நமது நாட்டு துணைப்பிரதமர், ஸாஹிட் ஹாமிடி அவர்களால் இந்தியர் விவகாரங்களுக்காக, அவருக்கு வேண்டிய யாரோ ஒருவரை நியமித்து அதன் மூலம் இந்தியர்களின் வாழ்க்கையைப் பிரகாசிக்க நினைத்ததற்கு நன்றி! நன்றி!
ஆனால் இந்திய சமுதாயம், துணைப்பிரதமர் தனது அமைச்சின் கீழ் இந்தியர் விவகாரம் ஒன்றினை அமைத்து அதன் மூலம் இந்திய சமுதாயத்தை முன்னேற்றலாம் என்பதே தவறான கொள்கை என்பதை அவர் உணர வேண்டும்.
ஸாஹிட் ஹமிடி அவர்கள் இன்றைய அம்னோவின் தலைவர். அது மட்டும் அல்ல. தேசிய முன்னணியின் தலைவர்..அவரது கட்சியின் ஆட்சியில் தான் இந்தியர்களின் முன்னேற்றம் என்பது கடைசிகாலத்தில் மிகவும் பின்நோக்கிப் போனது! அதன் பயனாகத்தான் தேசிய முன்னணியும் ம.இ.கா.வும் கடந்த இரண்டு போதுத்தேர்தல்களிலும் பலத்த அடிவாங்கின என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
இவ்வளவு தெரிந்தும் இந்தியர்களின் விவகாரங்களை மீண்டும் தேசிய முன்னணியிடம் ஒப்படைப்பது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது! தேசிய முன்னணியும் ம.இ.காவும் அழிவு சக்திகள்! தேசிய முன்னணியில் உள்ள அம்னோ மலாய்க்காரர்களின் பெயரைச்சொல்லி தலைவர்கள் தான் வயிறு வளர்த்தார்கள்! அதே போல ம.இ.கா. தலைவர்களும் தங்களைத்தான் கவனித்துக் கொண்டார்களே தவிர மனசாட்சியில்லாமல் இந்தியர்களைப் புறக்கணித்தார்கள்! ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தான் இன்னும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!
இந்த நேரத்தில் நாம் சுட்டிக்காட்டுவதெல்லாம் தொடர்ந்தாற் போல இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த ஒரு கட்சியை நாம் எப்படி அவர்கள் இனிமேல் உதவுவார்கள் என்று ஏற்றுக்கொள்வது? அறுபது ஆண்டுகால துரோகத்தை அப்படியே தலைகீழ் மாற்றி அமைத்து விடுவார்களா?
இல்லை! அவர்கள் இந்தியர்களை மன்னிக்கமாட்டார்கள்! ஏன்? நம்பிக்கைக் கூட்டணிக்கு இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை எண்பத்தைந்து விழுக்காடு என்று சொல்லப்படுகிறது. இது சாதாரண விஷயம் அல்ல! இது ஒன்றே போதும். தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் மேல் எந்த நல்லெண்ணமும் வர வாய்ப்பில்லை! இந்தியர்களை இன்னும் கீழ் நோக்கிப் போவதற்கான வேலைகளைத்தான் செயவார்கள்!
நம்மைப் பொறுத்தவரை தேசிய முன்னணி, துணைப்பிரதமர் அமைச்சின் கீழ் இந்தியர் விவகாரங்கள் அமையுமானால் நிச்சயமாக அது இந்தியர்களுக்கு நன்மை பயக்காது. இருப்பதும் கைவிட்டுப் போகும்!
அம்னோ நிச்சயமாக இந்தியர்களைப் பழி வாங்கத்தான் நினைக்கும்! அது சந்தேகமில்லை! ம.இ.கா. எப்போதும் போல கண்டு கொள்ளாது!
இது இந்தியர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையே!
No comments:
Post a Comment