  பிரச்சனை என்னவெனில் ஓய்வுக்குப் பின்னரும் அதே ஆரவாரம் தொடரும் எனும் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை! இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  பதவியில் இருக்கும் போது தான் வரவேற்பும், மாலை மரியாதைகளும்! பதவியில் இல்லாத போது அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும்!

இப்படி ஒரு சூழலை அவர் எதிர்பாரக்கவில்லை! இதன் பின்னர் உலக அரசியல்வாதிகளை ஈர்ப்பதற்கும், உள்ளூர் மக்களை ஈர்ப்பதற்கும் பலவித உபாயங்களையும் உபத்திரவங்களையும் அவர் கையாண்டார். அதில் முக்கியமானது 'பிரதமர் சரியில்லை!' என்கிற அவரின் குற்றச்சாட்டு!

டாக்டர் மகாதிர் தனது பணி ஒய்வுக்குப்பின்னர் வந்த அனைத்து பிரதமர்களையும் குறை கூறாமல் விட்டதில்லை! ஒவ்வொரு பிரதமரும் அவரிடம் ஏதோ ஒரு வகையில் பணி செய்தவர்கள் தாம். துணைப்பிரதமராகவும்  இருந்தவர்கள்! ஆனால் அவர் அனைவரையுமே குற்றம் சொன்னார்.

இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.  மலேசியா இந்த அளவுக்கு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படுவதற்கு டாக்டர் மகாதிரே காரணம் என்பது தான் பலரது குற்றச்சாட்டு. அன்று இவர் செய்த பல தவறுகள் தான் நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரோ,  தான் செய்த தவறுகள் தெரியக்கூடாது  என்பதற்காக அவருக்குப் பின் வந்த பிரதமர்களைத் தொடர்ந்தாற் போல குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்! 

எப்படி இருந்தாலும் மக்கள், கடந்த பொதுத்தேர்தலில், அவருக்குச் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டனர். இப்போது அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! அவ்வளவு தான்! எந்தக் காலத்திலும் தனது இயல்பை மாற்றிக்கொள்ள முடியாதவர்!


No comments:

Post a Comment